Thursday, May 19, 2005

ஸ்டார் வார்ஸ்-3

அலுவலக நண்பர்கள் புண்ணியத்தில் இன்று மதியமே "ஸ்டார் வார்ஸ் 3" படம் பார்க்க முடிந்தது. அலுவலக தோழர் டேவிட் இரவு 12 மணி முதல் திரையிடலைப் பார்த்துவிட்டு மீண்டும் மதிய ஆட்டம் பார்க்க வந்திருந்தார்(ரஜினி ரசிகர்களுக்கு சரியான போட்டி).

"ஸ்டார் வார்ஸ்" வரிசையில் லூகாசுக்கு இதுவே இறுதிப் படம்(மற்ற எவருக்கும் இந்த அளவு பிரம்மாண்டம் எடுக்க துணிவு இருக்கும் என தோன்றவில்லை). படம் அனகின் ஸ்கைவாக்கர் எவ்வாறு தீயசக்திகளின் பக்கம் சாய்ந்து 'டார்த் வேதர்' ஆனான் என்பதை சொல்கிறது.

1977-ல் இப்படத்தின் முதல் பகுதி வந்தபோது, உலகமே பைத்தியம் பிடித்து அலைந்தது. கதை என்னவோ ரொம்ப சாதாரணம்தான். கொடுங்கோலரசரை வீழ்த்த புரட்சிக் குழுக்கள் முயல்கின்றன. அவர்களுக்கு உண்டாகும் அனுபவங்கள் மூன்று படங்களாக 1983 வரை வந்தன.

படத்தின் உயிர் நாடி "டார்த் வேதர்" எனும் வில்லன். இவனின் உருவ அமைப்பு நடுங்க வைக்கும் என்றால், குரலோ கேட்பவரைச் சில்லிட வைக்கும்(குரல் கொடுத்தது ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ்). இவனுக்கும் கதை நாயகனான லூக் ஸ்கைவாக்கருக்கும்(ஆம்...இவன் டார்த்தின் மகன் தான்) நடக்கும் யுத்தம்தான் படத்தின் முக்கிய காட்சிகள்.

பிரம்மாண்டம் என்பதற்கு அர்த்தம் கொடுத்தவை ஸ்டார் வார்ஸ்தான். நகைமுரண் என்னவென்றால், முதல் படத்தைப் பார்த்த வினியோகஸ்தர்கள் 'இது உருப்படாது' என முடிவு செய்ய, அங்கிருந்த ஸ்பீல்பர்க் மட்டும் இது ஹாலிவுடின் திருப்புமுனைப் படம் என சரியாகக் கணித்தார். இப்படங்களுக்கு லூகாஸ் பட்ட சிரமங்களை ஒரு பெரியப் புத்தகமாகப் போடலாம்.

1983க்குப் பிறகு லூகாஸ் "டார்த் வேதர்" கதையை எடுக்கத் திட்டமிட்டார். 1997-ல் முதல் படம் வந்தது. அதில் ஆனகின் ஒரு பொடியனாக பல சாதனைகளைச் செய்து, பெரிய வீரனாவதற்கு அடிப் போடுகிறான். இரண்டாவது படத்தில் இராணி 'பட்மே'வின் மனதில் இடம் பிடித்து 'ஜெடாய்' எனும் சிறப்பு வீரனாகிறான்.

இன்று(19 மே) வெளிவந்திருப்பது வரிசையில் இறுதி. முதல் 20 நிமிடங்கள் நடக்கும் போரில் கடத்தப்பட்ட ஜனாதிபதியை ஆனகினும், அவனது குருவான 'கெனோபி'யும் மீட்கின்றனர். நாடு திரும்பும் ஆனகின் தான் தந்தையாகப் போவதை அறிகிறான. அந் நிலையில் அவன் காணும் கனவில் அவன் காதலி பிள்ளைப் பேற்றின்போது உயிர் துறப்பதை அறிகிறான். ஏற்கெனவே, அவனது அன்னை விஷயத்தில் அவன் கண்ட கனவு நடந்ததால் இது அவனுக்கு மிக்க அச்சத்தைக் கொடுக்கிறது. எப்படியாவது தன் காதலியைக் காப்பாற்றத் துடிப்பதை ஜனாதிபதி உபயோகப் படுத்திக் கொள்கிறார். அவனது குருவோ அவனைக் காப்பாற்ற முயல்கிறார். முடிவு தெரிந்த ஒன்றுதான் என்றாலும், வெள்ளித் திரையில் காண்க.

ஆரம்பத்திலிருந்து இறுதி வரை, மூச்சை நிறுத்துமளவிற்கு பிரம்மாண்டம். போர்க் கப்பல்கள் ஆகட்டும், நகரங்கள் ஆகட்டும், எடுத்துக் கொண்டப் பாத்திரங்கள் ஆகட்டும், இணை சொல்ல முடியாத அளவில் இப் படத்தைச் செதுக்கியிருக்கிறார்கள். ஆனால் இள "டார்த் வேதர்" ஆக நடித்திருக்கும் ஹேய்டன் கிரிஸ்டன்சென் ஏமாற்றம் அளிக்கிறார். சரியான தேர்வு இல்லை. இதையெல்லாம் கண்டுக்காதீங்க என படத்தின் கதையமைப்பும், காட்சிகளும் நம்மை உட்கார வைத்து விடுகின்றன.

தவற விடக்கூடாத படம்.