Showing posts with label திரைப்படம். Show all posts
Showing posts with label திரைப்படம். Show all posts

Sunday, September 20, 2009

வார இறுதியில் - 4

திரை: உன்னைப் போல் ஒருவன் - கமல் படம் என்றாலே கொஞசம் பயம்தான். வித்தியாசமாக எடுக்கிறேன் பேர்வழி என்று பல முயற்சிகளையும் ஒரே படத்தில் திணித்துத் தொலைப்பார். ஃப்ரேமுக்கு ஃப்ரேம் தன் ஆளுமை இருக்க வேண்டும் என்ற வலுக்கட்டாயம் வேறு. படத்துக்குப் படம் தேவையில்லாத ஒப்பனை என்ற பெயரில் திரைப்படத்தையே கேலிக்கூத்தாக்குவது.

உன்னைப் போல் ஒருவன் அறிவிக்கப்பட்டவுடனே எனக்குத் தோன்றிய முதல் எண்ணம் ‘ஐயோ’. நஸ்ருத்தீன் ஷா-வின் தீவிர ரசிகனுக்கு இதுதான் தோன்றும். ரஜினி (அதுவும் பீ வாசுவோடு) அறிவித்திருந்தால் யாருக்குமே துறவறத்தில் நம்பிக்கை வந்திருக்கும். கமல் என்பதால் முதல் பத்தி நினைவுக்கு வந்தது.

மோகன்லால் நடிக்கப் போகிறார் என்றதும் ‘ஐயோ!ஐயோ!’. கமலின் படங்களில் இதுவரை நாசர், நாகேஷ் தவிர்த்து எவரையும் கமல் dominate செய்ய விடமாட்டார் என்பதால் மோ. லா மேல் பரிதாபம்தான்.

இந்த மனநிலையோடு படம் பார்க்கப் போனால் வெளியே வரும்போது ஆச்சரியத்துடன் வந்தேன்.

முதலில் கதை. சாதாரண மனிதன் தீவிரவாதத்தைக் கண்டு கோபம் கொண்டால் என்னாகும் என்பது ஒரு வரி கதை. அவனும் தீவிரவாதத்தைக் கையில் எடுத்தால் ஒரு நகரத்தையே தன் கைக்குள் கொண்டு வந்து, பலமான காவல் துறையைத் தன் கட்டை விரலால ஆட்டுவிக்கலாம், தீவிரவாதிகளை நம்ப வைத்து கழுத்தறுக்கலாம் என்று நம்ப முடியாவிட்டாலும் கொஞசம் practical-ஆக யோசித்திருப்பது தமிழுக்கு புதுசு.

இரண்டாவது துணைக் கதாபாத்திரங்கள்: லஷ்மி முதல் ரஃபிக் என்ற நபர் வரை செய்த பாத்திரத் தேர்வு. மிகக் கச்சிதமாக அவரவர் தங்கள் வேலையை செய்து முடிக்கிறார்கள். படம் முழுக்க வரும் இரண்டு காவல் அதிகாரிகளைக் குறிப்பிடவேண்டும். சேது மற்றும் ஆரிஃப். சேது ஒரு சாதாரண மனிதன் குடும்பத்துக்கும், வேலைக்கும் இடையே ஊடாடுவதைக் கண் முன் நிறுத்துகிறார்.

ஆரிஃப் கொஞ்சம் Dirty Harry ஸ்டைலில் தடாலடி வேலைகளுக்கு உதவுகிறார். அதுவும் தன் இன்ஃபார்மரிடம் பரிவுடன் கலந்த கண்டிப்புடன் பேசும்போதும், அந்த இன்ஃபார்மரை ஆஸ்பத்திரிக்கு அனுப்ப தாடையை உடைக்கும் போதும் Character சரியாக் build ஆகிறது. ஆனால் என்ன காரணத்திற்காக எப்போதும் மின்சார கம்பியைத் தொட்டுக் கொண்டிருப்பவர் போல இருக்க வேண்டும் என்று புரியவில்லை. போதை ஆசாமியைப் புரட்டப் போகிறார் என்று நம்மை நினைக்கவைத்து குரல் கடுமையிலேயே அவனிடம் விஷயம் கறக்க வைக்கும் இடம் கதை + டைரக்‌ஷனின் சிறப்பு. இந்த நடிகருக்கு நல்ல இயக்குநர் அமைந்தால் அஜீத், விஜய் போன்ற முட்டாள் கோமாளிகளை ஒதுக்கி வலம் வருவார்.

மூன்றாவதாக: கமல், லால் மற்றும் லஷ்மி: கமல் நடிப்பை விட அவரின் உடல் மொழிதான் சட்டென்று மனதில் பதிந்தது. அறிமுகக் காட்சியில் தலை, கை, வால் என்று காட்டாமல் சாதாரணமாக அறிமுகம் ஆவதும், நன்றாகத் தேர்ந்த பொறியாளர் போல வெடிகுண்டு செய்யும் சாதனங்களைக் கையாள்வதும், ஒரு விதமான தளர்ந்த நடையுடன் ஒவ்வொரு பையையும் தூக்கிக்கொண்டு நடப்பதும், எல்லா வெடிகுண்டு பைகளையும் வைத்து விட்டு கீரை, தக்காளி என்று மனைவி கொடுத்த லிஸ்ட் படி வாங்குவதும் என்று இவரின் பாத்திரம் சரியாக செதுக்கப்படுகிறது.

அதோடு கமல் நிஜமாகவே கொஞ்சம் ஒதுங்கி மற்ற இருவரும் dominate செய்ய அனுமதித்திருக்கிறார். லாலும், லஷ்மி-யும் ஆரம்பத்திலிருந்தே அவர்களின் கோட்டுக்குள் இருந்து கொண்டே மற்றவரைக் கவிழ்க்கும் வேலையை செய்கிறார்கள். சிக்கலான வேலையை மற்றவர்களிடம் தள்ளிவிட்டு தான் பலி ஆடாகாமல் தப்புவது என லஷ்மி விளையாட, தனக்குக் கொடுக்கப்பட்ட அதிகாரத்தைத் தேவையான இடங்களில் சுட்டிக்காட்டி லஷ்மியை back-off செய்வது என லால் திருப்பித்தாக்கும் கட்டங்கள் மிக சுவாரசியம் (அவ்வப்போது கருணாநிதியின் தொலைப் பேசி அழைப்புடன்!).

நடப்பு அரசியலை இவ்வளவு துணிவாக (அதுவும் தமிழ்நாட்டில் இருக்கும் குறைவான சகிப்புத்தன்மையை நினைவில் கொண்டால்) எடுத்தாண்டது இதில்தான் முதலில் பார்க்கிறேன். சங்கரின் படங்கள் சமூகப் பிரச்சினைகளைப் பேசுகிறேன் என்று கேலிக் கூத்தாக்கும். லஷ்மியோடு மோகன்லால் மோதும் இடங்கள் பதவிகளில் உள்ள அரசியல் நீங்கள் கதிரியக்க மழையில் நனைந்தாலும் இருக்கும் என்பதைக் காட்டும். B+ தரமுள்ள ஹாலிவுட் படங்களில் இது போன்ற காலை வாரும் அரசியலைப் பார்க்கலாம். தமிழில் அதைத் திறமையாகக் கையாண்டிருக்கிறார்கள்.

கதையில் காட்டப்படும் இடங்கள் கதையின் இறுக்கத்துக்கு உதவுகின்றன. கமலின் control room வெட்டவெளி என்றால், மோகன் லாலின் Situation Room இறுக்கமாக அடைப்பட்ட இடம். இறுதிக்காட்சியில் காட்டப்படும் காலியாக பரந்துக் கிடக்கும் விமான நிலையம், சேதுவின் மனைவி பயணிக்கும் ரயிலில் அவர்களிக் இருக்கைகள் மட்டும் என்று காமிரா தேவையான் பகுதிகளை மட்டும் தன் ஃப்ரேமுக்குள் அடக்குகிறது.

இறுதியாக இசை: ஸ்ருதி ஹாசன் என்பதால் நம் மக்கள் ரொம்பவே எதிர்ப்பார்த்தார்கள் என்று தெரிகிறது. இது போன்ற படங்களுக்கு இசை என்பது மிகக் கொஞ்சமாக இருக்க வேண்டும். கதாபாத்திரங்கள் சரியாக அமைந்து விட்டால் அவர்களின் நடிப்பே தேவையான பதற்றத்தை வரவழைத்து விடும். இது இசை அமைப்பாளர் உணர வேண்டும். ஆனால் படத்தில் மித மிஞ்சிய இசை. காட்சியின் பதற்றத்தை அதிகரிக்கிறேன் பேர்வழி என்று பாஷன் ஷோவில் வரும் இசையைப் போன்று போட்டுத்தாக்கியிருக்கிறார் (இதில் அதிகாரிகள் Bullet Proof vest அணியும்போது Michael Jackson-ன் Billy Jean ட்யூனில் இசை வேறு). இவருக்கு நான் சொல்லுவது, உதிரிப் பூக்கள் படத்தில் இளையராஜாவின் பிண்ணனி இசை (அதுவும் விஜயன் தன் மச்சினியைப் பார்க்கும் போது வரும் இசை). Better luck next time.

படம் என்று எடுத்துக் கொண்டால் கமலுக்கும், தமிழுக்கும் ஒரு நல்ல படம் என்பது மறுக்க முடியாது.



