Sunday, February 20, 2011

சிலுவைராஜ் சரித்திரம்

ஜெயமோகன் திண்ணையில் ஒரு மதிப்புரையில் ராஜ் கௌதமனின் இரு புத்தகங்களைப் (சிலுவைராஜ் சரித்திரம், காலச்சுமை) பற்றி எழுதியிருந்தார். எழுத்தாளர் திலீப்குமார் அனுப்பியிருந்த பட்டியலிலும் அது இருந்ததால் யோசிக்காமல் வாங்கினேன் (திலீப் அவர்களின் தேர்வில் எனக்கு நிறைய நம்பிக்கை).

முதல் புத்தகம் ‘சிலுவைராஜ் சரித்திரம்’. ஒரு தலித்தியக் குடும்பத்தில் பிறந்த ஒரு சிறுவனின் Biography. ஆசிரியர் சொல்லாவிட்டாலும் தன் வரலாறு என சந்தேகம் கொள்ள வைக்கும்.

சிலுவைராஜ் அனுபவங்கள் அங்கதத் தன்மையுடன் வயதுக்கேற்ற விடலைத்தனத்துடன் வளர்ந்தாலும் கதை முழுவதும் விரவியிருப்பது அவனின் காலனி வாழ்க்கையும், சாதி சமுதாய ஏற்றத்தாழ்வுகளும். எல்லா இடங்களிலும் சிலுவைக்கு அவனின் சாதி சுட்டப்படுகிறது. காலனியில் இருப்பவர்கள் சாதியால் ஒடுக்கப்பட்டாலும் கோபத்தில் மற்றவர்களைத் திட்டும்போது அவர்களை விட தாழ்ந்த சாதியர் பெயர் சொல்லித்திட்டுகிறார்கள். அந்த அனுபவங்கள்அங்கதம் கலந்த கோபத்தில் ஆசிரியரிடமிருந்து வெளிப்படுகிறது.

சிலுவை தன்னை ஒரு பாதிரியாரிடம் ‘பறையன்’ என்று திட்டு வாங்கும் இடத்தில் பொங்கி எழுந்தாலும், அதே சாதியை வைத்து இட ஒதுக்கீடு வரும்போது உபயோகப்படுத்திக் கொள்ள மறுப்பதில்லை. ஆசிரியர் சிலுவையின் practicality-ஐ தடுமாறாமல்/விளக்கம் இல்லாமல்/உறுத்தாமல் காட்டிச் செல்லும் இடங்கள் நிறைய.

சிலுவைக்கும் அவன் தந்தைக்கும் இடையிலான உறவு சிக்கல்கள், தந்தை ஊரிலிருந்து வந்தவுடன் தாய் சிலுவை அது வரை செய்த அழும்புகளை பட்டியலிட்டு அடி வாங்கி வைக்கும் இடங்கள், தந்தையை முறைக்கப் போய் மிதிபட்டாலும் அதே தந்தை சிலுவை 10-ம் வகுப்பு தேறியவுடன் சந்தோஷத்தில் கண்ணீர் வடித்து சிலுவையை ஆச்சரியப்படுத்துவது என்று தந்தை, மகன் உறவை abstract-ஆக படம் பிடித்திருப்பது.

புத்தகம் சிலுவை கல்லூரிப் படிப்பு வரை பதிவு செய்கிறது. அடுத்த பாகமான ‘காலச்சுமை’ சிலுவையின் அதன் பின்னான வாழ்க்கையைப் பார்க்கிறது.

தமிழினி வெளியீடு. நான் படித்தவரை இதை ஒரு முழுமையான தலித்திலக்கியமாக விமர்சகர்கள் பார்க்க மறுக்கிறார்கள். குணசேகரனின் ‘வடு’ இன்னும் மூர்க்கமாக தலித்திய வாழ்க்கையைப் பதிவு செய்திருக்கும் (அதைப் பற்றி பிறகு). என்றாலும் ராஜ் கௌதமனின் புத்தகம் எனக்குப் பிடிக்கக் காரணம், மிக இயல்பாக ஒரு படைப்பை snapshot-ஆகக் காட்டி படிப்பவரை அடுத்தத் தளத்திற்க்கு நகர்த்துவது.

’காலச்சுமை’ பற்றி பிறகு,

Wednesday, February 09, 2011

கவித, கவித

சிற்றிதழ்களைப் படிக்க ஆரம்பித்தக் காலங்களிலிருந்தே கவிதை என்றால் கருணாநிதி ஜெயலலிதாவைப் பார்ப்பது போலத்தான் (மாற்றியும் கொள்க). சுஜாதா கவிதை என்பது உங்களை, உங்கள் மனதை சற்று நெருட வைக்க வேண்டும் என்பார். அதையும் மீறி சில கவிதைகளைப் படித்து டி. ஆர் கணக்காகக் கத்தியது உண்டு.


உயிர்மை தளத்தில் மனுஷ்யபுத்திரனின் பேட்டி ஒன்றில் என்னை மாதிரியான வெறுப்பர்களுக்கு மிக அழகாக ஏன் கவிதை எல்லோருக்கும் அல்ல என்று சொல்லியிருந்தபோது, ஒளி வட்டம் எனக்கு வந்தது. அன்றிலிருந்து கவிதையைப் படிப்பேன். சில வரிகள் சட்டென்று இழுக்கும். பலவற்றை படித்துவிட்டு எந்தப் பாதிப்பும் இல்லாமல் கடந்துவிடுவேன்.


கவிதை என்பது என்ன? என்னைப் பொறுத்தவரை, பக்கம் பக்கமாக எழுதுவதை 3-10 வரிகளுக்குள் படிப்பவனுக்குப் புரியவைத்து அவனை அதற்குள் இழுத்துவிடுவது. அபூர்வமாக அவ்வாறு மாட்டி சில நாட்கள் என்னை அசை போடவைக்கும். உதாரணமாக புலிக்கூண்டைத் திறக்கப் போகும் சிறுமி பற்றி மனுஷ் எழுதி சாரு-வின் தளத்தில் வந்தது. ஒரு முழுப் புத்தகமாக எழுத வேண்டிய ஒரு சமூகப் பிரச்னையை மிக அற்புதமாக ஒரு கவிதையில் வடித்த மனுஷ்-க்கு ஒரு சலாம்.


அது போல இன்று மாமல்லனின் http://www.maamallan.com/2011/02/blog-post_2764.html இருக்கும் பிரமிளின் கவிதையில் இருக்கும் இந்த வரிகள் (மாமல்லன் ஆட்சேபித்தால் எடுத்து விடுவேன்) :


...

ஆடையின் இரவினுள்
உதயத்தை நாடும்
பருவ இருள்.
....


இந்த மூன்று வரிகளுக்குள் உயிரின் தத்துவத்தை விவரித்த பிரமிளின் திறமையை விவரிக்க முடியவில்லை. கடவுள் உலகத்தைப் படைத்து, ஆதாம்/ஏவாள் படைத்து, உயிரினங்களை உண்டாக்க வழி செய்ய, மற்றொரு புறத்தில் டார்வினியன் தத்துவம் அதைப் புரட்டிப் போட்டு அறிவியல் வழியே காட்ட, கவிஞன் ஒருவன் மூன்றே வரிகளில் உயிரினத்தின் ஆதி கால உணர்ச்சிகளை சுட்ட முடியுமானால் அவனே கடவுளாகுக.





Thursday, February 03, 2011

ஏறக்குறைய சொர்க்கம்



”எதையும் நிரூபிக்கும் முன்

சற்றே சும்மா இருங்கள் !”

- ஆதமாநாம்.

சுஜாதாவின் ‘ஏறக்குறைய சொர்க்கம்’ தொடர்கதையாக குமுதத்தில் வந்தது. கதை ஒரு மத்தியமர் பிராமணக் குடும்பத்தை சேர்ந்த ஒருவனின் திருமண (கசப்பு) அனுபவங்கள்.

