Tuesday, November 30, 2004

The Dark Art of Interrogation

சுஜாதாவின் இந்த வார 'கற்றதும், பெற்றதும்' பகுதியில் The Dark Art of Interrogation என்ற கட்டுரையைப் பற்றி எழுதியிருந்தார். வலையில் அதை படிக்க http://www.law.washington.edu/courses/junker/B515_Au04/Documents/Dark_Art.pdf

Monday, November 29, 2004

ஒரு மூன்றாம் உலகக் குடிமகனின் அமெரிக்கக் குழப்பங்கள்

- எங்க பக்கத்து நாட்டை கொம்பு சீவி விட்டு,
- உலகப் போலிஸ்காரராக நடந்து கொண்டு,
- எங்க நாட்டு விவகாரத்தில் மூக்கை நுழைத்து,
- உங்க நாட்டுக்கு வர பல கண்டிஷன் போட்டு,
- எங்க நாட்டைப் பற்றி உங்க தொலைக்காட்சியில் தாறுமாறாகப் போட்டு,
- உங்க முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கையை எங்கள் மேல் திணிக்க முயன்று

கொழுத்துக் கொண்டிருக்கும் அமெரிக்க நாடே...

யாருப்பா அது, நாளைக்கு எனக்கு அமெரிக்க தூதரகத்திலே, H1-B விசா இன்டர்வியு, காலையிலே சீக்கிரம் எழுந்திரிக்கணும், அலாரம் வைக்கிறியா?

Monday, November 22, 2004

86 வாருடங்கள் - இறுதிப் பகுதி

கர்ட் ஷில்லிங்(Curt Schilling) என்ற பந்து வீச்சாளர் Red Sox அணியில் இனைந்தபோது, Yankeesஐ வெற்றிக் கொள்வதே எனது இலட்சியம் எனக் கூறினார். அப்போது, யாரும் இவரின் சொல்லை முக்கியமாக எடுத்துக்கொள்ளவில்லை. மேலும், Yankees இவரை இத்தொடரின் முதல் ஆட்டத்தில் மூன்று இன்னிங்ஸிலேயே, 6 ஓட்டங்களைக் குவித்து, உள்ளே அனுப்பிவிட்டனர். மற்றும் வலது முழங்காலில் அடிப்பட்டதால் தொடரில் இனிமேல் இவரால் விளையாட இயலாது என மருத்துவர் திட்டவட்டமாக அறிவித்துவிட்டனர். எந்த காரணத்திற்காக பாஸ்டன் வந்தாரோ அந்தக் கனவு நிறைவேறவில்லை.

ஆறாவது ஆட்டம் துவங்கும் நாளில் செய்திக் கேட்டவர்களுக்கு இனிய ஆச்சரியம். கர்ட் ஷில்லிங் அன்று பந்து வீசப்போவதாக அறிவிப்பு வெளியானது. பாஸ்டன் மக்கள் இன்றோடு தொடர் முடிந்து விடும் என முடிவுக் கட்டினர். ஆனால் பிண்ணனியில் நடந்தது வேறு.

நடக்க முடியாத நிலையில் கர்ட் ஷில்லிங் மருத்துவர்களை அணுகி, தன்னை பந்து வீசும் அளவிற்கு தயார் செய்யும்படி கேட்க மருத்துவர்களும், முழ்ங்காலில் சிதைந்த பகுதிகளை தைத்து எப்படியோ அவரை தயார் படுத்தி விட்டனர். ஆட்டம் ஆரம்பித்ததிலிருந்தே, அவரின் வலது காலிலிருந்து, இரத்தம் உறை வழியே சிந்த ஆரம்பித்தது. இது மேலும் Red Sox வீரர்களை வெறியோடு விளையாட வைத்தது. ஏழு இன்னிங்சில் ஒரு ரன் கூடக் கொடுக்காமல் ஷில்லிங் விடைப் பெற்றப்போது, பேஸ்பால் சரித்திரத்தில் இந்த ஆட்டம் முக்கியமான இடத்தைப் பெற்றது.

