Monday, August 23, 2004

நன்றி இளையராஜா - I

விகடனில் 'தமிழுக்கு தாலாட்டு' என்ற தலைப்பில் இளையராஜாவின் திருவாசக சிம்பொனி முயற்சி பற்றி படித்தேன். நினைவுகள் பின்னோக்கிச் சென்று முதன் முறை அவர் இசையமைத்து கேட்ட பாடல்(கள்) தோன்றின.
1975 - 76ல் அன்னக்கிளி வெளி வந்தது. 'அன்னக்கிளி உன்னைத் தேடுதே', 'மச்சானைப் பார்த்தீங்களா' இரண்டும் எல்லா இடங்களிலும் ஒலித்துக் கொண்டிருந்தது. அப்போதெல்லாம் தொலைக்காட்சியில் மக்கள் தங்கள் வாழ்க்கையைத் தொலைக்காத காலம். எனக்கு வயது 8. அப்போதே இவர் இசையுலகில் கோலோச்சப் போகிறார் என்று எனக்குத் தெரியும் என்று ஜல்லியடிக்கமாட்டேன்.

அச்சமயம் எம்.எஸ். விஸ்வநாதனின் அரசாட்சி நடந்த நேரம். இசையுலகில் கர்னாடக சங்கீததை அடிப்படையாகக் கொண்டு பாடல்கள் வந்தபோது, இவர் கிராமிய இசையின் அடிப்படையில் மெட்டுகள் எழுதினார். மக்கள் மாற்றங்களை விரும்பினார்கள்.

அன்னக்கிளிக்குப் பிறகு, குறிப்பிடத்தக்க படங்கள் அமையவில்லை. 'தீபம்' போன்ற டப்பா படங்களுக்கு இசை அமைத்து, 'காசு போட்டால் பாடும் ஜுக் பாக்ஸ் போல ஆகிவிட்டார்' என்று பத்திரிக்கைகள் கிண்டல் செய்யும் அளவிற்கு 'பெயர்' வாங்கினார். அவரை சொல்லிக் குற்றமில்லை. அவரின் கற்பனையை மதிக்காமல், எம்ஸ்வி பாணியில் அவரை இசை அமைக்க தயாரிப்பாளர்கள் வற்புறித்தினார்கள். பத்தோடு பதினொன்று ஆனார்.

1978-ல் ஆபத்பாந்தவனாக பாரதிராஜா, மகேந்திரன் போன்றோர் திரையுலகில் கால் பதித்தார்கள். 16 வயதினிலே வந்து எல்லாவற்றையும் புரட்டிப் போட்டது. 'செந்தூரப் பூவே' என்று எஸ். ஜானகியின் குரலில் ஒலித்த ஏக்கம் இளம் பெண்களைக் கட்டிப் போட்டது(இப் பாடலை எழுதியது, கங்கை அமரன் - எங்கே சார் இது போன்ற பாடல்கள்?! ), 'செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா' என்று கனவான்கள் ஆடினார்கள்(இப் பாடலில், ஒரு, மேற்கத்திய சாயலில், வயலின்கள் பின்னனியில் கிராமிய புல்லாங்குழலை ஓட விட்டிருப்பார் - மெய்மறக்கும்). பின் 'உதிரிப்பூக்கள்'. இதில் அவரின் பின்னனி இசையின் முயற்சி தமிழ் சினிமாவின் மைல் கல்(விஜயன் தன் மச்சினியைத் தவறாகப் பார்க்கும் இடங்களில் வரும் மேளம்...Haunting). அதுவரை உணர்ச்சிகரமான காட்சிகளில் 1000 வாத்தியங்களை கதற விட்டு நம் காதுகளையும் செவிடாக்கி விட, இவர் ஒற்றை பியானோவில் பார்ப்பவர் மனதை பிசைந்தார்.

இவ்வளவு புதுமைகள் செய்தும் கிராமிய இசையமைப்பாளராகவே முத்திரைக் குத்தப்பட்டார். இதைத் தகர்க்கவே 'சிகப்பு ரோஜாக்கள்', 'ப்ரியா' வந்தது. BoneyM சாயலில் பாடல்கள் இருந்தாலும் இவரை கிராமிய வட்டத்திலிருந்து வெளிக் கொணர்ந்தது. 'நினைவோ ஒரு பறவை' பாடலில் வரும் Piano Solo மனதைச் சில்லிட வைக்கும்.
(தொடரும்)

2 comments:

rajkumar said...

இளையராஜாவைப் பற்றி எழுத ஆரம்பித்ததற்கு நன்றி.

ஆனால் தீபம் டப்பா படம் அல்ல. மேலும் பாடல்களும் அருமை. 'அந்தப் புரத்தில் ஒரு மகராணி" மற்றும் " பூ விழி வாசலில் யாரடி வந்தது' பொன்ற நல்ல பாடல்கள் அதில் இடம் பெற்றன. இதைத் தவிர குறிப்பிட்டு சொல்ல வேண்டிய படம் "பத்ரகாளி"

Raj Chandra said...

Dear Rajkumar,

Thank you for the encouragement and the pointer. My feeling about 'Deepam' songs were relative to the masterpieces he had composed and I agree those songs were not that bad. In my list they may go to the last in the index but not completly out of it.

Regards,
Rajesh