Monday, March 23, 2009

Paradise Now

பல நாட்களாக எழுத வேண்டும் என்று நினைத்து இன்று இதைப் பற்றி:

Paradise Now : இதைப் பற்றி Boston Globe-ல் படித்தவுடன் பார்க்க வேண்டியப் பட்டியலில் இருந்து, Netflix மூலமாகக் கிடைத்தது. 

மத்தியக் கிழக்கு நாடுகளின் மீது அராபியப் பாலைவனத்தைப் புகைப்படங்களில் பார்த்த நாள் முதலாக ஆர்வம் வந்தது.  பின் இஸ்ரேலின் 1970-80-களின் வீரச் செயல்கள் வாயிலாக.  பின் இயல்பாகவே வரலாற்றின் மீது வந்த ஆர்வம் மேற்கத்தியப் புத்தகங்கள் வழியே.  படித்த வரையில் இஸ்ரேல் கண்ணோட்டத்தில் கிடைத்தப் புத்தகங்களே அதிகம்.

இந்த நிலையில்  The Angry Arabs என்ற புத்தகம் நூலகத்தில் கிடைத்தது.  அராபியர்கள் கண்ணோட்டத்தில் இஸ்ரேலியப் பிரச்சினையை அலசியது.  ஏன் அராபியர்களால் இஸ்ரேலை ஒப்புக் கொள்ள இயலவில்லை (1970-களில் எழுதப்பட்டது) என்பதை ஆசிரியர் தீர்க்கமாக வாதம் புரிந்திருந்தார்.

இதன் பிறகு பாலஸ்தீனப் போராட்டத்தை மிக அற்புதமாகக் காட்டிய Tom Friedman-ன் From Beirut to Jerusalem புத்தகம்.  இன்றும் மத்தியக் கிழக்கு புத்தகங்களுக்கு Bible என்று சொல்லலாம்.

அதுபோல படங்களின் வரிசையில் Paradise Now.

கதை: சயீத், காலித் நண்பர்கள்.  இருவரும் கார் மெக்கானிக்குகள்.  West Bank-l உள்ள Nabulus நகரம் அவர்கள் வசிப்பிடம்.   ஒரு நாள் இருவருக்கும் அவர்கள் சார்ந்திருக்கும் அமைப்பிலிருந்து மகிழ்ச்சியான செய்தி வருகிறது.  அவர்கள் Tel Aviv-ல் மனித வெடிகுண்டுகளாக வெடிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அதன் பின் நட்க்கும் 36 மணி நேர நிகழ்வுகள் கதை.

சயீதை சுஹா என்ற பெண் ஒருதலையாகக் காதலிக்கிறாள்.  சயீத் தான் ஒரு நாள் மனித வெடிகுண்டாகப் போகிறோம் என்பதால் அவளைத் தவிர்க்கிறான்.  சயீதின் இறந்தகாலம் அவனை தீவிரமாக அந்தப் பாதையில் செலுத்துகிறது.


சயீதும், காலீதும் வீட்டில் சொல்லாமல் தலைமையகத்துகுச் சென்று குண்டுகள் பொருந்திய உடையை அணிந்து, யூதர்கள் போல வேடமிட்டு இஸ்ரேல் எல்லையைக் கடக்க முயலுகிறார்கள்.  கடக்கும் நேரம் எல்லைப் பாதுகாப்பு படையின் கண்களில் பட்டு விட, நடக்கும் களேபரத்தில் சயீத் இஸ்ரேல் பக்கமும், காலீத் West Bank பக்கமும் பிரிந்து விடுகின்றனர்.

காலீத் அவர்களின் தலைவனிடம் இதை தெரிவிக்க, தலைவன் குண்டு வெடிப்பைத் தள்ளிப் போடுகிறான்.  இதனிடையில் சுஹாவுக்கு இவர்களின் செயல்கள் தெரிய, அவள் காலீதுடன் வாதம் செய்து அவனின் மனதை மாற்றுகிறாள்.  இருவரும் சயீதைத் தேடி அலைகிறார்கள்.

சயீத் இஸ்ரேல் எல்லையிலிருந்து West Bank-னுள் நுழைந்து ஒரு இடுகாட்டில் ஒய்வாக இருக்கும்போது காலீதும், சுஹாவும் அவனிடம் வேண்டாம் என்று மன்றாடுகிறார்கள்.  சயீத் மறுத்து அவனின் தலைவனைப் பார்க்கப் போகிறான்.

படத்தின் மிக முக்கியமான கட்டம் என்று இதனைச் சொல்லலாம்.  தலைவன் சயீத் கடமையிலிருந்து தவறி விட்டான் என்று குற்றம் சாட்ட, சயீத் இன்னும் ஒரு வாய்ப்பு வேண்டும் என்று கேட்கிறான்.  அப்போது சயீத் தலைவனிடம், எப்படி ஒரு தேசம் பாதிக்கப்பட்டதாகவும் அதே சமயம் மற்றொரு இனத்தவரை கொடூரமாக அடக்கியாள்வதாகவும் இருக்கும் என்று புரியவில்லை என்கிறான்.

