Thursday, August 26, 2004

வலைப்பூக்கள் - 15 நிமிட புகழா?

வலைப்பூக்களைப் பற்றி சுஜாதாவின் கருத்து வலைப்பூக்கள் எழுத்தாளர்களிடையே தீவிரமாக அலசப்பட்டு வருகிறது. வலைப்பூ பதிப்பவன், படிப்பவன் என்ற முறையில் என்னுடைய கருத்துக்கள்:

வலைப்பூக்கள் ஒருவருக்கு diary போல இருக்கிறது. அவரவர் கருத்துக்கள் பதியப்படுகின்றன. ஆரம்பக்காலங்களில் அவர்களின் கருத்துக்களை மற்றவருக்கு பரிமாறுவதில் ஆர்வம் இருந்து, அறை கூவியிருக்கலாம். இதைப் பற்றி பாரா கூட தன்னுடைய 9 கட்டளைகளில் ஒன்றாக, நகைச்சுவையாக, செய்யாதீர்கள் என அறிவுறுத்தியிருப்பார்.

வலைப்பூக்கள் பரிணாம வளர்ச்சி பெற பெற அதன் முகமும் மாற ஆரம்பித்தன. 'சொந்த கதை சோகக் கதை' மட்டும் இல்லாமல், தங்கள் துறை, ஆர்வம் சார்ந்த பகுதிகளைக் குறித்து விரிவாக செய்திகளைப் பரிமாற ஆரம்பித்தார்கள். இது தான் என்னைக் கவர்ந்த மிகப் பெரிய அம்சம் என்பேன். இலக்கியம், மார்க்கெட்டிங், விளையாட்டு, சிறுகதை, கவிதை, ஆராய்ச்சி, சரித்திரம் போன்ற பல துறைஞர்களின் கருத்துக்கள் வலைப்பூக்கள் மூலமாகக் கிடைக்கின்றன. ஆரோக்கியமான விவாதங்கள், பரிமாற்றங்கள், நகைச்சுவைகள் போன்றவை எளிதாக உலகத்துக்கு அளிக்க முடிகிறது. நிச்சயம் இதில் 15 நிமிட புகழ் இல்லை.

பின்வருபவை நான் வழக்கமாக செல்லும் வலைப்பூக்கள். இதில் எவர்க்கும் முன்னுரிமையோ அல்லது மற்ற வலைப்பூக்கள் தரமாக இல்லை என்றோ அர்த்தம் இல்லை. எனக்கு தெரிந்தவைகளையே நான் பட்டியல் இட்டுள்ளேன்(வரிசைகள் தரத்தை நிர்ணயிக்கவில்லை, தரவரிசை, படிப்பவர் சுதந்திரம்):

-சாரு நிவேதிதா: விகடன் 'கோணல் பக்கங்கள்' பகுதியிலிருந்தே, இவரை எனக்குப் பிடிக்கும். தான் கொண்டுள்ள சிக்கலான கருத்துக்கள், லத்தீன் அமெரிக்க இலக்கியம், சமூகம் பற்றிய முரண்பாடான கருத்துக்கள் போன்றவற்றை தயங்காமல் பரிமாறிக்கொள்பவர். .

-பாரா: சாரு நெருப்பு என்றால், இவர் குளிர். எந்தக் கருத்தையும் ஆணித்தரமாக, அதே சமயம் அடக்கமாக, நகைச்சுவையாக எடுத்து வைப்பதில் கில்லாடி.

-பத்ரி:அரசியல், விளையாட்டு, நாட்டு நடப்பு, அறிவியல் கட்டுரைகள் இவரது ஸ்பெஷாலிட்டி. தீர்க்கமாக ஆராய்பவர்.

-ராஜ்குமார்:கவிதைகள் இவரது பலம். இவரது 'குசேலர் நண்பர்' பற்றியக் கவிதை எனக்குப் பிடித்த ஒன்று.

-பி.கே. சிவக்குமார்: திண்ணையில் இவர் கட்டுரைகள் நிறையப் படித்திருக்கிறேன். நாட்டு நடப்பு இவரது திறமை.

-அருண் வைத்தியநாதன்:பல விஷயங்களைப் பற்றி நகைச்சுவைத் ததும்ப எழுதுவதில் கில்லாடி.

-ஈழநாதன்: இலங்கை இலக்கியவாதிகளைப் பற்றி இவர் எழுதும் தொடர் மிக்க பயனுள்ளது. வலைப்பூவாளர் வந்தியதேவனுடன் இவர் நிகழ்த்திய 'இந்திய அமைதிப்படையின் செயல்கள்' பற்றிய எதிர்வினைகள் ஆரோக்கியமாக ஆரம்பித்து, தனிமனிதத் தாக்குதலில் முடிந்தது சோகம்.

-வந்தியத்தேவன்: இவரின் கப்பல் கட்டுரைகள் மிகப் பிரசித்தம். அதைத் தவிர 'இந்திய அமைதிப் படை' பற்றிய கட்டுரைகளும் உணர்வு/அறிவுபூர்வமானவை.

-தேசிகன்: சுஜாதாவுக்காக வலைப்பக்கம் ஆரம்பித்து, அவரின் எழுத்துக்களைப் பதித்தவர். சுஜாதா சாயலில் சிறுகதைகள் எழுதினாலும், திருவரங்கத்தைப் பற்றிய இவரின் பதிவுகள் மிக முக்கியமானவை.

-ரூமி:சிறந்த எழுத்தாளர். இஸ்லாம் பற்றிய தெளிவான கட்டுரைகள் பல எழுதுகிறார். மொழிப்பெயர்ப்பு பற்றிய இவரது கட்டுரையைப் படித்து விட்டு, நாள் முழுக்க சிரித்துக் கொண்டிருந்தேன்.

-எஸ். இராமகிருஷ்ணன் : தமிழை ஆளத் தெரிந்தவர். திருட்டு நடந்த வீடு, தோல் பாவைக் கூத்து போன்ற கட்டுரைகள் மனதில் நிற்பவை.

-வெங்கடேஷ்: 'நேசமுடன்' என்ற மடல் இதழில் இவர் பதியும் செய்திகளின் வீச்சு, பொறாமைக் கொள்ள வைக்கும். இவரின் கதைகளைப் படித்ததில்லை.

இவர்களைத் தவிர்த்து, ரஜினி ராம்கி, அனாமிகா, சித்ரன், காசி(தமிழ் மணம் http://www.thamizmanam.com வலைப்பூக்கு சொந்தக்காரர்) போன்றோரின் வலைப்பக்கங்களில் பல உபயோகமான விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன. மற்றவர்களின் வலைப்பூக்களுக்குள் இப்போதுதான் போக ஆரம்பித்திருக்கிறேன்.

என் முடிவில் வலைப்பூக்கள் உதிரப் போவதில்லை. இன்னும் சிறிது காலத்தில் இதன் பரிணாம வளர்ச்சி வேறு தளங்களுக்கு இட்டுச் செல்லலாம். அவை இலக்கியப் பத்திரிக்கைகள் வெகு ஜனங்களுக்குச் செல்லாத குறையை நீக்கிவிடும்.

Tuesday, August 24, 2004

நன்றி இளையராஜா - II

மேலே தொடரும் முன், இக்கட்டுரை, என் நினைவுகளிருந்து எழுதுகிறேன். பிழையிருப்பின், சுட்டிக் காட்டினால், திருத்திக் கொள்வேன்.

1980-லிருந்து இளையராஜாவின் இசையில் ஒரு குறிப்பிடத்தக்க மாறுதல் தென்பட்டது. கர்னாடக, கிராமிய, மேற்க்கத்திய இசைகளை கலந்து fusion பாணியில் அமைக்கத் தொடங்கினார். 'நிழல்கள்' ஒரு சிறந்த உதாரணம். பாரதிராஜா, மகேந்திரன், பாலு மகேந்திரா ஆகியோர் இவரிடம் தங்கள் படங்களின் இசைப் பகுதியைக் கொடுத்து விட்டு ஓதுங்கிக் கொண்டனர். அதன் பின், இவர் பெயர் Title Card-ல் வரும் போதெல்லாம் திரையரங்குகளில் கைத்தட்டல் ஆர்ப்பரிக்கும்(இன்றும் அது நடக்கிறதா?).

