Sunday, July 27, 2008

Missing

இளமையில் இறப்பது கொடியது. அதிலும் பெற்றோர் மகனையோ, மகளையோ இழப்பது அதனினும் கொடியது. இறந்த மகன்/மகள் இயற்கையாக இறக்காமல் விபத்தில் அல்லது கொடூரமாக சிதைக்கப்பட்டு இறப்பது...


'பிறவி' திரைப்படம், ஈச்சுர வாரியாரின் 'ஒரு தந்தையின் நினைவுக் குறிப்புகள்' புத்தகம் மேற்கண்ட வலியைப் பேசும் சில உதாரணங்கள். தமிழ்த் திரைப்படங்கள் இதை இயல்பாகக் கையாண்டதில்லை (அதிலும் சிவாஜியை நடிக்க வைத்து பார்ப்பவர்களைக் கொடுமைப் படுத்துவார்கள்).


Missing என்ற ஆங்கிலப் படம் காணாமல் போன ஒரு நிருபரை (சார்லி) அவனின் மனைவியும், தந்தையும் தேடும் கதை. சாரு நிவேதிதா 'கலகம், காதல், இசை' புத்தகத்தில் 'விக்தர் ஹொரா' என்ற சிலே பாடகரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியிருப்பார் (அவரின் 'திரிலோக்புரி' என்ற தரமான கதையோடு இந்த வாழ்க்கை வரலாறும் அனுபவித்து வலியுடன் எழுதப்பட்டிருக்கும்).


விக்தர் சிலேயில் 'பினோசெட்' என்ற இராணுவ ஜெனரல் பதிவிக்கு சி.ஐ.எ துனையோடு வந்தபோது கொல்லப்பட்டவரில் ஒருவர். Missing கதையும் சார்லி அவ்வாறு சிலே அரசாங்கத்தால் கொல்லப்பட்டதை விவரிக்கிறது.
சார்லி சிலேயில் தன் மனைவியுடன் தங்கி ஒரு இடது சாரி பத்திரிகையில் எழுதுபவன். Vina என்ற இடத்திற்கு ஒரு நாள் சுற்றுப் பயணம் செல்கையில் பினோசெட்-இன் படைகள் அந்த இடத்திலிருந்து கலகத்தை ஆரம்பிக்கின்றன. அங்கு தங்கியிருக்கும் சில அமெரிக்க அதிகாரிகளிடம் பேசுகையில் அவனுக்கு அவர்களின் பங்குகள் குறித்து சந்தேகங்கள் வர ஆரம்பிக்கின்றன. பல அப்பாவி மக்கள் கலகக் குண்டர்களால் கொல்லப்படுவதை காண்கிறான். அமெரிக்கர்கள் மூலமாக கலகப் படைகளின் பார்வை இவன் மீது படிகிறது.


மீண்டும் தன் மனைவி(பெத்) இருக்கும் இடம் வந்த மறுநாள் காணாமல் போகிறான். அவனின் தந்தை (எட்வர்ட்) சிலே வருகிறார். இவர் மிகத் தீவிரமான கிறித்தவர். தன் மகன் மற்றும் மருமகளின் சுதந்திர மனோபவத்தை எதிர்ப்பவர். தன் மகன் ஒன்றுக்கும் இலாயகில்லாதவன், அவனின் மனைவியும் அவ்வாறே என்று நினைப்பவர். சிலேயில் வந்ததிதிலிருந்து அவருக்கும் பெத்-ற்கும் தகராறு. பெத் இவரின் வருகையை வெறுக்கிறாள். 'எதற்காக வந்து என் உயிரை வாங்குகிறாய்?' என்று முகத்தில் அறைவது போலக் கேட்கிறாள்.


எட்வர்ட் சந்திக்கும் அமெரிக்க தூதரக அதிகாரிகள் விரைவில் மீட்டுவிடலாம் என உறுதி அளிக்கிறார்கள். ஆனால் நாட்கள் செல்ல செல்ல அது வடிக்கட்டிய பொய் என எட்வர்டிற்கு புரிகிறது. பெத் எட்வர்ட் வருவதற்கு முன்பே பல முயற்சிகள் மூலம் அந்த முடிவிற்கு வருகிறாள்.


இதனிடையில் அவருக்கு பெத்துடன் நல்லுறவு மலர்கிறது. முதல் முறையாக அவளின் போராடும் குணமறிந்து மதிக்கிறார். அமெரிக்க வாழ்க்கையைத் தவிர வேறு உலகங்களும் இருக்கின்றன என்பது புரிகிறது.


பல தொடர்புகள் மூலம் அவர் மகன் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டான் என்று தெரிய வருக்கிறது. அதிலும் எட்வர்ட் ஆழ்ந்த நம்பிக்கை வைத்திருக்கும் அமெரிக்க அரசாங்கம் இதற்கு உடந்தை என்றும் அறிகிறார்.


உடைந்த மனதுடன் பெத்தும், எட்வர்டும் ஊர் திரும்பி கிசிங்ஜர் உட்பட ஏழு அரசாங்க அதிகாரிகள் மீது வழக்கு தொடர்கிறார்கள். போதிய ஆதாரமின்மையால் தோல்வியுறுகிறது.


சார்லியின் உடல் ஏழு மாதங்கள் கழித்து அமெரிககா திரும்புகிறது (உடல் பரிசோதனை நடந்தாலும் எவ்வாறு இறந்தான் என்பதை அறிய முடியாத வண்ணம்).


இது உண்மைக் கதை. சார்லி தான் கண்டதை, கேட்டதை குறிப்புகளாக எடுத்து வைத்திருந்தார். அதை அடிப்படையாக வைத்து புத்தகம் பின் திரைப்படமாக உருவெடுத்தது. திரைப்படத்தில் சிலே நாட்டின் பெயர் வருவதில்லை. படம் வந்த வருடம் 1982. பினோசெட் பதவியில் இருந்தார். ஆனால் பல காட்சிகள் வழியே மறைமுகமாக சொல்லப்பட்டுவிடுகிறது.


திறமையான இயக்கத்தில் (Costa Gavras எனற கிரிஸ் நட்டு இயக்குனர்.) கலகக்காரர்களின் இரும்புப் பிடி நாஜி ஜெர்மனியை நினைவூட்டுகிறது. நடு வீதியில் நடக்கும் படுகொலைகள், இளைநர்களைப் பிடித்து மொத்தமாக தீர்த்துக்கட்டுவது, ஆள் மறைவு போன்றவை திறமையான காட்சிகள் மூலம் இயக்குனர் காட்டுகிறார் குறிப்பாக:

a) சார்லி, மற்றும் பெத் இருவரும் ஊரடங்கு உத்தரவுக்குப் பின் தனியே தெருவில் மாட்டிக்கொள்வது,.

b) பெத் மற்றும் எட்வர்ட் பிணக்கிடங்கில் தேடும்போது அந்த அதிகாரி சலனமே இல்லாமல் ஒவ்வொரு அறையிலும் உள்ள நூற்றுக்கணக்கான சடலங்களை எது அடையாளம் காணப்பட்டது எது காணப்படவில்லை என விவரிப்பது.


ஒரு இடத்தில் எட்வர்ட் நடக்கும் வன்முறைகளைக் காணச் சகிக்காமல் 'What part of world is this?' என்பார்.


இன்று இலங்கையிலும், மோடியின் குஜராத்திலும் கேட்க வேண்டிய கேள்வியும் கூட.


பின் குறிப்பு: இந்தப் படத்தின் முழுத்தாக்கத்தையும் பெற முன் குறிப்பிட்ட சாரு-வின் கட்டுரையைப் படிப்பது நல்லது.