ராமச்சந்திரன் (ராமு) தன் நண்பன் சந்துருவோடு திருவெள்ளறையில் காமுவை பெண் பார்க்கப் போவதில் ஆரம்பிக்கிறது. காமுவை அவனால் சரியாகப் பார்க்க முடியவில்லை. ஆனால் சந்துரு பார்த்துவிட்டு ராமுவிடம் ‘அவள் பேரழகி, ஆனால் உனக்கு சரிப்படமாட்டாள்’ என்று முகத்தில் அறைந்தாற் போல சொல்ல, ராமுவின் ஈகோ கழுதையாக உதைத்து அவளை திருமணம் செய்ய முடிவெடுக்கிறான். பல லௌகீகத் தடைகள் வருகின்றன. எல்லாவற்றிற்க்கும் மேலாக அவன் அம்மா திருமணத்திற்கு முதல் நாள் கோமாவில் படுக்கிறாள். இருந்தாலும் பிடிவாதமாக மணக்கிறான்.



திருமணமானப் பின் காமுவின் அழகு பல ஆண்களை பேஸ்த் அடிக்க வைக்கிறது. சந்துரு, ராமுவின் மானேஜர், வீட்டுக்காரர், மளிகைக்காரர் என்று பலரும், ராமுவின் அன்புக்குப் போட்டியிடுகிறார்கள். அவனுக்கு இதெல்லாம் ஆரம்பத்தில் தமாஷாக இருந்தாலும், போகப் போக காமுவின் மேல் சந்தேகம் வருகிறது. தெருவோரத்தில் நின்று வேவுப் பார்க்கிறான். கட்டிலின் கீழே ஆள் இருக்கிறானா என்று தேடுகிறான். காமுவை அடிக்கிறான். கருவைப் பிடிவாதமாகக் கலைக்க வைக்கிறான். மொத்ததில் பாயைப் பிறாண்டும் அளவிற்கு சந்தேகம் முற்றுகிறது.


சந்தேகத்தில் தன் மேலதிகாரியைத் திட்ட அவர் அவனுக்கு வேலையில் டார்ச்சர் தருகிறார். மொத்ததில் நண்பர்கள், மனைவி, நிம்மதி இழந்து திரியும்போது தன் மனைவி ஒரு நடிகையானது தெரிகிறது. மீதி படித்துப் பாருங்கள்.


சுஜாதாவின் அதிகம் பேசப்படாத கதைகளில் இதுவும் ஒன்று. கதை Black Humor வகையைச் சேர்ந்தது. சுஜாதா பலமுறை கதை தானே எழுதிக் கொண்டு செல்லும் என்பார். இந்த கதை அதற்கு ஒர் உதாரணம். கதை உச்சம் பிடிக்கும் இடம் ராமு தன் மனைவியைத் தேடி பித்துப் பிடித்தாற்போல திருச்சி/ஸ்ரீரங்கம் என்று அலையும்போது வரும் நிகழ்ச்சிகள். ஆழ்மனம் அமைதியாக அரற்றிக் கொண்டிருக்க, மூளை காண்பனவற்றையெல்லாம் போட்டுக் குழப்பிக்கொள்ளும். அதை எழுத்தில் கொண்டு வருவது சுஜாதாவிற்கு முடிந்திருக்கிறது.


குமுதம் வாசகத் தளத்திற்கு இந்தக் கதை மகா அன்னியம். மனைவியை சந்தேகிக்கும் கதை என்றால் அடுத்து எதிர்பார்ப்பது கொலை, போலீஸ் துரத்தல் என்று. இதை மாற்றி ஜனரஞ்சக வாசகர்களுக்கு அமைப்பது சுஜாதா போன்ற ஸ்டார் எழுத்தாளர்களுக்கு இருக்கும் சுதந்திரம்.