1985- 86-ல் How to Name It? வெளியிடப்பட்டது. தமிழ் இசை உலகில் அது ஒரு புதிய முயற்சி. அப்போதைய பெரு நகரங்களைத் தவிர அது மக்களை சென்று அடையவில்லை. முதலில், இளையராஜாவின் இசை திரைப்பட இசையாகத்தான் மக்கள் பார்த்தார்கள். இரண்டாவது, How to Name it வகை இசை, கேட்க கேட்கத்தான் அதன் நுணுக்கம் புரியும். மூன்றாவது, இசை நம் தமிழ் உலகில் சினிமாவோடு தான் தொடர்புப்படுத்தப்பட்டு வந்திருக்கிறது(இன்றும் அதே நிலைதான்). How to Name it வடிவம் இல்லாத உருவெளி. அந்த இசையில் உள்ளே துளைத்துத்தான் அநுபவிக்க இயலும். எல்லோருக்கும் அது சாத்தியமில்லை. பாலு மகேந்திரா 'வீடு' படத்தில் How to Name it- ஐ மிகத் திறமையாக உபயோகப்படுத்தியிருப்பார்.

How to Name it வந்த காலத்தில் marketing-ம் இப்போது போல் aggressive கிடையாது. ரஹ்மானின் 'வந்தே மாதரம்'க்குக் கிடைத்த விளம்பரம் இதற்கு இல்லை. உதாரணத்திற்கு, How to Name it ஒலி நாடா, தமிழகத்தில் விற்கும் போது, அதைப் பற்றிய குறிப்புகள் தமிழில் பதிவாகியிருக்க வேண்டும். இல்லை. என்னைப் போன்ற, தீவிர ரசிகர்களுக்கே அதன் வடிவம் புதிது. இதன் மதிப்பு அபாரம், ஆனால் அன்று அதை உணர்ந்த தமிழ் சமுதாயம் கொஞ்சம் குறைவே.

துரதிருஷ்டவசமாக, இந்த நேரத்தில் தான் வைரமுத்துவோடு கருத்து வேற்றுமை ஏற்ப்பட்டது. நஷ்டம் தமிழ் இசையுலகுக்குத்தான். மற்ற பாடலாசிரியர்கள் அந்த இடத்தை நிரப்பினாலும் அப்போதைய இளைஞர்களை ரசிக்க வைத்ததில் பெரும் பங்கு இந்தக் கூட்டணிக்குத்தான். இவர்களின் கருத்து வேற்றுமையினால் பாரதிராஜாவும் பிரிந்தார். பின்பு பாரதிராஜா இனைந்தாலும் அது முன் போல் சிறக்கவில்லை. அதை நிவர்த்தி செய்ய மணிரத்னம் வந்தார். பாரதிராஜாவின் படங்களும் தரத்தை இழக்க ஆரம்பித்ததும்(வேதம் புதிது, கிழக்குச் சீமையிலே போன்றவை விதிவிலக்கு) இச்சமயத்தில்தான்.

இச் சூழ்நிலையில் Nothing but Wind வந்தது. How to Name it- ல் வில்லினால் காற்றை வளைத்தவர், இம்முறை காற்றினால் காற்றை இயக்கவைத்தார்.

(தொடரும்)

Monday, August 23, 2004

நன்றி இளையராஜா - I

விகடனில் 'தமிழுக்கு தாலாட்டு' என்ற தலைப்பில் இளையராஜாவின் திருவாசக சிம்பொனி முயற்சி பற்றி படித்தேன். நினைவுகள் பின்னோக்கிச் சென்று முதன் முறை அவர் இசையமைத்து கேட்ட பாடல்(கள்) தோன்றின.
1975 - 76ல் அன்னக்கிளி வெளி வந்தது. 'அன்னக்கிளி உன்னைத் தேடுதே', 'மச்சானைப் பார்த்தீங்களா' இரண்டும் எல்லா இடங்களிலும் ஒலித்துக் கொண்டிருந்தது. அப்போதெல்லாம் தொலைக்காட்சியில் மக்கள் தங்கள் வாழ்க்கையைத் தொலைக்காத காலம். எனக்கு வயது 8. அப்போதே இவர் இசையுலகில் கோலோச்சப் போகிறார் என்று எனக்குத் தெரியும் என்று ஜல்லியடிக்கமாட்டேன்.

