Friday, January 28, 2005

நலமா?

கொஞ்ச நாட்களாக எழுதத் தோன்றவில்லை. நிச்சயம் உலகத்துக்கு நஷ்டமில்லை. அலுவலகமும், வீட்டில் என் நான்கு மாத மகளும், படிக்கவேண்டிய புத்தகங்களும் நேரத்தை நிறைத்து விடுகிறார்கள். படிக்க வேண்டிய வலைப் பதிவுகளைத் தவற விடுவதில்லை. ஓய்ந்த நேரத்தில் ராஜ் கௌதமனின் 'சிலுவைராஜ் சரித்திரம்' படித்துக் கொண்டிருக்கிறேன். போதாக்குறைக்கு, ஞாயிற்றுக்கிழமைகளில், New England Patriots விளையாடும் ஆட்டங்கள் தவறாமல் - மனைவியின் 'உருப்படமாட்டே' என்ற ஆசிர்வாதத்துடன் - நேரத்தை அபகரிக்கின்றன.

பத்ரியின் வலைப்பதிவு சிறந்தப் பதிவாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள். இவரின் புத்தகக் கண்காட்சி வருணனைகள் அருமை. அன்னாரின் பல பதிவுகளை தொகுத்துப் புத்தகமாகப் போடலாம்(பத்ரி: என்னுடையதுதான் முதல் யோசனை என்றால் எனக்கு 40% ராயல்டி தரவேண்டும் :) ).

'மூக்கு' சுந்தர் இந்த வார நட்சத்திரம். 'கிரீடப் பதிவு' என ஒன்றை தேர்ந்தெடுத்து, பதிந்தது நல்ல யோசனை. கொஞ்ச நாள் தமிழ்( தண்ட) திரைக்காவியங்களை மூட்டைக் கட்டிவிட்டு பல நிகழ்வுகளை அவரின் சூடான பாணியில் தர பணிவுடன் வேண்டுகிறேன்(எனக்கு டின் கட்டப் போறாரு :) ). சமீபத்தில், இவரின் பழையப் பதிவான 'இந்திய அமைதிபடை' பற்றிய பதிவில் சுமார் 136 பின்னூட்டங்களைப் படித்தது, பல வகையான சிந்தனைகளைக் கிளப்பியது.

ஈழநாதனின் பழையக் கட்டுரைகளைப் படித்துக் கொண்டிருக்கின்றேன். மனிதர் தொடாத விஷயங்கள் இல்லை. தொடர்க. ரோசா வசந்தின் கட்டுரைகள், பல ஆரோக்கியமான வாதங்களை எழுப்புகின்றன. சுனாமி தொடர்பாக ரஜினி ராம்கியின் உதவிகள், நேர்முகக் குறிப்புகள் நெகிழ்த்தின.

யாருப்பா சொன்னது வலைப்பதிவுகள் எல்லாம் '15 நிமிடப் புகழ்' என்று?

திண்னையில் ஞாநி, இனி தன் கட்டுரைகள் வரா எனக் கண்டிப்பாகக் கூறிவிட்டார். என் கருத்தில் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுவிட்டார். எழுத்தாளர்கள் பொதுவில் எழுதும்போது, எதிர்வினை(கள்) வரத்தான் செய்யும். ஒருவர் தன்னை தவறாகப் புரிந்த்தற்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றால், தினமும் ஒவ்வொருவரும் மற்றவரிடம் மன்னிப்புக் கேட்பதற்கு மட்டுமே நேரம் சரியாக இருக்கும். திண்ணை ஒரு திறந்தப் மின் பத்திரிக்கை. இதில் ஞாநியும் மற்றவர்களும் ஆரோக்கியமாக வாதம் புரிந்து நட்புடன் முடித்திருக்கலாம். இஸ்லாமிய கொள்கைகள் தொடர்பாக நீண்ட நாட்களாக நேசகுமாரும் இஸ்லாமிய நண்பர்களும் முடிந்த வரை மரியாதையாகத்தான் விவாதம் நடத்துகிறார்கள்(என்று நினைக்கிறேன்).

இப்போதைக்கு அவ்வளவுதான். இனியாவது, வாரத்துக்கு ஒரு முறை பதிவு செய்ய ஆசை.