Saturday, June 12, 2004

கல்கி - இலக்கியவாதியா?

புதுமைப்பித்தன் காலத்திலிருந்தே எழுப்பப் பட்டு வந்த ஒரு கேள்வி இது. கல்கியின் எழுத்துக்கள் வெறும் குப்பை என்று தொடங்கி இன்று ஜெயமோகன் அவர்களால் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்பது வரை வளர்ந்துள்ள ஒரு சர்ச்சை.

தமிழ் எழுத்துலகில் ஒரு பிடிவாதமான கொள்கை-எந்த எழுத்தாளராவது வணிக பத்திரிக்கைக்கு எழுதிவிட்டால் அவரை சாதி ப்ரஷ்டம் செய்யாத குறையாக ஒதுக்குவது. இவர்களின் வாதம், வணிகப் பத்திரிக்கைகளுக்கு எழுதும் எழுத்துக்கள் சென்றடையும் வாசகர்களுக்காக நீர்த்துப் போகின்றன.

மக்களின் ரசணைகளை மேம்படுத்தாமல் அவர்களுக்காக வளைந்துக் கொடுப்பது இலக்கியம் ஆகாது. ஓத்துக்கொள்கிறேன்.

பழங்கால இலக்கியங்களை புனையும்போது இந்த சிக்கல்கள் இருந்ததா, தெரியவில்லை. கம்பரும், இளங்கோவும் இருந்த காலத்தில் அனைவரும் அவர்கள் படைப்புகளை புரிந்துக் கொண்டார்கள் என்பது ஜல்லி. அப்படி என்றால் மக்களுக்காக நீர்த்துப் போன இலக்கியங்கள் படைக்கப் பட்டனவா? அவ்வாறு இருந்தால், அவைகள் எங்கே?

அதே சமயம், மக்களுக்குப் புரியாத வகையில் எழுதுவதும் இலக்கியம் அல்ல. மழை நீர் கடலில் பொழிவதால் யாருக்கு லாபம்?

கல்கியின் எழுத்துக்கள் தமிழை மற்றொரு நிலைக்கு எடுத்து சென்றது என்பதில் சந்தேகம் இல்லை. அவருடைய புதினங்கள் மனித மனங்களை ஆராய்ந்தன(உதாரணமாக நந்தினி, நாகநந்தி). கதை எழுதப்பட்ட காலத்தில், மக்களை சென்றடையும் வண்ணம் எழுத வேண்டும் ஆயின், முதலாவதாக, அவர்களுக்குப் புரியுமாறு எழுதப்பட வேண்டும். திட்டி வாசலைத் திறந்து விட வேண்டிய பொறுப்பு கல்கிக்கு இருந்தது. அதன் பின் வாசகர்கள் பொறுப்பு உள்ளே போவது. அந்த வகையில் கல்கியின் எழுத்துக்கள் ஏணியைப் போன்றவை. ஆத்திச்சூடியைப் படித்துத் தானே இலக்கிய வரலாறு வரை புரிந்து கொள்ள முடிந்தது.


No comments: