Wednesday, September 29, 2004

வரலாறு - செய்திதாள்கள் வழியே

From Beirut to Jerusalem படித்தவர்களுக்கு Tom Friedman-ஐ தெரிந்திருக்கும். 1983-ல் மத்திய கிழக்கு நாடுகளின் நிகழ்வுகளைப் பதிவு செய்தமையைப் பாராட்டி புலிட்ஸர் விருது இவருக்கு வழங்கப்பட்டது. இவரின் அனைத்துக் கட்டுரைகளும் The New york Times-ல் எழுதப்பட்டன. ரொம்ப நாளாக அவைகளைப் படிக்க வேண்டும் என நினைத்திருந்தேன். The New york Times-ல் பழைய இதழ்களைப் படிக்க சொத்தையே எழுதி வைக்கச் சொன்னார்கள்.

அச்சமயத்தில், பாஸ்டன் பொது நூலகத்தினர் கும்பிடப் போன தெய்வம் போல குறுக்கே வந்தனர். நான் இந்நூலகத்தில் ஒர் அங்கத்தினர்(இங்கே உள்ள தமிழ் புத்தகங்கள் பகுதியைப் பார்த்து, இரத்தக்கொதிப்பு ஏறியதைப் பற்றி பின்பு). அவர்களை கணினி மூலம் தொடர்புக் கொண்டுக் கேட்டப்போது, அடுத்த 5 நிமிடங்களில் எனக்கு ஏறத்தாழ 200 வருடத்திய The New york Times மின் படிமங்களைக் கொடுத்து விட்டனர்-இலவசமாக. அற்புதமான வரலாற்றுப் பதிவுகள். Tom Friedman கட்டுரைகளை முடித்த பின்பு இரண்டாம் உலகப் போரைப் ப்ற்றி என்ன எழுதியுள்ளனர் என்பதைப் படிக்க வேண்டும்.

இந்தியாவில் இது போல் The Hindu, Indian Express, சுதேசமித்திரன், தினம்ணி போன்ற பத்திரிக்கைகளை நூலகங்கள் சேகரித்து வைத்துள்ளனவா?

Monday, September 06, 2004

நன்றி இளையராஜா-III, இறுதிப் பகுதி

இளையராஜாவின் Nothing But Wind-ம் பெரும்பாலான மக்களைச் சென்றடையவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். எந்த மக்களைச் சென்றடைய வேண்டும் என்று நினைக்கிறோமோ, அமம்க்களுக்கு முதலில் புரியும் வண்ணம் விளம்பரப்படுத்த வேண்டும். நான் பாரிஸில் ஒர் இசைத் தட்டுக்கள் விற்பனை நிலையத்திற்க்கு சென்ற போது, அங்கு விற்கும் இசைத் தட்டுக்களைப் பற்றிய விவரங்கள் அனைத்தும் பிரெஞ்ச் மொழியில் அச்சிடப்பட்டிருந்தன(Michael Jackson, U2 உள்பட). உலகமறிந்த பாடகர்களின் இசைத்தட்டு விவரங்கள் ஆங்கிலத்தில் இருந்தாலும் மக்கள் வாங்கியிருப்பர். ஆனாலும் மக்களை மதித்து, அம்மொழியில் தகவல்களைப் பரிமாறுவது, மேலும் மக்களை ஈடுபட வைக்கும்.

இளையராஜாவின் இசைப்பயணம் உச்சத்தை அடைந்தது Royal Philharmonic Society-ல் அவர் இயற்றிய Symphony. How to Name it மற்றும் Nothing But Wind ஒரு வகையில் Concerto வகையைச் சேர்ந்தவை(அன்பர்கள் கவனத்திற்கு, Concerto என்று நான் சொல்வது, ஒரு வகையான குறிப்பிடலுக்கே. மேற்கத்திய இசை வல்லுனர்கள், என் பார்வையை மறுக்கலாம்.). Symphony அதன் அண்ணா. தலையைப் பிய்த்துக் கொள்ள வைக்கும் ராக சிக்கல்களில் திளைப்பது ஒரு தனி அனுபவம். Beethoven இன் 9 சிம்பொனிகளையும் கேட்டிருக்கிறேன். கேட்டுக் கொண்டிருக்கிறேன். ஒவ்வோர் முறையும் புதிது புதிதான இசைப் பாதைகள் தெரிகின்றன.