தலைவனை மனம் மாற்றி, மீண்டும் சயீத், காலீத்துடன் இஸ்ரேலுக்குள் போகிறான்.  இறுதியாக ஒரு பயணிகள் பேருந்தில் உடலைச் சுற்றிய வெடிகுண்டுடன், பிண்ணனியில் சில இராணுவ வீரர்கள் அமர்ந்திருக்க சயீத் காமிராவைப் பார்ப்பதோடு முடிகிறது.
 
கதையின் ஆரம்பத்தில் நடக்கும் வாதம் மத்தியக் கிழக்குப் பிரச்சினையைப் புரிய வைப்பதைப் போன்று தலையணைப் புத்தகங்களும், வெட்டிப் பேச்சு அறிஞர்களும் புரிய வைக்கவில்லை:

வாடிக்கையாளர்: என்னப்பா சயீத், முன் பக்கம் மட்கார்டு கோணலாக இருக்கே?

சயீத் (காரை உற்றுப் பார்த்தப்படி): இல்லீங்களே...

வா: அடப் போப்பா, சரியாப் பாரு.

(இப்போது காலீத்தும் பார்க்கிறான்)

காலீத்: மட்கார்டு ஒழுங்காத்தாங்க இருக்கு...கீழ தரைதான் கோணலா இருக்கு.

வா(சினத்துடன்): யோவ்...கிண்டலா?  தரையா கோணல்?  நீ கோணல், உங்கப்பன் கோணல்...

காலீத் கோபப்பட்டு ஒரு கல்லைக் கொண்டு வந்து காரின் முன் பக்கத்தை உடைக்கிறான் (உண்மையாகவே அவனின் தந்தையாரின் கால் ஊனம்). 

இதுதான் இன்று மத்தியக் கிழக்கில் நடந்துக் கொண்டிருக்கிறது...  காரை பாலஸ்தீனமாக உருவகம் செய்தால்.

படம் முழுக்க இது மாதிரியான கரிய அங்கதம் நிரவிக் கிடக்கிறது.

மற்றொரு காட்சியில் வெடிகுண்டுகளைக் கட்டுவதற்கு முன் தலைவன் அவர்களின் வீர உரையை வீடியோவில் பதிவுசெய்ய முயற்ச்சிக்கிறான்.  காலீத் உணர்ச்சி ததும்ப ஒரு கையில் துப்பாக்கியுடன் பேசி முடிக்க, கேமிரா மேன் தலையை சொறிய:

காலீத்: என்னய்யா?
கா. மே: நீ பேசினது எதுவும் பதிவாகலே, பாட்டரி தீர்ந்துடுச்சு.

சிரிப்பதா, அழுவதா என தெரியாமல் காலீத்...

சயீத்தையும் , காலீத்தையும் எல்லைக்குக் கூட்டிச் செல்லும் நண்பரிடம்:

காலீத்: வெடிகுண்டு வெடிச்சதும் என்ன ஆகும்?
நண்பர்: உங்களை தேவதை வந்து அழைத்துச் செல்லும்.
காலீத்: தேவதை வரும்னு உங்களுக்கு எப்படித் தெரியும்?
நண்பர் (யோசித்துவிட்டு): கேள்விப் பட்டுருக்கேன்.

இதைப் போல படம் நெடுகிலும் பாலஸ்தீனியத் தரப்பு கேள்விக்குட்படுத்தப் படுகிறதென்றால் இஸ்ரேலின் இருப்பு அங்கங்கே சாலைகளை மறித்து நிற்கும் இராணுவ கனரக வாகனங்களின் வழியே மூச்சு முட்ட வைக்கிறது.

கதைக்குள் கதையாக சயீதின் பிடிவாதம், அவனின் தாயார் அவனின் தந்தையைப் ப்ற்றிப் புரியவைக்க முயலுவது, காலீதின் தந்தையின் காலை இஸ்ரேலிய இராணுவம் முறிப்பது (’எந்தக் காலை நான் முறிக்கலாம் என்று நீயே முடிவு செய்து சொல்’), அமைப்பின் நண்பரின் மென்மையான குரல், சுஹாவின் காதல் போன்றவை திறமையாக ஊடுருவுகின்றன.

சயீதின் தீர்க்கமான, கேள்விகள் நிரம்பிய கண்கள் படம் பார்த்து கொஞ்ச நாட்களுக்கு சங்கடப்படுத்தும்.

பி.கு: கதாபாத்திரங்கள் பேசுவதை அப்படியே எழுதாமல் சிறிது மாற்றியிருக்கிறேன்,  மூலப் பொருள் சிதையாமல்.