Saturday, July 24, 2004

Feast of the Goat

Mario Vargas Lloasa-வின் அற்புதமான புத்தகங்களில் ஒன்று.  சாரு நிவேதிதாவின் கோணல் பக்கங்களின் மூலமாக எனக்கு அறிமுகமான எழுத்தாளர்.  ஸ்பானிய மொழியில் எழுதும் எழுத்தாளர்களில் இவரும் Gabriel Garcia Marquez-ம் முக்கியமானவர்கள்.

கதை த்ருஃலோ என்ற டொமினிகன் சர்வாதிகாரியின் ஆண்ட காலத்தையும்(1940- 60கள் ஆரம்பம்) அவர் கொல்லப் பட்டபின் நடந்த கொடூரங்களைப் பற்றியும் பேசுகிறது.  லோஸாவின் திறமையான கதை அமைப்பில், புததகம் நம்மை கட்டிப் போடுகிறது.  ஆங்கில மொழி பெயர்ப்பும் அதற்கு ஒரு காரணம்(சமீபத்தில் நாகூர் ரூமியின் கால்வினோ கதைகளை மொழி பெயர்தத விதம் பற்றி எழுதிய கட்டுரை இங்கே நினைவுக்கு வருகிறது).

லோஸா கதையை மூன்று கோணங்களில் விளக்குகிறார்.  முதல் கோணம், யுரானிதா மூலம்.  இவள் தந்தை த்ருஃலோவின் ஆட்சியில் அமைச்சராக இருந்து, அந்த சர்வாதிகாரியால் பதவி இறக்கப்பட்டவர்.  யுரானிதா அவரை 35 வருடங்களுக்குப் பிறகு சந்திக்கிறாள்.  இப்பொது அவள் தந்தை ஒரு செல்லாக்காசு.  யுரானிதாவுக்கு அந்நிலை ஒரு குரூரம் கலந்த திருப்தியை தருகிறது.  தந்தையை சந்தித்து பழைய நிகழ்ச்சிகளை நினைவூட்டுகிறாள்.  தந்தையோ பாம்பைக் கண்டதைப் போல் நடுங்குகிறார்.

இரண்டாவது கோணம் த்ருஃலோவை கொலை செய்யக் காத்திருப்பவர்கள் மூலம்.  இந்த கும்பலில் இராணுவ அதிகாரிகள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.  ஒவ்வொருவரும் ஏன் கொலை செய்ய முடிவெடுத்தார் என்பதை விளக்கும் கோணம் இது.

இரண்டாவது கோணத்தின் நீட்சியாக த்ருஃலோ கொலை செய்யப்பட்டபின் அவரது மகன் பொறுப்பேற்று, கொலையாளிகளைப் கண்டுப்பிடித்து சித்திரவதை செய்வது.  இரண்டு பேர்களைத் தவிர மற்ற அனைவரும் பிடி படுகிறார்கள்.   சித்திரவதை முறைகள் புத்தகத்தில் விரிவாக இடம் பெறுகின்றன.  இருதய பலவீனர்கள் படிக்காதிருப்பது நலம்.   முழு விவரங்களும் எழுத இயலவில்லை என்று லோஸா ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

மூன்றாவது கோணம் த்ருஃலோவின் இறுதி நாள்.  அவரின் காலை உடற்பயிற்சி முதல் இரவில் நெடுந்சாலையில் கொலை செய்யப்படும் வரை.  சர்வாதிகாரிகள் பொதுவாகவே தற்பெருமை கிறுக்கர்களாகவே இருப்பர்.  த்ருஃலோவும் விதி விலக்கல்ல.  தன்னால்தான் நாடு சீரும் சிற்ப்புமாக இருப்பதாக மனப்பால் குடிக்கிறார்.  தன் ஆட்சியை தட்டிக் கேட்கும் எவரும்-ஆண், பெண் வித்தியாசம் இல்லை- அதிர்ஷ்டம் செய்திருந்தால் அவர் மட்டும் இறப்பார்.  இல்லையென்றால் குடும்பத்தோடு இவ்வுலகை விட்டு செல்வார்கள். 

இப்படிப்பட்ட ஒரு மனிதனின் இறுதி நாளில் நடக்கும் நிகழ்ச்சிகள், அதனோடு தொடர்பு கொண்ட இறந்த காலம் இந்த கோணத்தில் சொல்லப்படுகிறது.

லோஸா ஒவ்வொரு கோனத்திற்க்கும் ஒரு அத்தியாயம் ஒதுக்குகிறார்.  முதலில் இது படிப்பவரை சற்று குழப்பினாலும் போக போக நம்மால் ஒன்ற முடிகிறது.  வரிக்கு வரி த்ருஃலோவை நினைக்க வைக்கிறது-எவ்வாறு அவரின் ஆளுமை நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் நிறைந்திருந்ததோ!.  என்னை பொறுத்தவரை புத்தகத்தின் சிறப்பான பகுதிகள் யுரானிதா அவள் தந்தையை வார்த்தைகளால் வாட்டும் இடங்கள்.    கதை மாந்தர்கள் பலரை என்னால் நம் இந்திய நாட்டு அரசியல் வாதிகளுடன் ஒப்பிட முடிந்தது.  ஏன் என்பதை நீங்கள் புத்தகத்தைப் படித்தால் புரியும்.

Hollywood இயக்குநர் க்வெண்டென் டாரண்டினோ இயக்கிய படங்கள் எல்லாமே படம் ஆரம்பித்த நூலிழையைக் கொண்டு மற்ற நிகழ்வுகளை(கடந்த காலம், நிகழ் காலம்) சொல்லும்.  இந்த புத்தகமும் அவ்வாறே செல்கிறது. 

A fine balance-க்குப் பிறகு ஒரு அற்புதமான புததகம்.


No comments: