Showing posts with label மாமல்லன். Show all posts
Showing posts with label மாமல்லன். Show all posts

Wednesday, February 09, 2011

கவித, கவித

சிற்றிதழ்களைப் படிக்க ஆரம்பித்தக் காலங்களிலிருந்தே கவிதை என்றால் கருணாநிதி ஜெயலலிதாவைப் பார்ப்பது போலத்தான் (மாற்றியும் கொள்க). சுஜாதா கவிதை என்பது உங்களை, உங்கள் மனதை சற்று நெருட வைக்க வேண்டும் என்பார். அதையும் மீறி சில கவிதைகளைப் படித்து டி. ஆர் கணக்காகக் கத்தியது உண்டு.


உயிர்மை தளத்தில் மனுஷ்யபுத்திரனின் பேட்டி ஒன்றில் என்னை மாதிரியான வெறுப்பர்களுக்கு மிக அழகாக ஏன் கவிதை எல்லோருக்கும் அல்ல என்று சொல்லியிருந்தபோது, ஒளி வட்டம் எனக்கு வந்தது. அன்றிலிருந்து கவிதையைப் படிப்பேன். சில வரிகள் சட்டென்று இழுக்கும். பலவற்றை படித்துவிட்டு எந்தப் பாதிப்பும் இல்லாமல் கடந்துவிடுவேன்.


கவிதை என்பது என்ன? என்னைப் பொறுத்தவரை, பக்கம் பக்கமாக எழுதுவதை 3-10 வரிகளுக்குள் படிப்பவனுக்குப் புரியவைத்து அவனை அதற்குள் இழுத்துவிடுவது. அபூர்வமாக அவ்வாறு மாட்டி சில நாட்கள் என்னை அசை போடவைக்கும். உதாரணமாக புலிக்கூண்டைத் திறக்கப் போகும் சிறுமி பற்றி மனுஷ் எழுதி சாரு-வின் தளத்தில் வந்தது. ஒரு முழுப் புத்தகமாக எழுத வேண்டிய ஒரு சமூகப் பிரச்னையை மிக அற்புதமாக ஒரு கவிதையில் வடித்த மனுஷ்-க்கு ஒரு சலாம்.


அது போல இன்று மாமல்லனின் http://www.maamallan.com/2011/02/blog-post_2764.html இருக்கும் பிரமிளின் கவிதையில் இருக்கும் இந்த வரிகள் (மாமல்லன் ஆட்சேபித்தால் எடுத்து விடுவேன்) :


...

ஆடையின் இரவினுள்
உதயத்தை நாடும்
பருவ இருள்.
....


இந்த மூன்று வரிகளுக்குள் உயிரின் தத்துவத்தை விவரித்த பிரமிளின் திறமையை விவரிக்க முடியவில்லை. கடவுள் உலகத்தைப் படைத்து, ஆதாம்/ஏவாள் படைத்து, உயிரினங்களை உண்டாக்க வழி செய்ய, மற்றொரு புறத்தில் டார்வினியன் தத்துவம் அதைப் புரட்டிப் போட்டு அறிவியல் வழியே காட்ட, கவிஞன் ஒருவன் மூன்றே வரிகளில் உயிரினத்தின் ஆதி கால உணர்ச்சிகளை சுட்ட முடியுமானால் அவனே கடவுளாகுக.