இதுவரை தொடர்ந்த Yankeesன் நம்பிக்கை சரிய ஆரம்பித்தது. இரண்டு இன்னிங்ஸில் 2 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. பாஸ்டன் 4 - 2 என்ற கணக்கில் வென்றது. ஏழாவது போட்டியில் Yankeesஐக் காணவில்லை. David Ortiz 2 ரன்களையும் Jonny Damon 4 ரன்களையும் அடித்து ஆட்டத்தை பாஸ்டன் வசம் இழுத்து விட, சரித்திரப் பிரசித்திப் பெற்ற இத்தொடரை 4 - 3 என்ற கணக்கில் பாஸ்டன் வென்றது.

இத்தொடருக்குப் பின் யார் எதிர் அணியானாலும் Red Soxஐ வெற்றிப் பெறுவது சிரமமே. St. Louisக்கும் அதுவே உண்மையானது. உலகக் கோப்பையை பாஸ்டன் 4-0 என்ற கணக்கில் தொடரை வென்று 86 வருடங்களாக மக்கள் கண்ட கனவை நிஜமாக்கியது.

இத்தொடரை எழுத ஆரம்பித்தபோது, கட்டுரையை இன்னும் சரியாக அமைத்திருக்கலாம் என தோன்றியது. ஆனால் மனதில் தோன்றியதை அப்படியே வார்த்தைகளில் எழுதிவிட்டேன். இன்னும் சிறிது காலம் சென்று இந்தப் பதிவைப் படித்தால் மீண்டும் அந்த நாட்களை இனிமையாக நினைக்கத் தோன்றும். இப்பதிவைப் படித்தவர்களுக்கு ஒரு பள்ளிக் கட்டுரையைப் படித்த உணர்வு ஏற்பட்டால், நானே பொறுப்பு!.

Tuesday, November 16, 2004

ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்

தற்சமயம் சி. புஸ்பராஜாவின் 'ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்' படித்துக் கொண்டிருக்கிறேன். இலங்கை இனக் கலவரத்தைப் பற்றி நான் படிக்கும் முதல் புத்தகம். இலங்கைப் பிரச்சனையைப் பொறுத்தவரை நான் பா. ராகவனைப் போலத்தான். இது வரை ஒரு யோக்கியமான கருத்துக்கள் எதையும் படித்ததில்லை. தமிழக அரசியல் கட்சிகளின் சந்தர்ப்பவாதமும், அயோக்கியத்தனமான அரசியல் விளையாட்டுக்களிலும், ஊடகங்களின் விட்டேத்தியான அனுகுமுறையும் இப் பிரச்சினையின் உண்மைகளை வெளிக்கொணர்ந்ததில்லை.

இவ்வகையில் சி. புஸ்பராஜாவின் புத்தகம் என்னளவில் முக்கியமான ஒன்றாகக் கருதுகிறேன். முன்பு படிக்க முயன்ற William McGowan ன் Only Man Is Vile: The Tragedy of Sri Lanka ஒரு மேற்கத்திய எழுத்தாளரின் திமிர்த்தனமான பார்வையில் இருந்ததால், பாதிக்கு மேல் அப்புத்தகத்தை படிக்க இயலாமல் தூக்கி எறிந்துவிட்டேன். அனிதா ப்ரதாப் எழுதிய Island of Blood: Frontline Reports from Sri Lanka, Afghanistan and Other South Asian Flashpoints புத்தகமும் சொந்த கதை பேசி ஆயாசம் கொள்ளவைத்தது.

நான் படித்தவரை, சி. புஸ்பராஜா வரலாற்றை மிகத் தெளிவான முறையில் எழுதிச் சென்றுள்ளார். படித்து முடித்த பின்பு பல கேள்விகள் எழும். அப்போது விரிவாக எழுதுவேன்.

இவரைப் போன்று மற்றவர்களும் தங்கள் பார்வையைப் பதிவு செய்துள்ளனரா? அவை பற்றிய விவரங்களைத் நண்பர்கள் தந்தால், உதவிகரமாக இருக்கும்.