Tuesday, August 24, 2004

நன்றி இளையராஜா - II

மேலே தொடரும் முன், இக்கட்டுரை, என் நினைவுகளிருந்து எழுதுகிறேன். பிழையிருப்பின், சுட்டிக் காட்டினால், திருத்திக் கொள்வேன்.

1980-லிருந்து இளையராஜாவின் இசையில் ஒரு குறிப்பிடத்தக்க மாறுதல் தென்பட்டது. கர்னாடக, கிராமிய, மேற்க்கத்திய இசைகளை கலந்து fusion பாணியில் அமைக்கத் தொடங்கினார். 'நிழல்கள்' ஒரு சிறந்த உதாரணம். பாரதிராஜா, மகேந்திரன், பாலு மகேந்திரா ஆகியோர் இவரிடம் தங்கள் படங்களின் இசைப் பகுதியைக் கொடுத்து விட்டு ஓதுங்கிக் கொண்டனர். அதன் பின், இவர் பெயர் Title Card-ல் வரும் போதெல்லாம் திரையரங்குகளில் கைத்தட்டல் ஆர்ப்பரிக்கும்(இன்றும் அது நடக்கிறதா?).

1985- 86-ல் How to Name It? வெளியிடப்பட்டது. தமிழ் இசை உலகில் அது ஒரு புதிய முயற்சி. அப்போதைய பெரு நகரங்களைத் தவிர அது மக்களை சென்று அடையவில்லை. முதலில், இளையராஜாவின் இசை திரைப்பட இசையாகத்தான் மக்கள் பார்த்தார்கள். இரண்டாவது, How to Name it வகை இசை, கேட்க கேட்கத்தான் அதன் நுணுக்கம் புரியும். மூன்றாவது, இசை நம் தமிழ் உலகில் சினிமாவோடு தான் தொடர்புப்படுத்தப்பட்டு வந்திருக்கிறது(இன்றும் அதே நிலைதான்). How to Name it வடிவம் இல்லாத உருவெளி. அந்த இசையில் உள்ளே துளைத்துத்தான் அநுபவிக்க இயலும். எல்லோருக்கும் அது சாத்தியமில்லை. பாலு மகேந்திரா 'வீடு' படத்தில் How to Name it- ஐ மிகத் திறமையாக உபயோகப்படுத்தியிருப்பார்.

How to Name it வந்த காலத்தில் marketing-ம் இப்போது போல் aggressive கிடையாது. ரஹ்மானின் 'வந்தே மாதரம்'க்குக் கிடைத்த விளம்பரம் இதற்கு இல்லை. உதாரணத்திற்கு, How to Name it ஒலி நாடா, தமிழகத்தில் விற்கும் போது, அதைப் பற்றிய குறிப்புகள் தமிழில் பதிவாகியிருக்க வேண்டும். இல்லை. என்னைப் போன்ற, தீவிர ரசிகர்களுக்கே அதன் வடிவம் புதிது. இதன் மதிப்பு அபாரம், ஆனால் அன்று அதை உணர்ந்த தமிழ் சமுதாயம் கொஞ்சம் குறைவே.

துரதிருஷ்டவசமாக, இந்த நேரத்தில் தான் வைரமுத்துவோடு கருத்து வேற்றுமை ஏற்ப்பட்டது. நஷ்டம் தமிழ் இசையுலகுக்குத்தான். மற்ற பாடலாசிரியர்கள் அந்த இடத்தை நிரப்பினாலும் அப்போதைய இளைஞர்களை ரசிக்க வைத்ததில் பெரும் பங்கு இந்தக் கூட்டணிக்குத்தான். இவர்களின் கருத்து வேற்றுமையினால் பாரதிராஜாவும் பிரிந்தார். பின்பு பாரதிராஜா இனைந்தாலும் அது முன் போல் சிறக்கவில்லை. அதை நிவர்த்தி செய்ய மணிரத்னம் வந்தார். பாரதிராஜாவின் படங்களும் தரத்தை இழக்க ஆரம்பித்ததும்(வேதம் புதிது, கிழக்குச் சீமையிலே போன்றவை விதிவிலக்கு) இச்சமயத்தில்தான்.

இச் சூழ்நிலையில் Nothing but Wind வந்தது. How to Name it- ல் வில்லினால் காற்றை வளைத்தவர், இம்முறை காற்றினால் காற்றை இயக்கவைத்தார்.

(தொடரும்)

No comments: