Showing posts with label புத்தகம். Show all posts
Showing posts with label புத்தகம். Show all posts

Sunday, February 20, 2011

சிலுவைராஜ் சரித்திரம்

ஜெயமோகன் திண்ணையில் ஒரு மதிப்புரையில் ராஜ் கௌதமனின் இரு புத்தகங்களைப் (சிலுவைராஜ் சரித்திரம், காலச்சுமை) பற்றி எழுதியிருந்தார். எழுத்தாளர் திலீப்குமார் அனுப்பியிருந்த பட்டியலிலும் அது இருந்ததால் யோசிக்காமல் வாங்கினேன் (திலீப் அவர்களின் தேர்வில் எனக்கு நிறைய நம்பிக்கை).

முதல் புத்தகம் ‘சிலுவைராஜ் சரித்திரம்’. ஒரு தலித்தியக் குடும்பத்தில் பிறந்த ஒரு சிறுவனின் Biography. ஆசிரியர் சொல்லாவிட்டாலும் தன் வரலாறு என சந்தேகம் கொள்ள வைக்கும்.

சிலுவைராஜ் அனுபவங்கள் அங்கதத் தன்மையுடன் வயதுக்கேற்ற விடலைத்தனத்துடன் வளர்ந்தாலும் கதை முழுவதும் விரவியிருப்பது அவனின் காலனி வாழ்க்கையும், சாதி சமுதாய ஏற்றத்தாழ்வுகளும். எல்லா இடங்களிலும் சிலுவைக்கு அவனின் சாதி சுட்டப்படுகிறது. காலனியில் இருப்பவர்கள் சாதியால் ஒடுக்கப்பட்டாலும் கோபத்தில் மற்றவர்களைத் திட்டும்போது அவர்களை விட தாழ்ந்த சாதியர் பெயர் சொல்லித்திட்டுகிறார்கள். அந்த அனுபவங்கள்அங்கதம் கலந்த கோபத்தில் ஆசிரியரிடமிருந்து வெளிப்படுகிறது.

சிலுவை தன்னை ஒரு பாதிரியாரிடம் ‘பறையன்’ என்று திட்டு வாங்கும் இடத்தில் பொங்கி எழுந்தாலும், அதே சாதியை வைத்து இட ஒதுக்கீடு வரும்போது உபயோகப்படுத்திக் கொள்ள மறுப்பதில்லை. ஆசிரியர் சிலுவையின் practicality-ஐ தடுமாறாமல்/விளக்கம் இல்லாமல்/உறுத்தாமல் காட்டிச் செல்லும் இடங்கள் நிறைய.

சிலுவைக்கும் அவன் தந்தைக்கும் இடையிலான உறவு சிக்கல்கள், தந்தை ஊரிலிருந்து வந்தவுடன் தாய் சிலுவை அது வரை செய்த அழும்புகளை பட்டியலிட்டு அடி வாங்கி வைக்கும் இடங்கள், தந்தையை முறைக்கப் போய் மிதிபட்டாலும் அதே தந்தை சிலுவை 10-ம் வகுப்பு தேறியவுடன் சந்தோஷத்தில் கண்ணீர் வடித்து சிலுவையை ஆச்சரியப்படுத்துவது என்று தந்தை, மகன் உறவை abstract-ஆக படம் பிடித்திருப்பது.

புத்தகம் சிலுவை கல்லூரிப் படிப்பு வரை பதிவு செய்கிறது. அடுத்த பாகமான ‘காலச்சுமை’ சிலுவையின் அதன் பின்னான வாழ்க்கையைப் பார்க்கிறது.

தமிழினி வெளியீடு. நான் படித்தவரை இதை ஒரு முழுமையான தலித்திலக்கியமாக விமர்சகர்கள் பார்க்க மறுக்கிறார்கள். குணசேகரனின் ‘வடு’ இன்னும் மூர்க்கமாக தலித்திய வாழ்க்கையைப் பதிவு செய்திருக்கும் (அதைப் பற்றி பிறகு). என்றாலும் ராஜ் கௌதமனின் புத்தகம் எனக்குப் பிடிக்கக் காரணம், மிக இயல்பாக ஒரு படைப்பை snapshot-ஆகக் காட்டி படிப்பவரை அடுத்தத் தளத்திற்க்கு நகர்த்துவது.

