Wednesday, December 14, 2005

கங்கூலி சகாப்தம்

இன்று இந்திய கிரிக்கெட் வாரியம் சவுரவை அணியிலிருந்து நீக்கியிருக்கிறது. இனி அவருக்கு வாய்ப்பு வருமா என்பது தெரியவில்லை. டால்மியா அணி தோல்வியடைந்த நாட்கள் முதலாக கங்கூலியின் தலைக்கு கத்தி இருந்தது.

ஊடகங்களில் இவரது நீக்கம் பற்றி அதிகமாகக் கண்டனங்களே எழுந்துள்ளன. முந்தைய அணித்தலைவர்களின் மென்மை அணுகுமுறையினால் துவண்டுக் கிடந்த அணியை தன் போராட்டக் குணங்களால் தூக்கி நிறுத்தியவரை இவ்வாறு வீட்டுக்கு அனுப்ப வேண்டியதில்லை என்பதே அவைகளின் சாராம்சம்.
ஆனால் கங்கூலியே தனக்குக் குழி வெட்டிக்கொண்டார். க்ரெக்-ஐ எதிர்த்து ஜிம்பாப்வேயில் அரசியல் செய்து முதுகெலும்பில்லாத வாரியத் தலைவர் க்ரெக் புறம் கூறினார் என சொல்லும் அளவு கங்கூலி விளையாடினார். இந்திய சூழலில் இது ஒரு சாபக்கேடு. தலைவனாக அறியப்பட்டவன் சொல்லும் வார்த்தைகளை அப்படியே எடுத்துக் கொண்டு மற்றவர்களும் உளறுவது.

ஆனால் க்ரெக்-இன் உணர்ச்சி வயப்படாத அணுகுமுறை காட்சிகளை மாற்றியது. பதட்டமடைந்த சவுரவ், தனக்கு டென்னிஸ் எல்போ என சாக்கு சொல்லி, டென்டுல்கர் அளவு தனக்கும் மரியாதைக் கிடைக்கும் என எதிர்ப்பார்த்தார். இல்லை. உடனே உள்ளுர் போட்டிகளில் கலந்து கொண்டு ஒழுங்காக விளையாட முயன்றார். தோல்வி. தொடர்ந்த நிகழ்ச்சிகளில், இதோ, மூட்டையைக் கட்டிக் கொண்டிருகின்றார்.

என்னைப் பொறுத்தவரையில் இந்திய அணித் தேர்வாளர்கள் சரியான திசையை நோக்கியே செல்கிறார்கள்(அரசியல் இருப்பினும்). பழையப் பெருமைகளுக்காக இன்னும் அணியில் ஒட்டிக்கொண்டு உதவாமல் இருப்பவர்களைக் கழற்றி விடப்படத்தான் வேண்டும். தனி மனித வழிப்பாடுகளுக்கு கிரிக்கெட்டில் இடமில்லை. அதற்கு டென்னிஸ் விளையாடலாம்.

இன்று படித்ததில் கிரிகினஃபோவில்(http://content.cricinfo.com/indvsl/content/story/229570.html) எழுதப்பட்ட கட்டுரை அறிவுப்பூர்வமாக, ரீடிஃப்பில் வடேகரின் செவ்வியில்(http://in.rediff.com/cricket/2005/dec/14wadekar.htm) டென்டுல்கரைப் பற்றிய பதில் சிரிப்பை வரவழைத்தது. ஆம்...அணியில் உள்ள வீரரால் அணி வெற்றிக்கு பங்கில்லையென்றால் விலக்கப்பட வேண்டும்...அது டென்டுல்கராக இருந்தாலும்.

Thursday, May 19, 2005

ஸ்டார் வார்ஸ்-3

அலுவலக நண்பர்கள் புண்ணியத்தில் இன்று மதியமே "ஸ்டார் வார்ஸ் 3" படம் பார்க்க முடிந்தது. அலுவலக தோழர் டேவிட் இரவு 12 மணி முதல் திரையிடலைப் பார்த்துவிட்டு மீண்டும் மதிய ஆட்டம் பார்க்க வந்திருந்தார்(ரஜினி ரசிகர்களுக்கு சரியான போட்டி).

"ஸ்டார் வார்ஸ்" வரிசையில் லூகாசுக்கு இதுவே இறுதிப் படம்(மற்ற எவருக்கும் இந்த அளவு பிரம்மாண்டம் எடுக்க துணிவு இருக்கும் என தோன்றவில்லை). படம் அனகின் ஸ்கைவாக்கர் எவ்வாறு தீயசக்திகளின் பக்கம் சாய்ந்து 'டார்த் வேதர்' ஆனான் என்பதை சொல்கிறது.

1977-ல் இப்படத்தின் முதல் பகுதி வந்தபோது, உலகமே பைத்தியம் பிடித்து அலைந்தது. கதை என்னவோ ரொம்ப சாதாரணம்தான். கொடுங்கோலரசரை வீழ்த்த புரட்சிக் குழுக்கள் முயல்கின்றன. அவர்களுக்கு உண்டாகும் அனுபவங்கள் மூன்று படங்களாக 1983 வரை வந்தன.

படத்தின் உயிர் நாடி "டார்த் வேதர்" எனும் வில்லன். இவனின் உருவ அமைப்பு நடுங்க வைக்கும் என்றால், குரலோ கேட்பவரைச் சில்லிட வைக்கும்(குரல் கொடுத்தது ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ்). இவனுக்கும் கதை நாயகனான லூக் ஸ்கைவாக்கருக்கும்(ஆம்...இவன் டார்த்தின் மகன் தான்) நடக்கும் யுத்தம்தான் படத்தின் முக்கிய காட்சிகள்.

பிரம்மாண்டம் என்பதற்கு அர்த்தம் கொடுத்தவை ஸ்டார் வார்ஸ்தான். நகைமுரண் என்னவென்றால், முதல் படத்தைப் பார்த்த வினியோகஸ்தர்கள் 'இது உருப்படாது' என முடிவு செய்ய, அங்கிருந்த ஸ்பீல்பர்க் மட்டும் இது ஹாலிவுடின் திருப்புமுனைப் படம் என சரியாகக் கணித்தார். இப்படங்களுக்கு லூகாஸ் பட்ட சிரமங்களை ஒரு பெரியப் புத்தகமாகப் போடலாம்.

1983க்குப் பிறகு லூகாஸ் "டார்த் வேதர்" கதையை எடுக்கத் திட்டமிட்டார். 1997-ல் முதல் படம் வந்தது. அதில் ஆனகின் ஒரு பொடியனாக பல சாதனைகளைச் செய்து, பெரிய வீரனாவதற்கு அடிப் போடுகிறான். இரண்டாவது படத்தில் இராணி 'பட்மே'வின் மனதில் இடம் பிடித்து 'ஜெடாய்' எனும் சிறப்பு வீரனாகிறான்.

இன்று(19 மே) வெளிவந்திருப்பது வரிசையில் இறுதி. முதல் 20 நிமிடங்கள் நடக்கும் போரில் கடத்தப்பட்ட ஜனாதிபதியை ஆனகினும், அவனது குருவான 'கெனோபி'யும் மீட்கின்றனர். நாடு திரும்பும் ஆனகின் தான் தந்தையாகப் போவதை அறிகிறான. அந் நிலையில் அவன் காணும் கனவில் அவன் காதலி பிள்ளைப் பேற்றின்போது உயிர் துறப்பதை அறிகிறான். ஏற்கெனவே, அவனது அன்னை விஷயத்தில் அவன் கண்ட கனவு நடந்ததால் இது அவனுக்கு மிக்க அச்சத்தைக் கொடுக்கிறது. எப்படியாவது தன் காதலியைக் காப்பாற்றத் துடிப்பதை ஜனாதிபதி உபயோகப் படுத்திக் கொள்கிறார். அவனது குருவோ அவனைக் காப்பாற்ற முயல்கிறார். முடிவு தெரிந்த ஒன்றுதான் என்றாலும், வெள்ளித் திரையில் காண்க.

ஆரம்பத்திலிருந்து இறுதி வரை, மூச்சை நிறுத்துமளவிற்கு பிரம்மாண்டம். போர்க் கப்பல்கள் ஆகட்டும், நகரங்கள் ஆகட்டும், எடுத்துக் கொண்டப் பாத்திரங்கள் ஆகட்டும், இணை சொல்ல முடியாத அளவில் இப் படத்தைச் செதுக்கியிருக்கிறார்கள். ஆனால் இள "டார்த் வேதர்" ஆக நடித்திருக்கும் ஹேய்டன் கிரிஸ்டன்சென் ஏமாற்றம் அளிக்கிறார். சரியான தேர்வு இல்லை. இதையெல்லாம் கண்டுக்காதீங்க என படத்தின் கதையமைப்பும், காட்சிகளும் நம்மை உட்கார வைத்து விடுகின்றன.

தவற விடக்கூடாத படம்.

Thursday, March 24, 2005

கருணைக் கொலை

ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள ஒரு மருத்துவமனையை ஒட்டுமொத்த அமெரிக்காவே உற்று கவனித்துக் கொண்டிருக்கிறது. டெரி ஷியாவோ( Terri Schiavo) என்ற பெண்மணி கடந்த 15 வருடங்களாக மூளை செயலிழந்து போராடிக் கொண்டிருக்கிறார். அவரை மருத்துவர்கள் persistent vegetative state என்ற நிலையை அடைந்து விட்டதால் அவர் இனி உயிர் பிழைத்து நலமடைய வாய்ப்பே இல்லை என தெரிவித்து விட்டனர்.

டெரியின் நிலைக்குக் காரணம், 15 வருடங்களுக்கு முன் அவருக்கு பொட்டாசியம் குறைவாக இருப்பதாகத் தவறாகக் கணிக்கப்பட்டு, சிகிச்சையின் விளைவாக மாரடைப்பு நிகழ்ந்து, மூளையைப் பாதித்தது. அன்றிலிருந்து அவருக்கு எல்லாமே குழாய்கள் வழியேதான் - உணவு, தண்ணீர் அனைத்தும். பல சிகிச்சைகள் புரிந்தும் பலன் இல்லை.

டெரியின் கணவர் மைக், இதைக் காட்டிலும், 'கருணைக் கொலை'க்குத் தான் தயாராக இருப்பதாகவும், அதை தன் மனைவியும் ஒப்புக்கொள்வார் என அறிவித்து, அதை நீதிமன்றங்களிலும் தாக்கல் செய்தார். அவர் அமர்த்திய மருத்துவர்களும், மற்றும் டெரியை சோதித்த மற்ற மருத்துவர்களும் அதையே வழிமொழிகின்றனர். நீதிமன்றமும் குழாய்களை அகற்ற சம்மதித்து உத்தரவிட்டது.

ஆனால், டெரி வழி உறவினர்கள்(தாய், தந்தை மற்றும் பலர்) ஓப்புக் கொள்ள மறுத்து மேல் முறையீடு செய்ய, நீதிமன்றம், அவர்களின் முறையீட்டை மறுத்துவிட்டது.

மார்ச்- 18 ம் தினம் குழாய்கள் அகற்றப்பட்டு, டெரி தற்சமயம் எந்த உணவுப் பொருளும் இன்றி, அவரின் உயிர் சிறிது சிறிதாக வெளியேறிக் கொண்டிருக்கிறது.

அமெரிக்காவை இந் நிகழ்வு இரண்டாகப் பிரித்திருக்கிறது. Persistent vegetative state அடைந்தவர் இவ்வாறு துண்பப்படுவதை விட அவரை உயிர் துறக்க வைக்கலாம் என ஒரு அணியும் மற்ற அணி, இது கொலைக்கு ஈடானது எனவும் வாதாடுகின்றன.

டெரியின் பெற்றோர் எடுத்த படங்களில், டெரி கண்களை சுழற்றிப் பார்ப்பது, புன்னகை செய்வதும் தெரிகின்றன. அதை வைத்து, அவர்கள் அமர்த்திய மருத்துவர்கள், தகுந்த சிகிச்சையில் பிழைக்க வாய்ப்பு இருப்பதாகக் கருதுகிறனர். ஆனால் மற்ற மருத்துவர்களோ, இந்நிலையில் இருப்பவர்கள் தான் என்ன செய்கிறோம் என்பதையே அறியாதவர்களாக இருப்பார்கள், மேலும், அந்த படப்பிடிப்பில், மொத்தம் மூன்று மணி நேரத்தில் டெரியின் செயல்கள் சில விநாடிகளே என பதில் வாதம் புரிகின்றனர்.

அவர்கள் கருத்துப் படி, டெரிக்கு தற்சமயம் உணர்வு என்ற நிலையே இல்லை. அவருக்கு, வலி, கிலி, மகிழ்ச்சி, சோகம், தொடு உணர்வு அனைத்தும் அகன்றுவிட்டன. உணவு செலுத்தவில்லையென்றால், நாம் உணர்வது போல் பசியோ, தாகமோ எடுத்தாலும், அவரால் அதை உணர்வு பூர்வமாக அறிய இயலாது. அவரின் உடல், இதனால், நீரிழந்து, அவரின் சிறுநீரகங்கள் செயல் இழந்து சிறிது சிறிதாக உயிர் இழப்பார்-ஆனால் வலி என்ற உணர்வின்றி- என மருத்துவர்கள் கருதுகின்றனர்.

ஃப்ளோரிடா மாகாண ஆளுநர் ஜெப் புஷ் குழாய்களை அகற்றுவது தவறு என சட்டம் இயற்ற, நீதி மன்றமோ அச் சட்டம் செல்லாது என தடை செய்துவிட்டது. டெரியின் பெற்றோரும், தற்சமயம் அரசாங்கத்தையே நம்பி இருக்கின்றனர்.

அமெரிக்காவில் உயிலில் ஒருவர், இம் மாதிரி தனக்கு நிகழ்ந்தால் மற்றவர் என்ன செய்யலாம் என எழுதி வைக்கலாம். டெரி அவ்வாறு எழுதவில்லை. அவரின் கணவர் மைக் அவரின் காப்பாளர்(Guardian) நிலையில் இருப்பதால் நீதிமன்றம் அவரின் முடிவை ஆதரிக்கிறது. இவ்வழக்கின் விளைவால், பல அமெரிக்கர்கள் உயில் எழுத ஆரம்பித்து விட்டனர்.

அமெரிக்க அதிபர், டெரியின் வாழ்வை நீட்டிப்பதை ஆதரித்திருக்கிறார். ஆனால் நீதிமன்ற முடிவைப் பற்றி எதுவும் கூறவில்லை.

டெரிக்கும், அவரின் குடும்பத்தாருக்கும் நம் பிரார்த்தனைகள்.

வலைப்பதிவுகள்:
http://civilliberty.about.com/cs/humaneuthinasia/a/bgTerry.htm
http://abcnews.go.com/Health/Schiavo/story?id=531907&page=1
http://www.cnn.com/2005/LAW/03/18/schiavo.brain-damaged/

Thursday, February 10, 2005

மனத்துக்கண்?

இதுவரை எந்த முரண்பாடான செய்திக்கும், தனிப்பட்ட வலை நண்பர்களின் கருத்துக்களையும் விமர்சனம் செய்ததில்லை. ஆனால் மதி அவர்களின் வலைப்பதிவைப் படித்த பின் இதை எழுதத் தோன்றியது.

பா. ராகவன் நான் மதிக்கும் எழுத்தாளர். பல எண்ணங்களை ஆணித்தரமாக எடுத்து வைக்கும் முறை என்னைக் கவர்ந்தது. அதனால்தான் அவரின் இச்செய்கை என்னைக் குழப்புகிறது. அதைவிட வருத்தம் தந்தது, அவரின் மறுமொழி: 'எல்லா தமிழ் பதிப்பகங்களும் செய்கின்றன'(!?&^). இதை அவர் சொல்லியிருக்கும் பட்சத்தில், பொறுப்பான எழுத்தாளரின் பொறுப்பற்ற பதில். கருணாநிதி பாணி. உங்கள் ஆட்சியில் லஞ்ச ஊழல் தாண்டவமாடுகிறதே என கேள்வி எழுப்பினால், எம்.ஜி.யார் ஆட்சி என்ன வாழ்ந்தது, கேரளாவைப் பார் என உளறி, பேச்சைத் திசைதிருப்புவதற்கும், பாராவின் பதிலுக்கும் ஒன்றும் வித்தியாசம் இல்லை. ஆனால், கருணாநிதி சொன்னால் உளறல், பாரா பேசினால் வருத்தமே.

பத்ரியின் பொறுப்பான பதில் ஆறுதல்.

Saturday, February 05, 2005

போரும் அதன் விளைவுகளும்

வியட்நாம் போர் அமெரிக்கர்களின் மனதில் நீங்கா இடம் பெற்ற ஒன்று. செப். 11 வரை வியட்நாம் என பேச்சை எடுத்தாலே அமெரிக்கர்களுக்கு, விமானங்களில் கொண்டு வரப்பட்ட இராணுவ வீரர்களின் உடல்கள்தான் நினைவுக்கு வரும். அப்போரில் ஈடுப்பட்ட பல வீரர்கள் இன்னும் மனதால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


மக்கள் அப்போரை நினைத்து மறுகிக் கொண்டிருக்க ஊடகங்கள் அவ்வரலாற்றை எவ்வாறு அணுகுகின்றன? பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் முடிந்த அளவு இது ஒரு வேண்டாத நிகழ்வாகவே பார்க்கின்றன.


புனைக்கதாசிரியர்களும் தயக்கத்துடனே அனுகுகிறார்கள். கதாநாயகர்கள், வீர சாகசம் அல்லது கொடூரச் செயல் புரிவதற்கு, அவர்கள் வியட்நாமில் இருந்தது ஒரு காரணமாகக் காட்டப்படுவதுண்டு(நான் படித்தப் புத்தகங்களில்).


ஹாலிவுட் இரு துருவங்களாக பிரிந்து, ஒரு பகுதி நம் இந்தியப் பட பாணியில் பட இறுதிக் காட்சியில் 'வெற்றி நமதே' என கூவினாலும், மக்கள் மற்றொரு பகுதியினரின் பார்வையைத்தான் ஒப்புக்கொள்கிறார்கள். புதின எழுத்தாளர்களின் 1970- 80 களின் கதைகளில் கதை மாந்தர்களின் செயல்களை வசதியாக போரின் மேல் பழிப் போட்டார்கள்.


இக்கட்டுரை ஹாலிவுட் பார்வைப் பற்றி...


முதலில் மசாலாப் படங்கள் - Sylvester Stallone(First Blood series) மற்றும் Chuck Norris(Missing In Action series) ஆகியோரின் படங்கள் உளவியல் ரீதியாக போரின் முடிவில் அக்கறைக் கொள்ளாமல் முன் வரிசைக் கும்பலுக்கு தீனி போடும் வகையில் அமைந்திருக்கும். 90 - 100 நிமிடங்களுக்கு வரலாற்றை சுத்தமாக மறந்துவிட்டு வியட்நாமியர்கள் அடிபடுவதைக் காணலாம்.


வரலாற்றின் அடிப்படையில் எடுக்கப்பட்டவை :
1) Platoon : Oliver Stoneன் பார்வையில் வியட்நாமில் அமெரிக்க வீரர்களின் நடவடிக்கைகள். படம் மக்களை உலுக்கியது. படத்தைத் தடை செய்ய வேண்டும் எனக் கூச்சல்கள் எழுந்தன. அது எப்படி ஒரு அமெரிக்கர் நம் இராணுவத்தையே கெட்டவர்களாகக் காண்பிக்கப் போகும் எனக் கேட்கப்பட்டது. கதைப்படி, டெய்லர் போர் முனையில் பல முரண்பாடுகளைக் காண்கிறான். இராணுவம் இரண்டாகப் பிரிந்துக் கிடக்கிறது(வெள்ளையர், வெள்ளையர் அல்லாதவர் என). தாக்கச் சொல்லி உத்தரவு வரும்போதெல்லாம் வேண்டா வெறுப்பாக கடமையைச் செய்கிறார்கள்.


டெய்லரின் படைப்பிரிவில் இரண்டு அதிகாரிகள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். சார்ஜென்ட் பார்ன்ஸ்(Barnes) ஈவு இரக்கம் பாராதவன். எதிரிகள் கொல்லப்பட வேண்டியவர்களே என்பதில் அவனுக்கு எந்த சந்தேகமும் இல்லை- பெண்கள், முதியவர், குழந்தைகள் உட்பட. மற்றொருவன் சார்ஜென்ட் எலியாஸ்(Elias). இவனும் கொலை செய்ய தயங்காதவன், ஆனால் கொஞ்சம் மனிதாபிமானம் உள்ளவன். இவர்கள் இடையில் டெய்லரின் பயணம் தொடர்கிறது. பல கேள்விகள் எழுகின்றன. இந்த யுத்தம் எதற்கு, தேவையா போன்றவைகளுக்கு மத்தியில் வியட்நாமியர்களின் தாக்குதலையும் சமாளிக்க வேண்டியிருக்கிறது. நடக்கும் நிகழ்ச்சிகள், டெய்லரை, இந்த யுத்தம், அமெரிக்கருக்கும், வியட்நாமியருக்கும் அல்ல, அமெரிக்கருக்கும், அமெரிக்கருக்கும் தான் என முடிவுக்குத் தள்ளுகிறது. இறுதியில், டெய்லரின் சுயப் பரிசோதனை பார்ன்ஸால் சோதிக்கப்படும்போது, பார்ன்ஸ் தன்னுடைய பிம்பத்தை டெய்லரிடம் காண்கிறான்.


இப்படம் எவ்வளவு எதிர்ப்பை சந்தித்ததோ, அதே அளவு வரவேற்பையும் பெற்றது. Oliver Stone சிறந்த இயக்குனராக ஆஸ்கர் விருதைப் பெற்றார். தவற விடக்கூடாத படம்.


