Wednesday, July 28, 2004

தமிழ் புத்தகங்கள்

தமிழில் வரும் நல்ல புத்தகங்களை, -குறிப்பாக புனைவுக்கதைகள்- பெரிய பத்த்ரிக்கைகளில் யாரும் அடையாளம் காண்பிப்பதில்லை.  சுஜாதா 'கற்றதும் பெற்றதும்' பகுதியில் ஆராய்ச்சி, கவிதை சம்பந்தமாக நிறைய எழுதியுள்ளார்.  பிறகுதான் திண்ணை.காம் படிக்க ஆரம்பித்தேன்.  ஜெயமோகன் உட்பட பலர் தாங்கள் படித்த புத்தகங்களைப் பற்றி மதிப்புரை எழுத ஆரம்பித்தனர். ஆனால் ஒரு சிக்கல் இருந்தது.  பதிப்பகங்கள் பல இன்னும் 1970-களிலே இருக்கின்றன.  அமேசான்.காம் போல தமிழ் புத்தகங்கள் விற்பவர் எவரும் இலர்.  நான் வசிப்பதோ அமெரிக்காவில்.  இந்தியாவிலிருந்து புத்தகங்கள் கால் விலை என்றால் தபால் செலவு முக்கால்.
இதனிடையே, ஜெயமோகன் எழுதிய ஒரு மதிப்புரையில், புத்தகங்கள் கிடைக்கும் இடம் என்று 4 முகவரிகளைக் கொடுத்திருந்தார்.  அனைவரையும் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டேன்.  திலீப் என்பவர் அடுத்த நாளே பதில் அனுப்பினார்.  இவ்விடத்தில் நம் பதிப்பகத்தாரின்  வியாபார வேகத்தையும் சொல்ல வேண்டும்.  மின்னஞ்சலில் தொடர்ப்பு கொண்டால், ஒன்று அது காலாவதி ஆகியிருக்கும்.  இல்லை  கிணற்றில் போட்ட கல்லாகும்.  திலீப் மறுநாளே, பதில் எழுதி, ஆச்சரியப்படுத்தினார்.
உடனே, அசோகமித்திரனின் சிறுகதை தொகுதிகள், புலிநகக்கொண்றை, ராஜ் கௌதமன் எழுதிய காலச்சுமை, சிலுவைராஜ் சரித்திரம் முதலிய புத்தகங்களை வாங்கினேன்.  திலிப் அவர்கள், புத்தகங்களை என் சகோதரரின் பெங்களூர் முகவரிக்கு அனுப்பி வந்து சேர்ந்ததை உறுதிப்படுத்தும் வரை என்னுடன் மின்னஞ்சலில் தொடர்பு வைத்த்திருந்தார்.  மறுபடியும் அவர் கொடுத்த பட்டியலில் இருந்து,ஜெயகாந்தன் சிறுகதைகள் முழுத்தொகுதிகி ராஜநாராயனணின் சிறுகதைகள் முழுத்தொகுதிபுஷ்பராஜாவின் ஈழ போரட்டத்தில் எனது சட்சியம் ஜெயகாந்தனின் சிந்தையில் ஆயிரம் ஜெயமோகனின் காடுகாலவரிசைபடுத்தப்பட்ட பாரதி படைப்புகள்(1 - 4 தொகுதிகள்)T ஜானகிராமனின் சிறுகதைகள் முழுத்தொகுதிஆக மொத்தம் ரூ4000/- சொச்சத்துக்கு வாங்கினேன்(மொதத செலவும் என் சகோதரருடையது :-) ). 
மனம் திருப்தியாக இருந்தது, தமிழில் இவ்வளவு மகத்தான தொகுதிகளை வாங்கியதில்.  அடுத்த முறை ஊர் செல்லும்போது, எடுத்து வருவதாக முடிவு செய்துள்ளேன்.

Saturday, July 24, 2004

Feast of the Goat

Mario Vargas Lloasa-வின் அற்புதமான புத்தகங்களில் ஒன்று.  சாரு நிவேதிதாவின் கோணல் பக்கங்களின் மூலமாக எனக்கு அறிமுகமான எழுத்தாளர்.  ஸ்பானிய மொழியில் எழுதும் எழுத்தாளர்களில் இவரும் Gabriel Garcia Marquez-ம் முக்கியமானவர்கள்.

கதை த்ருஃலோ என்ற டொமினிகன் சர்வாதிகாரியின் ஆண்ட காலத்தையும்(1940- 60கள் ஆரம்பம்) அவர் கொல்லப் பட்டபின் நடந்த கொடூரங்களைப் பற்றியும் பேசுகிறது.  லோஸாவின் திறமையான கதை அமைப்பில், புததகம் நம்மை கட்டிப் போடுகிறது.  ஆங்கில மொழி பெயர்ப்பும் அதற்கு ஒரு காரணம்(சமீபத்தில் நாகூர் ரூமியின் கால்வினோ கதைகளை மொழி பெயர்தத விதம் பற்றி எழுதிய கட்டுரை இங்கே நினைவுக்கு வருகிறது).

