Friday, October 29, 2004

86 வருடங்கள் - II

இரு அணிகளும் இறுதி இன்னிங்ஸில் மோதிக் கொண்டிருக்கட்டும், இவ் விளையாட்டின் சில விதிகளைப் பார்ப்போம்.

- ஒவ்வொரு அணியிலும் தலா 10 வீரர்கள்.
- பந்து வீச்சாளர் ஒருவரே. சூழ்நிலை சரியில்லை என்றால் மாற்றப்படுவார்.
- கிரிக்கெட் 20 - 20 போல ஒரு அணி ஒரு இன்னிங்ஸ் முடித்தவுடன் அடுத்த அணி விளையாட வரும்.
- ஒரு இன்னிங்ஸ் மூன்று வீரர்கள் ஆட்டமிழந்தவுடன் முடிவுக்கு வரும்.
- ஒவ்வொரு வீரரும் மூன்று வாய்ப்புகள் பெறுவார். அவை 'ஸ்ட்ரைக்' என அழைக்கப்படும்.
- 'ஸ்ட்ரைக்'-ஆ இல்லையா என்பதை மட்டையாளர் பின்னால் நிற்கும் நடுவர் முடிவு செய்வார். அவரால் முடிவு செய்ய இயலவில்லை என்றாலோ, அல்லது, எதிரணி விக்கெட்கீப்பர்(catcher) கேட்டாலோ, மூன்றாவது புள்ளியில்(third base) நிற்கும் நடுவர் சொல்வதே இறுதியானது.
- மட்டையாளர் தூக்கி அடித்த பந்தை எதிரணி வீரர் பிடித்தால், மட்டையாளர் ஆட்டமிழப்பார்.
- ஒரு புள்ளியிலிருந்து மற்றொன்றுக்கு செல்வது இரண்டு வகைப்படும் :
1) மட்டையாளர் catch பிடிக்கப்பட்டால் catch பிடித்த பின்புதான், மற்ற புள்ளிகளில் உள்ள வீரர் முன்னேற முடியும்.
2) மட்டையாளர் ஆட்டமிழக்காமல் பந்தை அடித்து விட்டால், அவரும் மற்ற புள்ளிகளில் உள்ள அவரணி வீரர்களும் தங்கள் புள்ளிகளிலிருந்து மற்ற காலியான புள்ளிகளை நோக்கி ஓடலாம். நான்காவது புள்ளியை அடையும் வீரர், அதாவது, சதுரத்தில் ஒரு சுற்று வந்துவிட்டால் அவரும் அவர் அணியும் ஒரு ஓட்டம் பெறுவர். இதனிடையே எதிரணியினர் இவர்கள் புள்ளியில் இல்லாத போது பந்தால் தொட்டுவிட்டால், அந்த வீரர் ஆட்டமிழப்பார்.

படித்துக் கொண்டிருக்கிறீர்கள் என நம்புகிறேன்.

ஆட்டத்திற்கு வருவோம்.

முன்பே Yankees மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றதைப் படித்தோம். அமெரிக்க பேஸ்பால் சரித்திரத்தில் எந்த அணியும் மூன்றில் தோற்று பின் மீதி நான்கையும் வென்றதில்லை. மேற்கொண்டு படிக்கும் முன், இதை நினைவில் கொள்வது நலம்.

Yankees நான்காவது போட்டியில் 4 - 3 ரன்கள் என்ற கணக்கில் முன்னனியில் இருந்தது. Red Sox வீரர் Bill Mueller அடித்த பந்து தரையில் பட்டு எழும்பிச் செல்ல, அதற்குள் Dave Roberts ஒரு சுற்று முடித்து விட, ஆட்ட ஸ்கோர் சமமானது. Yankees இதை எதிர்ப்பார்க்கவில்லை. அரங்க இரசிகர்களும் இப்போது பைத்தியம் பிடித்தது போல் கரகோஷம் செய்ய(போட்டி நடந்தது பாஸ்டனில்), Red Sox வீரர்கள் புது உத்வேகம் பெற்று 'இரண்டில் ஒன்று' என்ற முடிவுக்கு வந்தனர்.

ஆட்ட ஸ்கோர் சமமானதால் 9 இன்னிங்ஸுக்கு மேல் தொடர்ந்தது. ஆட்ட விதிப்படி இனி இரண்டாவதாக ஆட வரும் அணி, சம ஸ்கோரை உடைத்துவிட்டால், வெற்றி பெற்றுவிடும். பாஸ்டன் இரசிகர்கள் இது வரை வேண்டாத தெய்வங்களையெல்லாம் துனைக்கு அழைத்தனர்.

12-வது இன்னிங்ஸ் வரை Yankees-யால் ஓட்டம் எடுக்க இயலவில்லை. இந்த இன்னிங்ஸில் இரண்டாவதாக விளையாட வந்த Red Sox- இன் David Ortiz தன்னை நோக்கி வந்த வேகப்பந்தை தூக்கி அடிக்க அது மைதானத்தை விட்டு வெளியே சென்று இரசிகர்கள் அமரும் இடத்தில் விழுந்தது.

அன்று பாஸ்டன் இரசிகர்களின் உற்சாகக் கூச்சல் New york வரைக் கேட்டிருக்கும்.

Yankees வீரர்களோ இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அடுத்த போட்டியில் வென்று தொடரை எடுத்துக்கொள்ளலாம் என நினைத்தனர். விதி வேறொன்று நினைத்தது. மறு நாள் போட்டியிலும் David Ortiz அணி வெற்றிக்கு உதவினார். இப்போதுதான் Yankees கொஞ்சம் யோசிக்க ஆரம்பித்தனர்.

எனினும் அவர்களுக்கு நம்பிக்கை இருந்தது. காரணம், தொடர் New york நகரத்துக்கு மாறப்போகிறது. இரசிகர் கூட்டம் அவர்கள் பக்கம். வென்று விடலாம். எந்த அணியும் தொடர்ந்து நான்கு வெற்றிகளை எடுக்கப்போவதில்லை.

ஆனால் ஒரு நிகழ்ச்சி Red Sox அணியினரை இறுதி வரை பார்த்து விடுவது என்ற உறுதியைக் கொடுத்தது.

(தொடரும்)

Thursday, October 28, 2004

86 வருடங்கள்

86 வருடங்கள்...

3 தலைமுறைகள் 'ஏன்?' என ஒவ்வொரு அக்டோபர் மாதமும் ஏக்கத்துடன் வானத்தைப் பார்த்துக் கேட்ட கேள்வி. Boston Redsox பேஸ்பால் அணியின் நேற்றைய மகத்தான வெற்றியைத்தான் குறிப்பிடுகிறேன். மேலே செல்வதற்கு முன்...

பேஸ்பால் அமெரிக்காவின் முக்கியமான விளையாட்டுக்களில் ஒன்று. கிரிக்கெட்டின் ஒன்று விட்ட சகோதரன். இரு அணியினருக்கும் தலா 9 இன்னிங்க்ஸ். ஒவ்வொரு இன்னிங்க்ஸிலும் மூன்று வீரர் வரை ஆட்டம் இழக்கலாம். நான்கு புள்ளிகளை(base) ஒரு வீரர் கடந்தால் ஒரு ஓட்டம். கிரிக்கெட்டில் 6 ரன்கள், இங்கே 1 முழு ரன்(Home Run). அப்போது, மற்ற மூன்று புள்ளிகளில் எத்தனை வீரர் இருந்தனரோ அவ்வளவு ஓட்டங்கள்.

அமெரிக்காவில் இந்தியாவைப் போல் மாநில அணிகள் கிடையா. பணம் படைத்தவர்கள் தங்களுக்கு விருப்பமான நகரத்தில் அணி அமைத்துக் கொள்வார்கள். பல மில்லியன் டாலர்கள் வீரர்களுக்கு சம்பளமாகக் கிடைக்கும். இறுதிப் பந்தயங்கள் ஒரு போர்க்களம் போல நடைபெறும். சில அணிகள் பரம எதிரிகளாக மோதுவர்.

Boston Redsox-ம், Newyork Yankees-ம் அவ்வாறான மனநிலை கொண்ட அணிகள். நம் இந்திய, பாகிஸ்தானிய அணி மோதலைப் போன்றவை. சமயங்களில் அடிதடியில் முடியும். Newyork Yankees 27 முறை உலகக் கோப்பையை வென்றுள்ளது(அமெரிக்க/கனடா அணிகள் விளையாடுவதை 'உலகக் கோப்பை' என அழைத்துக் கொள்வர் :) ) . Boston Redsox இறுதியாக வென்றது 1918-ல். Yankees -ம் அதே பகுதியில் இருப்பதால் ஒருவரை வென்றே மற்றவர் அடுத்த சுற்றுக்கு செல்ல இயலும். இதுவரை Yankees கையே மேலோங்கி இருந்தது. இந்த வருடம் வரை.

World Seriesக்குச் செல்லும் போட்டியில் இவ்வருடமும் Yankees -ம், Redsox -ம் மோத ஆரம்பித்தன. மொத்தம் ஏழு போட்டிகள். நான்கு போட்டிகளில் வெல்பவர் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெறுவர். முதல் மூன்றுப் போட்டிகளில் Yankees மிகச் சுலபமாக வென்று, நான்காவது போட்டியிலும் இறுதி இன்னிங்ஸில் மூன்று Redsox வீரர்கள் அவுட் ஆனால் போதும் என்ற நிலையில்தான் 'நமக்கும் மேலே ஒருவரடா' என்ற வரி உண்மையாக ஆரம்பித்தது.

(தொடரும்)

Tuesday, October 05, 2004

ஜெயலலிதா-கரண் தாப்பர்

பத்ரியும், ராஜாவும் மிகச் சரியாக இந்த நேர்காணலில் பெரும்பாலானவர்களின் பார்வையைப் பதிவு செய்திருந்தனர். ஜெயலலிதாவிடம் முதிர்ச்சியை எதிர்பார்ப்பது கலைஞரிடம் 'கடவுள் இருக்கிறார்' என வாக்குமூலம் வாங்குவது போலத்தான். அதைப் பற்றி நான் பேசி இப்பதிவை நிரப்பப் போவதில்லை. என்னுடைய கேள்வியெல்லாம், தாப்பரின் சில கேட்காத/தேவையில்லாத கேள்விகளைப் பற்றித்தான்.

கேட்காத கேள்விகள்
--------------------------
1) ஜெ-வின் அரசு ஊழியர்கள் மீது தொடுத்த அதிரடி நடவடிக்கைகள் பற்றி.
2) அவரின் வளர்ப்பு மகன் திருமணம் பற்றி.
3) பாஜக அரசைக் கவிழ்த்து விட்டு, பின் இந்தத் தேர்தலில் அவர்களுடன் கூட்டு வைத்த முரண்பாடு
4) முக்கியமான தொழில்கள் மற்ற மாநிலங்களுக்கு செல்வது.
இன்னும் பல...

தேவையில்லாத கேள்விகள்
-----------------------
1) சோதிட நம்பிக்கை
2) நல்ல நேரம் பார்ப்பது.
3) ஜெ-வின் பெயரில் ஒரு 'a' சேர்த்தது.

இவர் பேட்டி கண்டது, ஒரு முதலமைச்சரை. தனியொரு பெண்மணியை அல்ல. ஜெ-வும் இவர் பாட்டுக்கு ஆடினார் என்று தான் சொல்லவேண்டும். ஊடகங்கள் ஏன் ஜெ-வின் செயல்களைத் தவறாகப் பார்க்கின்றன என்ற கேள்விகளுக்கு, ஜெ-வின் பதில்கள் சிறு பிள்ளைத்தனமாக(சினிமாத்தனமாக?) இருந்தன. இனிமேல் ஜென்மத்துக்கும் எந்த பேட்டிகளுக்கும் ஒப்புக்கொள்ள மாட்டார்.

ரசித்தது
-------
1) பொறியில் மாட்டிய ஜெ-வை கரண் சீண்டிய விதம்.
2) ஜெ-வின் குறுக்கீடுகளை சட்டை செய்யாமல் கரண் தன் கேள்விகளிலேயே குறியாக இருந்தது.