Symphony முயற்சிக்குப் பிறகு, ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமானது. அதை இளையராஜாவால் பூர்த்தி செய்ய முடிந்ததா என்றால் என்னைப் பொறுத்தவரை, இல்லை. காரணம், இத்தகைய symphony-யை எழுதும் ஒரு இசையமைப்பாளரின் மனம் மீண்டும் திரை இசையமைக்க முயல்வது, நீர் மூழ்கி கப்பலை, வாய்க்காலில் ஓட்டுவது போலத்தான்.

அதற்காக இவர் இசை சிறப்பாக இல்லை என பொருள் கொள்ளவிலலை. எதிர்பார்ப்பு அதிகமானது என்றுதான் நினைக்கிறேன். எழுத்தாளர் சுஜாதாவையும் இது போல் பலர் கேட்டிருக்கின்றனர். அவர் கூறியபடி, அவர் மாறவில்லை. இசையை எதிர்பார்க்கும் என்னைப் போன்றோர் மாறிவிட்டனர்.

ஆனால் இவரின் பிண்ணனி இசை பல உயரங்களைத் தொட்டது. அதே சமயம், ஏ. ஆர். ரகுமானின் ஆர்ப்பார்ட்டமான இசை, திரையுலகை ஆக்கிரமிக்க துவங்கியது. மணிரத்னம், பாரதிராஜா மற்றும் பல திரை வல்லுநர்கள்-இவரின் நாடித்துடிப்பை அறிந்தவர்கள்-இவரை விட்டு விலக ஆரம்பித்தனர்(பாலு மகேந்திரா விதிவிலக்கு).

இவர் ஆரம்பித்த காலங்களில் மக்கள் மாற்றத்தை விரும்பியது போல, இப்போதும் விரும்பினார்கள். இதை நான் சொல்வதால் இளையராஜாவின் சகாப்தம் முடிந்து விட்டது என்று அர்த்தமல்ல. ஓட்டப்பந்தயத்தில், இன்னொரு போட்டியாளர் முன்னணியில் இருப்பவரை நெருங்குவதைப் போலத்தான்.

1996 அழகிப் போட்டிக்கு இவர் இசையமைத்தது, 51வது சுதந்திர தின நிகழ்ச்சியை நடத்தியது என திரைக்கு வெளியே இவரது சாம்ராஜ்யம் விரிகிறது. இப்போது திருவாசக சிம்பொனி வரை வந்துள்ளது. இன்னும் வரும் என நம்புகிறேன்.

என் தாழ்மையான அபிப்பிராயத்தில், இவரின் கட்டுக்கடங்கா திறமையை, திரைப் படங்களோடு நிறுத்துவது நல்லதல்ல. மக்களின் ரசணையை, இந்திய முறை சங்கீதத்தை, அனைவரும்(இந்தியர், மற்றும் அயலர்) ரசிக்கும் வண்ணம்(Enya, Celtic Music கலைஞர்கள் போல) எடுத்துச் சொல்ல இளையராஜாவை விட தகுதியானவர் என் சிற்றறிவுக்குத் தெரியவில்லை.

(முற்றும்)

பின் குறிப்பு: இக் கட்டுரையை என் பார்வையில் இளையராஜாவின் இசை எவ்வாறு இரண்டு தலைமுறைகளைப் பாதித்தது என்பதை முடிந்த வரை உணர்ச்சிவயப்படாமல் பதிவு செய்ய முயன்றேன். பல முக்கியமான தகவல்கள் விடுப்பட்டிருக்கலாம். மன்னிக்க வேண்டுகிறேன்.

பல விவரங்களை, பத்திரிக்கைகளில் நீங்கள் படித்திருக்கலாம். அவையெல்லாம் மீண்டும் எழுதி சுவையற்றதாக ஆக்க விரும்பவில்லை. இளையராஜாவின் இசை சரித்திரத்தில் என் கட்டுரை ஒரு புள்ளி மட்டுமே.

இப் பகுதியை படித்து, கருத்துக்களும், ஊக்கமும்(ராஜ்குமார், ராசா மற்றும் பலர்) தந்த அன்பர்களுக்கு என் நன்றி.

Saturday, September 04, 2004

படித்துக் கொண்டிருக்கும் புத்தகம்

கொஞ்ச நாளாக வலைப்பூவில் உள்ளிட இயலவில்லை (வீட்டில் வரப்போகும் குழந்தைக்காக அறையை தயார் செய்துக்கொண்டிருக்கிறோம்). தற்பொது படித்துக் கொண்டிருக்கும் Richard Clark எழுதிய Against All Enemiesஐ பற்றி சில வரிகள் எழுதலாம் என்று இருக்கிறேன்.