சுஜாதாவின் மத்யமர் சிறுகதைத் தொகுப்பு படித்திருக்கிறேன். ஒரிரண்டு தவிர மற்றவை வலிந்துத் திணிக்கபபட்ட ‘மத்யமர்’ லேபிள். ஆனால் ‘ஏ. சொ’-இல் அவர் மத்யமர் வகை என்று தானே முடிவு செய்து கொள்ளாமல் எழுதியதால் அதன் வெளிப்பாடு classic-ஆக வருகிறது. உதாரணமாக காமுவின் அழகைப் பற்றி ராமு அவளிடமே உரையாடும் இடம். கவனிக்க: அது romantic பேச்சு அல்ல. அவளின் அழகு திருமணத்திற்கு முன் மற்றவர்களை சலனப்படுத்திய விதம் பற்றி, அதற்கு காமு பதில் என இந்தக் கதையை வழக்கமான தள்த்திலிருந்து மேலே நகர்த்துவது.


கதையை நான் மிக ரசித்தது காமுவின் தரப்பிலிருந்து ஆசிரியர் ஒரு வாதம் கூட வைக்கவில்லை. மொத்தமும் ராமுவின் பார்வையிலேயே உங்களுக்குத் தருவதால் காமுவின் எண்ணம், செயல்கள் எல்லாம் ஒருவிதமான abstract ஓவியம் போல மாறுகிறது. இதுதான் சுஜாதாவின் வெற்றி. A Beautiful Mind படத்தின் திரைக்கதையைப் பார்த்தவர்களுக்கு நான் சொல்ல வருவது புரியும். சுஜாதா ஒரு தேர்ந்த தொழில்நுட்பக் கதைசொல்லி, சந்தேகமில்லை.


கதையில் காமு ஒரு நடிகையாவது நம்ப முடியாவிட்டாலும் அது மத்திய ஆண் வர்க்கத்தின் மனைவிப் பற்றிய மனோநிலையை ஒரு jerk அடிக்க வைக்கப்பட்ட உத்தியாக எடுத்துக் கொண்டால் தொடர முடியும். சுஜாதா வேண்டுமென்றே உங்களை சீண்டும் இடம். கால, நேர அளவுகளை வைத்துப் பார்த்தோம் என்றால் அவள் அந்த அளவிற்கு புகழ் பெற்றது logic wise உங்களை விபரீதக் கற்பனைகளுக்கு கொண்டு சென்றுவிடும். ரஜினி ஒரே பாடலில் பிச்சைக்காரனிலிருந்து கோடீஸ்வரனாக மாறுவதை நீங்கள் ஜீரணிக்கக் கூடியவரா? அப்படியானால் காமுவும் ஒரே அத்தியாய்த்தில் நடிகை ஆகலாம்.


அதன் பின்னும் ராமு தன் மத்தியமர் நிலையில் நின்று மனைவியை மீட்க நினைக்கும் இடம்தான் சுஜாதாவின் Black humor-ன் உச்சக்கட்டம்.


ராமு ஒரு இடத்தில் மேற்குறிப்பிட்ட ஆத்மாநாமின் வரிகளை நினைக்கிறான். அந்த் இரண்டு வரிகள்தான் இந்த மொத்தக் கதையின் புகைப்படம்.


கதை முடிவில் நீங்கள் ராமுவிற்கு பரிதாபப்பட்டால் கதை தோற்றுவிட்டது என்று அர்த்தம்.


Sunday, February 28, 2010

உலோகம் - FIR

படித்து முடித்ததும் தோன்றியவை:

- துப்பறியும் வகையா, தமிழகத்துக்கு வரும் ஈழத் தமிழர்கள் வாழ்க்கை குறித்த வகையா என்றெல்லாம் ஒரு கூண்டில் மாட்டாமல் கதை செல்கிறது.
- 'ரா'-வின் பிடி பற்றி (புதினத்தில்) முதன் முதலாகப் படிக்கிறேன் (வேறு நூல்கள் இருந்தால் தகவல் ப்ளீஸ்).
- இந்திய உளவு இயக்க செயல்பாடுகள் பற்றி புதினத்தில் படிப்பதால் பல நிகழ்ச்சிகள் abstract-ஆக இருக்கின்றன. உ.தா. அதிகாரி வீரராகவன் கொல்லப்படுவது.
- பாத்திரங்கள் ஜெமோ-வின் முத்திரைகளுடன். அடி மனதின் கசடுகளை மிகத்திறமையாக விளக்குவதில் ஜெமோ திறமைசாலி.
- கதாநாயகன் செயல்கள் ஒருவித ஜேம்ஸ் பாண்ட பாணியில் விளக்கப்படுவதால் உணர்வுகள் அன்னியமாகின்றன.
- ஜோர்ஜ் பாத்திரம் அனுதாபத்திற்கு கொல்லப்படுவது வேஸ்ட். கதாநாயகன் (அல்லது அவனின் ஆட்கள்) சிறீ-யின் ஆளைப் போட்டுத்தள்ளி சிறீ-யை நெருங்கியிருக்க முடியும்.