’காலச்சுமை’ பற்றி பிறகு,

Thursday, February 04, 2010

Wolf Dreams

தஹர் பென் ஜெலோன்-ஐ அமேசானில் தேடும் போது யஸ்மினா காத்ரா கிடைத்தார். அரபிய இலக்கியங்களைப் படிக்க ஆரம்பிக்க இவரின் கதை களங்கள் சரியாக இருக்கும் என்று நினைத்தது சரியாகவே அமைந்தது. இவர் எழுதிய கால வரிசைப்படி Wolf Dreams நூலகத்திலிருந்து படிக்க ஆரம்பித்தேன்.


புதினங்கள் படிப்பதை சிறிது காலமாகவே நிறுத்தி வைத்திருந்தேன். அ-புதினங்கள் படிக்க வேண்டியவை அதிகமாகவும், கற்பனை கதாபத்திரங்களின் சோக/ஆனந்த/வருத்தம் போன்ற உணர்ச்சிகள் ரமணி சந்திரன் வாசகர்களுக்கு தாரை வார்த்து விட்டதாலும் புதினங்கள் கவரவில்லை. ஆனால் அரபு இலக்கியங்கள் பற்றி சாரு (ஆம்.. சிரிக்காதீர்கள்) எழுதியதைப் படித்த பின் கொஞ்சம் தேடியதில் 20-25 புத்தகங்கள் தேறியிருக்கின்றன. இதில் எச்சரிக்கையாக மேற்குலக எழுத்தாளர்களின் மத்திய கிழக்கு புதினங்களை விலக்கிவிட்டேன். அரபு நாடுகளிலேயே வாழ்ந்து அல்லது இப்போது அரபு எழுத்தாளர்கள் மற்ற நாடுகளில் அடைக்கலம் புகுந்து வாழ்பவர்களின் எழுத்துக்கள் மட்டுமே படிப்பதாக உத்தேசம்.

Wolf Dreams பேசுவது ஒரு சாதாரண குடிமகன் எப்படி தீவிரவாதியாகிறான் என்பது பற்றி. வாலித் ஒரு அமெச்சூர் நடிகன். அழகன். அவன் கனவில் அல்ஜீரியாவின் சிறந்த நடிகனாக கேன்ஸ் திரைப்பட விழாவில் பரிசு வாங்கப் போவதாகக் கனவு கண்டு, ஆனால் அந் நாட்டின் மிகப் பெரும் பணக்காரர் ஒருவரின் வீட்டில் கார் ஓட்டுனராக வேலைக்கு அமர்கிறான்.

வேலையில் சேர்ந்தவுடன் அவனுக்கு நல்ல சட்டைகள், சூட்கள் கிடைத்தாலும் நாயைப் போல எசமானர்கள் செல்லும் இடங்களில் காத்து நிற்கும் வேலை. எசமானரின் மகன், மகள் அனைவரும் இவனை ஒரு சாதாரண மனிதனுக்குக் கிடைக்கவேண்டிய மரியாதையைக் கூட கொடுப்பதில்லை. மகன் ஊரில் உள்ள விலைமாதர்களை அழைத்து வரும் வேலையைக் கொடுக்க, மகளோ தன் வருங்கால கணவன் இன்னொரு பெண்ணைப் பார்த்து இளித்ததற்கு தண்டனையாக இவனோடு உடலுறவு கொள்கிறாள். எசமானின் அந்தரங்க வேலைக்காரன் ஹமித் செய்யும் ஒரு குரூரமான செயலால் வாலித் அந்த வேலையை விட்டு ஒடி விடுகிறான்.

வாலித்-ன் துரதிஷ்டம் அவனின் எந்த ஒரு முயற்சியையும் பாதியில் முறிக்கிறது. அவன் விரும்பும் பெண் மத வெறி அண்ணனால் கொலை செய்யப்படுகிறாள். அவனின் சேமிப்பை ஒருவன் திருடுகிறான். இதற்கிடையில் அல்ஜீரியாவில் மத அடிப்படைவாதம் தீவிரமடைகிறது. வாலித் தன் நினைவின்றி பங்கேற்கும் ஒரு கலவரத்தால் போலீசிடம் சிக்குகிறான். அதுவே அவனை தீவிரவாதம் நோக்கி தள்ளுகிறது. முதல் கொலையை மதத்தின் பெயரால் செய்கிறான்.

பின் கொலைகள் செய்வது சுலபமாகி விடுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக ஒரு கூட்டத்துக்கே தலைவன் ஆகி, தன் தலைவன் இறந்தவுடன் அவரின் மனைவியை மணந்து, ஒரு முழு கிராமத்தையே( பெண்கள், குழந்தைகளையும்) கொல்லும் வரை அவனின் தீவிரவாதம் வளர்கிறது.

யஸ்மினாவின் கதை சொல்லல் எந்த மழுப்பலும் இல்லாமல் வாலித்-ன் கதையை ஒரே சீராக செலுத்துகிறது. இடையிடையே அல்ஜீரியாவின் வரலாறு கதையின் ஊடாக வருவதால் குழப்பமில்லை. அந் நாட்டின் வறுமை, மத தீவிரவாதிகளின் அணுகுமுறை, மக்களும், அரசும் தொடர்பில்லாமல் இருத்தல் போன்றவை நேரடியாக சுட்டப்படுகின்றன.

முதல் இரண்டு பாகங்கள் வாலித்-ன் மனப் போராட்டத்தை விரிவாக பதிவு செய்கிறது. மூன்றாம் பாகம் அவன் அதை சுத்தமாக துடைத்துப் போட்டு கூலிப் படைத்தலைவனாக மாற்றுகிறது. கதை இசுலாமிய தீவிரவாதத்தை விவரித்தாலும் வாலித் மதத்தை தான் செய்யும் கொலைகளுக்கு உபயோகிப்பதில்லை.

யஸ்மினா-வின் கதை சொல்லல் தெளிவாக இருந்தாலும் அல்ஜீரிய அரசியல் நிகழ்வுகள் சொல்லும் விதம் ஒரு கட்டத்திற்கு மேல் அலுப்பாகி விடுகிறது. ஆரம்பத்தில் அக்குறிப்புகள் உபயோகமாக இருந்தாலும் போகப் போக 'செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணசுவாமி' பாணியில் விளக்கப் படுகின்றன. தேர்ந்த கதை சொல்லி இதை பாத்திரங்கள் வாயிலாக வெளிப் படுத்தியிருப்பார்.

கதையில் மிகவும் சலனப்படுத்திய இடங்கள் வாலித் பங்கு கொள்ளும் இரு கொலைகள். ஒன்று அவனின் முதல், இரண்டாவது அவனுக்கு தெரிந்தவன். இறப்பவன் தான் இறப்பது தன் குழந்தைகள் முன்னால் என்பதைவிட வாலித் இதை நிகழ்த்துகிறான் என்பதுதான் அவனுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. அவன் கதறுவது:

"I don't believe it, not you Nafa..You're an artist...an artist"

தீவிரவாதியானதை விட வாலித் தன் வாழ்க்கையில் அடையும் தோல்வி இங்குதான்.

Monday, September 07, 2009

வார இறுதியில் - 2

Labor Day விடுமுறை என்பதால் திங்கட்கிழமை அன்று பதிகிறேன்.

அரசியல்: ராஜசேகர ரெட்டி இறப்பு யாருக்கு நஷ்டமோ இல்லையோ ஊடகங்களுக்கும், வேலையில்லாத உதவாக்கரைகளுக்கு இலாபம். ஒரு மாநில முதல்வர் மறைவுக்கு இந்தியா முழுவதும் துக்கம் (கட்டாயமாக) அனுஷ்ட்டிக்க வைக்கும் வியாதி இந்தியாவில் மட்டுமே உண்டு.

தொலைகாட்சியில் (வரவழைத்துக் கொண்ட கண்ணீருடன்)அழுது கொண்டே பேட்டிக் கொடுத்தவர்களையும், அவர்களை விடக் கேவலமாக தற்கொலை செய்து கொண்ட கோமாளிகளைப் பற்றியும் படித்துக் கொஞ்ச நேரம் பிரமித்திருந்தேன்.

அழுமூஞ்சிகளை விட்டு விடலாம். அரசியல் பொறுக்கிகளுக்கு அழுகை சகஜம். தற்கொலை செய்தவர்களின் மனநிலையைப் பார்ப்போம். எது இவர்களைத் தூண்டுகிறது? தாழ்வு மனப்பான்மை? ஒரு வேலைக்கும் உதவாமல் இருப்பது? படிப்பறிவின்மை? தன்னம்பிக்கை இல்லாமல் எவனோ ஒருவனைத் தலைவனாக நினைப்பது? எப்போதாவது ராஜசேகர் ரெட்டியைப் பார்த்திருக்கிறார்களா? அவரின் எந்த செயல் இவர்களைத் தூண்டியது? அவர்களுக்குத் தெரியுமா ஒரு அரசியல்வாதி செய்யும் வேலையில் 10-20% மட்டுமே மக்களை சென்றடைகிறது, மீதம் அவன் பையையும், அவனின் அல்லக்கைகளையும் சென்றடைகிறது என்று?

எது இந்தக் கோமாளிகளைத் தற்கொலை செய்யத் தூண்டியது?


அமெரிக்காவும் எட்வர்ட் கென்னடி-யின் மறைவை நினைவு கூர்ந்தது, அவர் கென்னடி என்பதால். அந்த வகையில் இந்திய சாயல் இருந்தது. என்றாலும் அவரவர் வேலையைப் பார்த்தார்கள். இதற்கெல்லாம் விடுமுறை கேட்டால் சுளுக்கு விழும். மாசசூசெட்ஸ் மாநிலத்தில் மட்டும் (எனக்குத் தெரிந்த வரையில்) சில இடங்களில் From MA people, Thanks Ted என்று மின்னனுப் பலகைகள் வைத்தார்கள்.

புத்தகம்: ஒரு வழியாக நேற்று இரவு விழித்து ‘The Brothers Karamazov' முடித்தேன். கதை இறுதி வக்கீல்கள் வாதங்கள் கொஞ்சம் சோர்வடைய செய்தாலும் மிக அற்புதமான classic. ஒவ்வொரு அத்தியாயத்திலும் கதாபாத்திரங்கள் கொள்ளும் மாறுபாடுகள் ஆராய்ச்சிக்குத் தகுந்தவை. ரஷ்ய இலக்கியங்கள் படிக்க ஆரம்பிக்க தஸ்தாவ்யேஸ்கியின் இந்தப் புத்தகம் சிறந்த நுழைவாயில். தமிழ் இலக்கிய வாதிகள் இந்தப் புத்தகத்தைப் பற்றி அவர்களின் சிக்கலான தமிழில் சிலாகித்து ‘இதையெல்லாம் படிக்கனும்னா உனக்கு இரண்டு கொம்புகள் வேண்டும்’ என்று சொல்வார்கள். அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் உள்ளே நுழையுங்கள்.

அடுத்த புத்தகம் படிக்க எடுத்திருப்பது ‘Patrick French' எழுதிய ‘Liberty or Death'. சமீபத்தில் ஜஸ்வந்த் சிங் ஜின்னாவைப் பற்றி எழுதி பிஜேபி-க்கு சாமி வரவழைத்ததைப் போன்று 1997 Patrick ஒரு புயலைக் கிளப்பினார். காந்தியின் அரசியலை/புனித பிம்பத்தைக் கேள்விக்குள்ளாக்கினார். ஜின்னாவைப் பற்றிய இந்தியப் பார்வை தவறு என்று நிரூபிக்க முயன்றார். ஆனால் இப்போதைய புயல் போன்று 1997-ல் கிளம்பாததற்க்குக் காரணம் Patrick அயல் தேசத்தவர், அதுவும் பிரிட்டனைச் சேர்ந்தவர் என்பது ஒரு காரணமாக இருக்கலாம். இந்தப் புத்தகத்தைப் பற்றி Krishan Kalra என்பவர் '’Liberty or Death’ should be included in the category of yellow journalism and be banned in India' என்கிறார். அப்படியானால் கண்டிப்பாகப் படித்தே ஆகவேண்டும் என்று நூலகத்திலிருந்து எடுத்து வந்து விட்டேன். முதல் 10 பக்கங்கள் படித்த வரையில் ஓகே.

படித்து முடித்தபின் Rajmohan Gandhi எழுதிய Mohandoss-ம் குஹா எழுதிய India After Gandhi-ம் படிப்பதாக பிளான்.

Sunday, August 30, 2009

வார இறுதியில் - 1

ரொம்ப நாட்களுக்குப் பிறகு இன்று எழுத வேண்டும் போல் இருந்தது...

வேலைப் பளு அதிகம் இருந்தாலும் அரை மணி நேரமாவது ஏதாவது படிக்க முடிந்தது. ‘கரமசோவ் சகோதரர்கள்’ படித்துக் கொண்டிருக்கிறேன். Dmitri, Ivan, Alyosha, Illusha போன்றவர்களின் வாழ்க்கையை kaleidoscope-ஆக தஸ்தவ்யேஸ்கி எழுதிய புத்தகம். எழுதி 100 வருடங்களாகியும் பாத்திரங்களை நாம் எங்கோ சந்தித்த உணர்வு. ஆன்மிகம் பற்றிய தன் கருத்துக்களை/குழப்பங்களை/கண்டடைந்தவைகளைப் புததக வடிவில் கொண்டு வருவது அசாத்தியமான வேலை. தஸ்தவ்யேஸ்கி-க்கு அது சாதாரணமாக வருகிறது. ஒவ்வொரு கதாபாத்திரங்களும் அவரவர்கள் போக்கிலே செல்லும்போது சிலர் ஒரு புள்ளியில் சந்தித்து, உறவாடி, பகையாடி, விலகி பின் சேர்ந்து...இந்த நாவலைப் படிக்கும்போது அசோகமித்திரனின் ‘கரைந்த நிழல்கள்’ நினைவுக்கு வருகிறது.

Speaking of which...நேற்று தஸ்தவ்யேஸ்கி-யைக் கொஞ்சம் ஒதுக்கிவிட்டு ‘கரைந்த நிழல்கள்’ மீள்வாசிப்பு. ஒருமுறைப் படித்திருந்தாலும் அ.மி-யின் இந்த நாவல் என்னை மீண்டும் வாசிக்க வைத்தது சமீபத்திய 'அவுட்லுக்கில்’ படித்த விஷால் பரத்வாஜ் பற்றிய கட்டுரையாக இருக்கலாம். இதைத் தொடராக வெளியிட்ட காலத்தில் எத்தனைப் பேர் அதை ஈடுப்பாடுடன் படித்திருப்பார்கள் என்று தெரியவில்லை. ‘க. நி’ ஒரு முழுப் புத்தகமாகப் படிப்பதில் உள்ள மனநிலை வாரம் ஒருமுறையில் கொண்டு வரமுடியாது.

அ.மி. Hidden Humor இந்த நாவல் முழுவதும் தெளித்து விடப்பட்டுள்ளது. ‘மழை வரும்-னு காமிராவை முதல் நாளே வாங்கி வைக்கவில்லை’ என நடராஜன் சொல்ல, அடுத்த வரி ஒரு தனி பத்தியாக ‘வானத்தில் நிறைய நட்சத்திரங்கள் இருந்தன்’. கரம்சோவ் கதாபாத்திரங்கள் 100 ஆண்டுகளுக்குப் பிறகும் சந்த்தித்த உணர்வு இருக்கிறது என்று சொன்னேன். ‘க. நி’ அதில் நிச்சயம் சேரும்.

புத்தக அலமாரிகள் வாங்கிய பிறகு அவ்வப்போது வரும் மனநிலைக்கேற்ப ஏதோ ஒரு புத்தகத்தை எடுத்து ஒருசிலப் பக்கங்களை மேய்வது சுகம். வாங்கி வைத்தவைகளைப் பார்க்கும் போது, பரவாயில்லை என்று என்னுடைய புத்தகத் தேர்வைக் குறித்து நானே முதுகில் தட்டிக் கொள்ள முடிகிறது. மாலைமதியில் ஆரம்பித்த வாசிப்பு இன்று அமெரிக்க வரலாறு பற்றிய Oxford-ன் தொடர் புத்தகங்களும், இந்திய வரலாற்றின் 1857-ல் இருந்து India After Gandhi வரை புத்தக அலமாரியில் சேர்க்கும் வரை வந்திருக்கிறது. தமிழில் வலைப் பதிவுகள் முடிந்த வரையில் என் தமிழ் புத்தக must buy and must read வகைகளை அடையாளம் காட்டியிருக்கின்றன. எனி இந்தியன் புண்ணியத்தில் தொல்லை இல்லாமல் பாஸ்டனில் இருந்து வாங்கிவிட முடிகிறது.

தமிழில் வரும் புத்தக மதிப்புரைகள் மிகவும் குறைவு மற்றும் பின் தங்கியவை என்பது தெரிந்த ஒன்று. உதாரணத்திற்க்கு நேற்று வாங்கிய Freakonomics புத்தகத்திற்க்கு வந்த மதிப்புரைகள் ஏறத்தாழ 20-30. எழுதும் மதிப்புரைகளும் 90% தூர்தர்ஷனில் வரும் எதிரொலி கடிதத் தரம். கத்துவதற்கு பதிலாக நானாவது என் வலைப் பதிவில் மெழுகுவர்த்தி ஏற்றலாம் என்பது இப்போது மனதில் ஓடும் சிந்தனை.

கரமசோவ் முடித்த பிறகு அடுத்து என்ன என்பது தெரியாது. காந்தி என்னைப் படியேன் (Satyagraha in South Africa) என்று கேட்கிறார்.