Thursday, March 24, 2005

கருணைக் கொலை

ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள ஒரு மருத்துவமனையை ஒட்டுமொத்த அமெரிக்காவே உற்று கவனித்துக் கொண்டிருக்கிறது. டெரி ஷியாவோ( Terri Schiavo) என்ற பெண்மணி கடந்த 15 வருடங்களாக மூளை செயலிழந்து போராடிக் கொண்டிருக்கிறார். அவரை மருத்துவர்கள் persistent vegetative state என்ற நிலையை அடைந்து விட்டதால் அவர் இனி உயிர் பிழைத்து நலமடைய வாய்ப்பே இல்லை என தெரிவித்து விட்டனர்.

டெரியின் நிலைக்குக் காரணம், 15 வருடங்களுக்கு முன் அவருக்கு பொட்டாசியம் குறைவாக இருப்பதாகத் தவறாகக் கணிக்கப்பட்டு, சிகிச்சையின் விளைவாக மாரடைப்பு நிகழ்ந்து, மூளையைப் பாதித்தது. அன்றிலிருந்து அவருக்கு எல்லாமே குழாய்கள் வழியேதான் - உணவு, தண்ணீர் அனைத்தும். பல சிகிச்சைகள் புரிந்தும் பலன் இல்லை.

டெரியின் கணவர் மைக், இதைக் காட்டிலும், 'கருணைக் கொலை'க்குத் தான் தயாராக இருப்பதாகவும், அதை தன் மனைவியும் ஒப்புக்கொள்வார் என அறிவித்து, அதை நீதிமன்றங்களிலும் தாக்கல் செய்தார். அவர் அமர்த்திய மருத்துவர்களும், மற்றும் டெரியை சோதித்த மற்ற மருத்துவர்களும் அதையே வழிமொழிகின்றனர். நீதிமன்றமும் குழாய்களை அகற்ற சம்மதித்து உத்தரவிட்டது.

ஆனால், டெரி வழி உறவினர்கள்(தாய், தந்தை மற்றும் பலர்) ஓப்புக் கொள்ள மறுத்து மேல் முறையீடு செய்ய, நீதிமன்றம், அவர்களின் முறையீட்டை மறுத்துவிட்டது.

மார்ச்- 18 ம் தினம் குழாய்கள் அகற்றப்பட்டு, டெரி தற்சமயம் எந்த உணவுப் பொருளும் இன்றி, அவரின் உயிர் சிறிது சிறிதாக வெளியேறிக் கொண்டிருக்கிறது.

அமெரிக்காவை இந் நிகழ்வு இரண்டாகப் பிரித்திருக்கிறது. Persistent vegetative state அடைந்தவர் இவ்வாறு துண்பப்படுவதை விட அவரை உயிர் துறக்க வைக்கலாம் என ஒரு அணியும் மற்ற அணி, இது கொலைக்கு ஈடானது எனவும் வாதாடுகின்றன.

டெரியின் பெற்றோர் எடுத்த படங்களில், டெரி கண்களை சுழற்றிப் பார்ப்பது, புன்னகை செய்வதும் தெரிகின்றன. அதை வைத்து, அவர்கள் அமர்த்திய மருத்துவர்கள், தகுந்த சிகிச்சையில் பிழைக்க வாய்ப்பு இருப்பதாகக் கருதுகிறனர். ஆனால் மற்ற மருத்துவர்களோ, இந்நிலையில் இருப்பவர்கள் தான் என்ன செய்கிறோம் என்பதையே அறியாதவர்களாக இருப்பார்கள், மேலும், அந்த படப்பிடிப்பில், மொத்தம் மூன்று மணி நேரத்தில் டெரியின் செயல்கள் சில விநாடிகளே என பதில் வாதம் புரிகின்றனர்.

அவர்கள் கருத்துப் படி, டெரிக்கு தற்சமயம் உணர்வு என்ற நிலையே இல்லை. அவருக்கு, வலி, கிலி, மகிழ்ச்சி, சோகம், தொடு உணர்வு அனைத்தும் அகன்றுவிட்டன. உணவு செலுத்தவில்லையென்றால், நாம் உணர்வது போல் பசியோ, தாகமோ எடுத்தாலும், அவரால் அதை உணர்வு பூர்வமாக அறிய இயலாது. அவரின் உடல், இதனால், நீரிழந்து, அவரின் சிறுநீரகங்கள் செயல் இழந்து சிறிது சிறிதாக உயிர் இழப்பார்-ஆனால் வலி என்ற உணர்வின்றி- என மருத்துவர்கள் கருதுகின்றனர்.

ஃப்ளோரிடா மாகாண ஆளுநர் ஜெப் புஷ் குழாய்களை அகற்றுவது தவறு என சட்டம் இயற்ற, நீதி மன்றமோ அச் சட்டம் செல்லாது என தடை செய்துவிட்டது. டெரியின் பெற்றோரும், தற்சமயம் அரசாங்கத்தையே நம்பி இருக்கின்றனர்.

அமெரிக்காவில் உயிலில் ஒருவர், இம் மாதிரி தனக்கு நிகழ்ந்தால் மற்றவர் என்ன செய்யலாம் என எழுதி வைக்கலாம். டெரி அவ்வாறு எழுதவில்லை. அவரின் கணவர் மைக் அவரின் காப்பாளர்(Guardian) நிலையில் இருப்பதால் நீதிமன்றம் அவரின் முடிவை ஆதரிக்கிறது. இவ்வழக்கின் விளைவால், பல அமெரிக்கர்கள் உயில் எழுத ஆரம்பித்து விட்டனர்.

அமெரிக்க அதிபர், டெரியின் வாழ்வை நீட்டிப்பதை ஆதரித்திருக்கிறார். ஆனால் நீதிமன்ற முடிவைப் பற்றி எதுவும் கூறவில்லை.

டெரிக்கும், அவரின் குடும்பத்தாருக்கும் நம் பிரார்த்தனைகள்.

வலைப்பதிவுகள்:
http://civilliberty.about.com/cs/humaneuthinasia/a/bgTerry.htm
http://abcnews.go.com/Health/Schiavo/story?id=531907&page=1
http://www.cnn.com/2005/LAW/03/18/schiavo.brain-damaged/