அச்சமயம் எம்.எஸ். விஸ்வநாதனின் அரசாட்சி நடந்த நேரம். இசையுலகில் கர்னாடக சங்கீததை அடிப்படையாகக் கொண்டு பாடல்கள் வந்தபோது, இவர் கிராமிய இசையின் அடிப்படையில் மெட்டுகள் எழுதினார். மக்கள் மாற்றங்களை விரும்பினார்கள்.

அன்னக்கிளிக்குப் பிறகு, குறிப்பிடத்தக்க படங்கள் அமையவில்லை. 'தீபம்' போன்ற டப்பா படங்களுக்கு இசை அமைத்து, 'காசு போட்டால் பாடும் ஜுக் பாக்ஸ் போல ஆகிவிட்டார்' என்று பத்திரிக்கைகள் கிண்டல் செய்யும் அளவிற்கு 'பெயர்' வாங்கினார். அவரை சொல்லிக் குற்றமில்லை. அவரின் கற்பனையை மதிக்காமல், எம்ஸ்வி பாணியில் அவரை இசை அமைக்க தயாரிப்பாளர்கள் வற்புறித்தினார்கள். பத்தோடு பதினொன்று ஆனார்.

1978-ல் ஆபத்பாந்தவனாக பாரதிராஜா, மகேந்திரன் போன்றோர் திரையுலகில் கால் பதித்தார்கள். 16 வயதினிலே வந்து எல்லாவற்றையும் புரட்டிப் போட்டது. 'செந்தூரப் பூவே' என்று எஸ். ஜானகியின் குரலில் ஒலித்த ஏக்கம் இளம் பெண்களைக் கட்டிப் போட்டது(இப் பாடலை எழுதியது, கங்கை அமரன் - எங்கே சார் இது போன்ற பாடல்கள்?! ), 'செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா' என்று கனவான்கள் ஆடினார்கள்(இப் பாடலில், ஒரு, மேற்கத்திய சாயலில், வயலின்கள் பின்னனியில் கிராமிய புல்லாங்குழலை ஓட விட்டிருப்பார் - மெய்மறக்கும்). பின் 'உதிரிப்பூக்கள்'. இதில் அவரின் பின்னனி இசையின் முயற்சி தமிழ் சினிமாவின் மைல் கல்(விஜயன் தன் மச்சினியைத் தவறாகப் பார்க்கும் இடங்களில் வரும் மேளம்...Haunting). அதுவரை உணர்ச்சிகரமான காட்சிகளில் 1000 வாத்தியங்களை கதற விட்டு நம் காதுகளையும் செவிடாக்கி விட, இவர் ஒற்றை பியானோவில் பார்ப்பவர் மனதை பிசைந்தார்.

இவ்வளவு புதுமைகள் செய்தும் கிராமிய இசையமைப்பாளராகவே முத்திரைக் குத்தப்பட்டார். இதைத் தகர்க்கவே 'சிகப்பு ரோஜாக்கள்', 'ப்ரியா' வந்தது. BoneyM சாயலில் பாடல்கள் இருந்தாலும் இவரை கிராமிய வட்டத்திலிருந்து வெளிக் கொணர்ந்தது. 'நினைவோ ஒரு பறவை' பாடலில் வரும் Piano Solo மனதைச் சில்லிட வைக்கும்.
(தொடரும்)

Monday, August 16, 2004

நதியின் ஆழம்=மனதின் ஆழம்

Mystic River சமீபத்தில் பார்த்தேன். Dirty Harry புகழ் ஈஸ்ட்வுட் இயக்கிய படம். கதை Boston நகரை சுற்றி நடக்கிறது. மூன்று நண்பர்களைச்(டேவிட், ஷான், ஜிம்மி) சுற்றி பின்னப்பட்ட கதை. படம் அவர்கள் சிறுவர்களாக இருக்கும் போது துவங்குகிறது. மூவரும் தெருவில் விளையாடிக் கொண்டிருக்கும் போது, இரண்டு பேர் காவலர்கள் போல நடித்து, டேவிட்டை தங்கள் காரில் அழைத்துச் செல்கின்றனர். உண்மையில், அவர்கள் சிறுவர்களை வண்புணரும் கயவர்கள். டேவிடும் அதற்கு பலியாகிறான். அன்று முதல் அந்த நண்பர்களுக்குள் ஒரு திரை விழுகிறது.