Platoonல் நடித்தவர்கள்:

Charle Sheen - Taylor
Tom Berenger - Sgt. Barnes
Willen Dafoe - Sgt. Elias


அடுத்து Born on Fourth of July மற்றும் Deer Hunter பற்றிய எனது பார்வை.


Friday, January 28, 2005

நலமா?

கொஞ்ச நாட்களாக எழுதத் தோன்றவில்லை. நிச்சயம் உலகத்துக்கு நஷ்டமில்லை. அலுவலகமும், வீட்டில் என் நான்கு மாத மகளும், படிக்கவேண்டிய புத்தகங்களும் நேரத்தை நிறைத்து விடுகிறார்கள். படிக்க வேண்டிய வலைப் பதிவுகளைத் தவற விடுவதில்லை. ஓய்ந்த நேரத்தில் ராஜ் கௌதமனின் 'சிலுவைராஜ் சரித்திரம்' படித்துக் கொண்டிருக்கிறேன். போதாக்குறைக்கு, ஞாயிற்றுக்கிழமைகளில், New England Patriots விளையாடும் ஆட்டங்கள் தவறாமல் - மனைவியின் 'உருப்படமாட்டே' என்ற ஆசிர்வாதத்துடன் - நேரத்தை அபகரிக்கின்றன.

பத்ரியின் வலைப்பதிவு சிறந்தப் பதிவாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. வாழ்த்துக்கள். இவரின் புத்தகக் கண்காட்சி வருணனைகள் அருமை. அன்னாரின் பல பதிவுகளை தொகுத்துப் புத்தகமாகப் போடலாம்(பத்ரி: என்னுடையதுதான் முதல் யோசனை என்றால் எனக்கு 40% ராயல்டி தரவேண்டும் :) ).

'மூக்கு' சுந்தர் இந்த வார நட்சத்திரம். 'கிரீடப் பதிவு' என ஒன்றை தேர்ந்தெடுத்து, பதிந்தது நல்ல யோசனை. கொஞ்ச நாள் தமிழ்( தண்ட) திரைக்காவியங்களை மூட்டைக் கட்டிவிட்டு பல நிகழ்வுகளை அவரின் சூடான பாணியில் தர பணிவுடன் வேண்டுகிறேன்(எனக்கு டின் கட்டப் போறாரு :) ). சமீபத்தில், இவரின் பழையப் பதிவான 'இந்திய அமைதிபடை' பற்றிய பதிவில் சுமார் 136 பின்னூட்டங்களைப் படித்தது, பல வகையான சிந்தனைகளைக் கிளப்பியது.

ஈழநாதனின் பழையக் கட்டுரைகளைப் படித்துக் கொண்டிருக்கின்றேன். மனிதர் தொடாத விஷயங்கள் இல்லை. தொடர்க. ரோசா வசந்தின் கட்டுரைகள், பல ஆரோக்கியமான வாதங்களை எழுப்புகின்றன. சுனாமி தொடர்பாக ரஜினி ராம்கியின் உதவிகள், நேர்முகக் குறிப்புகள் நெகிழ்த்தின.

யாருப்பா சொன்னது வலைப்பதிவுகள் எல்லாம் '15 நிமிடப் புகழ்' என்று?

திண்னையில் ஞாநி, இனி தன் கட்டுரைகள் வரா எனக் கண்டிப்பாகக் கூறிவிட்டார். என் கருத்தில் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுவிட்டார். எழுத்தாளர்கள் பொதுவில் எழுதும்போது, எதிர்வினை(கள்) வரத்தான் செய்யும். ஒருவர் தன்னை தவறாகப் புரிந்த்தற்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றால், தினமும் ஒவ்வொருவரும் மற்றவரிடம் மன்னிப்புக் கேட்பதற்கு மட்டுமே நேரம் சரியாக இருக்கும். திண்ணை ஒரு திறந்தப் மின் பத்திரிக்கை. இதில் ஞாநியும் மற்றவர்களும் ஆரோக்கியமாக வாதம் புரிந்து நட்புடன் முடித்திருக்கலாம். இஸ்லாமிய கொள்கைகள் தொடர்பாக நீண்ட நாட்களாக நேசகுமாரும் இஸ்லாமிய நண்பர்களும் முடிந்த வரை மரியாதையாகத்தான் விவாதம் நடத்துகிறார்கள்(என்று நினைக்கிறேன்).

இப்போதைக்கு அவ்வளவுதான். இனியாவது, வாரத்துக்கு ஒரு முறை பதிவு செய்ய ஆசை.