லோஸா கதையை மூன்று கோணங்களில் விளக்குகிறார்.  முதல் கோணம், யுரானிதா மூலம்.  இவள் தந்தை த்ருஃலோவின் ஆட்சியில் அமைச்சராக இருந்து, அந்த சர்வாதிகாரியால் பதவி இறக்கப்பட்டவர்.  யுரானிதா அவரை 35 வருடங்களுக்குப் பிறகு சந்திக்கிறாள்.  இப்பொது அவள் தந்தை ஒரு செல்லாக்காசு.  யுரானிதாவுக்கு அந்நிலை ஒரு குரூரம் கலந்த திருப்தியை தருகிறது.  தந்தையை சந்தித்து பழைய நிகழ்ச்சிகளை நினைவூட்டுகிறாள்.  தந்தையோ பாம்பைக் கண்டதைப் போல் நடுங்குகிறார்.

இரண்டாவது கோணம் த்ருஃலோவை கொலை செய்யக் காத்திருப்பவர்கள் மூலம்.  இந்த கும்பலில் இராணுவ அதிகாரிகள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.  ஒவ்வொருவரும் ஏன் கொலை செய்ய முடிவெடுத்தார் என்பதை விளக்கும் கோணம் இது.

இரண்டாவது கோணத்தின் நீட்சியாக த்ருஃலோ கொலை செய்யப்பட்டபின் அவரது மகன் பொறுப்பேற்று, கொலையாளிகளைப் கண்டுப்பிடித்து சித்திரவதை செய்வது.  இரண்டு பேர்களைத் தவிர மற்ற அனைவரும் பிடி படுகிறார்கள்.   சித்திரவதை முறைகள் புத்தகத்தில் விரிவாக இடம் பெறுகின்றன.  இருதய பலவீனர்கள் படிக்காதிருப்பது நலம்.   முழு விவரங்களும் எழுத இயலவில்லை என்று லோஸா ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

மூன்றாவது கோணம் த்ருஃலோவின் இறுதி நாள்.  அவரின் காலை உடற்பயிற்சி முதல் இரவில் நெடுந்சாலையில் கொலை செய்யப்படும் வரை.  சர்வாதிகாரிகள் பொதுவாகவே தற்பெருமை கிறுக்கர்களாகவே இருப்பர்.  த்ருஃலோவும் விதி விலக்கல்ல.  தன்னால்தான் நாடு சீரும் சிற்ப்புமாக இருப்பதாக மனப்பால் குடிக்கிறார்.  தன் ஆட்சியை தட்டிக் கேட்கும் எவரும்-ஆண், பெண் வித்தியாசம் இல்லை- அதிர்ஷ்டம் செய்திருந்தால் அவர் மட்டும் இறப்பார்.  இல்லையென்றால் குடும்பத்தோடு இவ்வுலகை விட்டு செல்வார்கள். 

இப்படிப்பட்ட ஒரு மனிதனின் இறுதி நாளில் நடக்கும் நிகழ்ச்சிகள், அதனோடு தொடர்பு கொண்ட இறந்த காலம் இந்த கோணத்தில் சொல்லப்படுகிறது.

லோஸா ஒவ்வொரு கோனத்திற்க்கும் ஒரு அத்தியாயம் ஒதுக்குகிறார்.  முதலில் இது படிப்பவரை சற்று குழப்பினாலும் போக போக நம்மால் ஒன்ற முடிகிறது.  வரிக்கு வரி த்ருஃலோவை நினைக்க வைக்கிறது-எவ்வாறு அவரின் ஆளுமை நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் நிறைந்திருந்ததோ!.  என்னை பொறுத்தவரை புத்தகத்தின் சிறப்பான பகுதிகள் யுரானிதா அவள் தந்தையை வார்த்தைகளால் வாட்டும் இடங்கள்.    கதை மாந்தர்கள் பலரை என்னால் நம் இந்திய நாட்டு அரசியல் வாதிகளுடன் ஒப்பிட முடிந்தது.  ஏன் என்பதை நீங்கள் புத்தகத்தைப் படித்தால் புரியும்.

Hollywood இயக்குநர் க்வெண்டென் டாரண்டினோ இயக்கிய படங்கள் எல்லாமே படம் ஆரம்பித்த நூலிழையைக் கொண்டு மற்ற நிகழ்வுகளை(கடந்த காலம், நிகழ் காலம்) சொல்லும்.  இந்த புத்தகமும் அவ்வாறே செல்கிறது. 

A fine balance-க்குப் பிறகு ஒரு அற்புதமான புததகம்.


Monday, July 12, 2004

இந்தியாவில் மனித உரிமை

சமீபத்தில் Cynthia Mahmood எழுதிய Fighting for Faith and Nation: Dialogues With Sikh Militants படித்தேன். 1970- 80களில் கொழுந்து விட்டு எரிந்த காலிஸ்தான் பற்றிய புத்தகம். பல காலிஸ்தான ஆதரவாளர்களின் குரல் அதில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் 90-களின் மத்தியில்தான் மனித உரிமை கழகங்களின் குரல் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்தன. அதுவரை, வடக்கே நடப்பது தெற்கே தெரிவது கடினம். தெற்கிலிருந்தும் வடக்கே அவ்வாறே. 1946- 47 களில் நடந்த இனப் படுகொலைகளிலிருந்து கோத்ரா கலவரம் வரை அரசு தன்னுடைய பிரசார வாகனங்களால் அதன் உரிமை மீறல்களை மறைத்து வெற்றி கண்டுள்ளது.

எந்த பத்திரிக்கைகளும் அரசின் மனித உரிமை மீற்ல்களை வெளிக் கொண்டு வர முடிந்ததிலை. மீறும் பத்திரிக்கைகளின் ஆசிரியர்களை மாநிலம் விட்டு மாநிலம் கூட கைது செய்ய முடியும். ஆகவே செய்திகள் முழு உண்மைகளுடன் வெளி வருவதில்லை.

இந்த வகையான அறிவு நிலையுடன் இந்த புத்தகத்தை எடுதத படிப்போரை, இந்தப் புத்தகம் இரண்டு நிலைக்குத் தள்ளும்.
1) இந்தியாவில் மனித உரிமை மீறல் உண்டு.
2) இந்த புத்தகதை எழுதியவர் மனநிலை சரியில்லாதவர்.

என்னால் முதல் நிலை எடுக்க முடிந்தது.

மேலே தொடரும் முன், நான் ஒரு இந்தியன். இந்தியாவின் சாதனைகளில் எவ்வளவு பெருமை அடைகிறேனோ, அதன் சிறுமைகளில் தலை குனிபவன்.   மேலே படிக்கும் முன், இந்த தன்னிலை விளக்கம் அவசியமாகிறது.

இந்த புத்தகம் காலிஸ்தானத்திற்க்கு அதரவோ அல்லது எதிர்நிலையோ எடுக்கவில்லை.  இதன் முக்கிய நோக்கம் மனித உரிமைகள் எவ்வாறு மீறப்பட்டன என்பதைப் பதிவு செய்வது மட்டுமே.

புத்தகத்தில் வரும் ஒவ்வொரும் சீக்கிய மதத்தில் அழ்ந்த நம்பிக்கைக் கொண்டுள்ளணர்.  இயல்பாகவே, இந்திய அரசாங்கத்தின் மீது கோபம் கொண்டுள்ளனர்.  இது, 1947-லிருந்து புகைவது.  நாட்டின் தானிய களஞ்சியமாக தங்கள் மாநிலம் இருக்க, மற்ற மாநிலத்தவர் பயன் பெற்று வந்தது முக்கியக் காரணம்.  இதை பிந்தரன்வாலே ஊதி விட தனி நாடு கேட்கும் நிலை வந்தது.  அயுதம் எடுக்கப்பட்டது.  பொற்கோவிலில் இராணுவம் நுழைய, பற்றியது தீ.

தீவிரவாததை பின்பற்றியவர்கள் சொல்லும் முதல் காரணம் இராணுவம் நுழைந்தது.  சீக்கியர்கள் அல்லாதவர்கள் கொல்லப்பட்டதை அனைவரும் கண்டனம் செய்கிறார்கள். ஆனால் ஆயுதங்கள் எங்கிருந்து வந்தது என்பதற்க்கு மட்டும் மௌனம் பேசுகிறது. பாகிஸ்தான் என்பது உள்ளங்கை நெல்லி.

அரசு இயந்திரமும் இவர்களை தீவிரவாதத்துக்கு தள்ளி இருக்கிறது.  எண்கௌண்டர் என்ற பெயரில் சிறையில் இருந்தவர்களை கொன்றது முதல் 50 வயது பெண்மணிகளைக் கூட சிறையில் மானபங்க படுத்தியது வரை.  புததகதின் முதல் அத்தியாயத்தில், ஒரு முதியவர் கண் கலங்கி தன் மனைவி சிறையில் எவ்வாறு கொடுமைப்படுத்தப் பட்டார் என்பதை பதிவு செய்யும் இடம் உங்களை இந்தியாவைப் பற்றித் தலை குனிய வைக்கும்.

அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்.