காலச்சக்கரம் சுழ்ன்று தற்காலத்திற்க்கு வருகிறது. ஜிம்மி ஒரு மளிகைக்கடைக்கு சொந்தக்காரனாகிறான். ஷான் காவல் துறை அதிகாரியாகிறான். டேவிட் அடக்கமான குடும்பத்தலைவனாகிறான். அவ்வப்பொது, அவனுக்கு நடந்தது மண்ணிலிருந்து புழு போல எட்டிப் பார்க்கின்றது. ஒவ்வொரு நண்பனும், வாழ்க்கையை சிலுவையாக சுமக்கின்றான்.


இவர்கள் மூவரையும் ஒரு கொலை மீண்டும் நெருங்க வைக்கிறது. அதன் பின் நடப்பவை, மனித மனத்தில் உள்ள ஆழம் நதியின் ஆழத்தை விட அபாயகரமானது என்பதை விளக்குகிறது.


ஜிம்மியாக நடித்திருப்பவர் Sean Penn. ஆர்ப்பார்ட்டமில்லாத நடிப்பு. இவர் தேர்ந்தெடுக்கும் படங்கள் எல்லாமே, நடிப்புக்கு சவால் விடுபவை. இந்தப் படத்திற்க்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றார். Dead Man Walking படம் இவரை திரும்பி பார்க்க வைத்தது. அந்த படத்தைப் பற்றி பிறகு.


டேவிடாக Tim Robbins. இவருடைய The Shawshank Redemption நான் விரும்பி பார்க்கும் படங்களில் ஒன்று. Sean Penn போலவே சவால் விடும் பாத்திரங்களை ஏற்பவர். 2004-ம் வருட சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றார்.


ஷானாக நடித்திருப்பவர் Kevin Bacon. இவர்தான் இந்த படத்தின் ஆச்சரியம். இவர் நடித்த சில படங்களை பார்த்திருக்கிறேன். சொல்லிக் கொள்ளும்படியாக ஒன்றும் இல்லை. ஆனால் இதில் பிராயச்சித்தம் செய்து விட்டார் என்று சொல்லலாம். நம் சில தமிழ் நடிகர்கள் போல, நல்ல இயக்குனர்கள் இவரின் திறமையை தட்டி எடுப்பார்கள் போல. இறுதிக் காட்சியில், பிரிந்த மனைவியிடம் மன்னிப்புக் கேட்கும் இடத்திலும், ஜிம்மியிடம் இயலாமையுடன் "டேவிடின் மகனுக்கும் $500 மாதாமாதம் அனுப்ப போகிறாயா?" என கேட்கும் இடங்களும் மனதை ஒரு நொடி பிசையும்.


இந்த மூன்று திறமைசாலிகளையும்(மூவருமே, இயக்குனர்கள் கூட) சேர்த்த பெருமை, Clint Eastwood-ஐ சேரும். Dirty Harry மூலம் உலகமெங்கும் புகழ் அடைந்த இவர், சிறந்த இயக்குனரும் ஆவார். இவர் நடித்து, இயக்கிய Unforgiven-ம் ஆஸ்கர் வாங்கியது. அதன் பிறகு குறிப்பிடத்தக்க படங்களை, இவரும் கொடுக்கவில்லை. Mystic River-ல் அத்தனைக்கும் பிராயச்சித்தம் செய்து விட்டார். விருதுப் பெற்ற Tim Robbins-ம், Sean Penn-ம் இவரை மேடையில் புகழ்ந்த போது, ஒரு சிறு புன்னகையுடன், அடக்கமாக அமர்ந்திருந்தார்.


ஹாலிவுட் சரித்திரத்தில் முக்கியமான ஒரு படம்.

Monday, August 02, 2004

பார்த்த இரு படங்கள்

சென்ற வாரம் The Bourne Superamacy மற்றும் Mystic River பார்த்தேன். அவைகளைப் பற்றி எழுதலாம் என்று உத்தேசம்...பார்க்கலாம்.