Wednesday, December 29, 2004

Delhi

குஷ்வந்த் சிங்கின் Delhi சமீபத்தில் படித்தேன். குஷ்வந்த் சிங்கின் எழுத்துக்கள் என்னைக்க் கவர்வதற்கு காரணங்கள் இரண்டு. ஆங்கிலத்தின் சுஜாதா இவர். சொல்ல வந்த விஷயத்தை எளிமையாக பாமரனுக்கும் புரியும் ஆங்கிலத்தில் சொல்வது. இந்திய வரலாற்றை ஒட்டிய நாவல்களை எழுதுவது(Train to Pakistan, I shall Not hear the Nightingale).

Delhi அவரின் தலைசிறந்த நாவல். 20 வருடங்கள செலவழித்து எழுதப்பட்டது. கதையின் நாயகன்/நாயகி டெல்லி நகரம். ஆண்மையும், பெண்மையும் இனைந்த ஒரு உருவம். இதை ஒரு சுற்றுலா வழிகாட்டி(சீக்கியர்) மூலம் அதன் சொரூபத்தைக் காட்டுகிறார். வழிகாட்டியின் தோழியாக ஒரு அரவாணி. Delhi நகரத்தைப் போன்றவள்.

கதையானது, 1265, சுல்தான்கள்(பால்பன், கில்ஜி போன்றவர்கள்) காலத்தில் தொடங்கி, 1984 அக்டோபர் 30-ந் தேதியோடு முடிகிறது. நகரம் சந்தித்த மகோந்நதங்கள், தோல்விகள், சோகங்கள், துரோகங்கள், போர்கள், அபத்தங்கள், கொடூரங்கள் அந்த அந்த காலப் பாத்திரங்கள் மூலம் பதிவு செய்யப்படுகின்றன.

குஷ்வந்த் சிங்கின் ஆங்கிலம் வாசகனோடு உரையாடும். நான்கு வார்த்தைகளுக்கு ஒரு வார்த்தை அகராதியைத் தேடி ஓட வைக்காது. ஆனால் அவரின் எழுத்துக்கள் உணர்வுப் பூர்வமானது. மிகச் சிலருக்கே அது சாத்தியமானது. வரலாற்றைப் படித்து அதை அப்படியே வாந்தி எடுக்காமல் கதை மாந்தரின் உணர்வுகள் ஊடாக வரலாற்றைப் போதிப்பது சிங்கின் கை வந்த கலை.

ஒரு உதாரணம் : காந்தியை வேவுப் பார்ப்பதற்கு ஆர். எஸ். எஸ். தலைவர் ஒரு தொண்டரை அமர்த்துகிறார். காந்தியின் செயல்கள் அத்தொண்டருக்குப் பிடிப்பதில்லை. இத்தொண்டர் பிரிவினையில் தன் தங்கையை பாகிஸ்தானியர்களிடம் பறி கொடுத்து, பின் ஆர். எஸ். எஸ்-ல் சேர்ந்து, ஒரு இஸ்லாமியரை அவர் கடை வாசலில் கொன்றவர். காந்தி இஸ்லாமியர்களிடம் காட்டிய பரிவை வெறுப்பவர். 1948 ஜனவரி 30-ம் நாள் காந்தி சுடப்படும்போது, அத்தொண்டர் அருகே இருக்க நேர்கிறது. சுடப்பட்டவுடன் காந்தி சரிய, அத்தொண்டர் சுட்டவனைப் பிடித்து நையப் புடைக்கிறார். எழுதக் கூசும் வார்த்தைகளால் அவனை அருச்சித்து விட்டு, ஒரு இடத்தில் அமர்ந்து அழுதுக் கொண்டிருப்பவரை மக்கள் காரணம் கேட்க,

தொண்டர் : 'என் தந்தை இறந்து விட்டார்.'
மக்கள் : 'நல்ல மகன் நீ...எப்படி இறந்தார், உடல்நிலை சரியில்லையா?'
தொண்டர் : 'இல்லை...அவரைக் கொன்றது நானே!'

இதைப் போன்ற பாத்திரங்களின் செயல்களை அங்கங்கே படிப்பவரின் மனதில் கேள்விகளைக் கேட்க வைக்கும் எழுத்துக்கள் இந்நாவலை மீண்டும், மீண்டும் படிக்க வைக்கும்(நான் படித்தது மூன்றாவது முறை).

நாவல், பல பாத்திரங்கள் மூலம் வரலாற்றைப் பார்க்கிறது. முஸாதி லால் சுல்தான்களையும், தைமூர் இந்தியப் படையெடுப்பையும், ஒரு சீக்கியர் ஔரங்கசீப் பற்றியும்(குரு கோபிந்த் சிங்கின் தலை சீவப்படும் நிகழ்ச்சி உட்பட), பின் ஔரங்கசீப் தன் வரலாற்றைப் பதிவு செய்வது, 1857 சிப்பாய் கலகத்தில் நடந்த அட்டூழியங்கள்(ஆங்கில மற்றும் இந்திய தரப்பு- சுஜாதாவின் 'ரத்தம் ஒரே நிறம்' கதையும், இதைப் பற்றிப் பேசியிருக்கிறது), பின் ஆங்கில ஆட்சியில் புது தில்லி எவ்வாறு உருவானது, சுதந்திரக் கலவரங்கள் தொடங்கி, இந்திராகாந்தி கொலையின் இனக் கலவரங்களில், கதை நாயகரின் வீட்டுக் காவலரை தீயிட்டுக் கொளுத்துவதோடு முடிகிறது.

என்னைப் பொறுத்தவரை, தில்லி நகரம் ஒரு சிறுபான்மை இன மக்களின் முகத்தைக் கொண்டுள்ளது. தனக்கென்ற ஒரு தனித் தன்மையுடன் வாழ்வதிலிருந்து, எந்தக் கலகம் என்றாலும் அடி வாங்குவது வரை.

முகலாயர்கள் சரித்திரம் எனக்குப் பிடிக்கும் என்பதால் தில்லி நகரமும் பிடித்தமானது. செங்கோட்டையில் என் மாமா ஒரு அழகான மண்டபச் சுவர்களில் பொத்தல்களைக் காட்டி அங்கிருந்தவை உயர்ந்தக் கற்கள் என வருத்தப்பட்டப்போது, காரணம் இல்லாமல் யார் மீதோ கோபம் வந்தது.

தில்லி நகரம் உங்களுக்குப் பிடித்தால், இந்தப் புத்தகமும் பிடிக்கும்.

3 comments:

உண்மை said...

I am going to get this book during my next visit to India and read it. I like Delhi and I spent close to 8 years in Delhi.

thanks for the review.

- Unmai

உண்மை said...

I am going to get this book during my next visit to India and read it. I like Delhi and I spent close to 8 years in Delhi.

thanks for the review.

- Unmai

surendar said...

Hi sir,


i have been searching this book in and around of chennai for the last six moths. so far, i can not get this book. could you tell me where this book( delhi )is available ?