இந்த நாவல் எவ்வளவு தூரம் பேசப்படும்? ஜெமோ எழுதியதாலேயே நிராகரிக்கப்படும் அபாயம் உண்டு (ஜெமோ-வா? படிக்கவே வேண்டாம். அவர் ஹிந்துத்துவ/'ரா' ஆளுங்க.).

'பெயரிலி' நாவல் ஆரம்பித்த போதே நிராகரித்து விட்டார். தமிழக அரசியல் உலகில் பேசும் தகுதி உள்ள ஒரு ஜீவன் இனிமேல் தான் அடையாளம் காணப் படவேண்டும். ஈழத் தமிழ் உலகில் சிலரிடமிருந்து (குறிப்பாக ஷோபா சக்தியிடமிருந்து) எதிர்பார்க்கிறேன்.

முடிவாக: ஷோபா சக்தியின் 'கொரில்லா', 'தேசத் துரோகி' மற்றும் 'ம்' கதைகள் அளவு உலுக்கவில்லை என்றாலும் இந்திய நாடு வந்த ஒரு மனித யந்திரத்தின் செயல்பாடுகளை விவரித்த அளவில் இந்த நாவலுக்கு ஓர் இடம் உண்டு.

விரிவாக, நேரம் இருந்தால்...

Thursday, February 04, 2010

Wolf Dreams

தஹர் பென் ஜெலோன்-ஐ அமேசானில் தேடும் போது யஸ்மினா காத்ரா கிடைத்தார். அரபிய இலக்கியங்களைப் படிக்க ஆரம்பிக்க இவரின் கதை களங்கள் சரியாக இருக்கும் என்று நினைத்தது சரியாகவே அமைந்தது. இவர் எழுதிய கால வரிசைப்படி Wolf Dreams நூலகத்திலிருந்து படிக்க ஆரம்பித்தேன்.


புதினங்கள் படிப்பதை சிறிது காலமாகவே நிறுத்தி வைத்திருந்தேன். அ-புதினங்கள் படிக்க வேண்டியவை அதிகமாகவும், கற்பனை கதாபத்திரங்களின் சோக/ஆனந்த/வருத்தம் போன்ற உணர்ச்சிகள் ரமணி சந்திரன் வாசகர்களுக்கு தாரை வார்த்து விட்டதாலும் புதினங்கள் கவரவில்லை. ஆனால் அரபு இலக்கியங்கள் பற்றி சாரு (ஆம்.. சிரிக்காதீர்கள்) எழுதியதைப் படித்த பின் கொஞ்சம் தேடியதில் 20-25 புத்தகங்கள் தேறியிருக்கின்றன. இதில் எச்சரிக்கையாக மேற்குலக எழுத்தாளர்களின் மத்திய கிழக்கு புதினங்களை விலக்கிவிட்டேன். அரபு நாடுகளிலேயே வாழ்ந்து அல்லது இப்போது அரபு எழுத்தாளர்கள் மற்ற நாடுகளில் அடைக்கலம் புகுந்து வாழ்பவர்களின் எழுத்துக்கள் மட்டுமே படிப்பதாக உத்தேசம்.

Wolf Dreams பேசுவது ஒரு சாதாரண குடிமகன் எப்படி தீவிரவாதியாகிறான் என்பது பற்றி. வாலித் ஒரு அமெச்சூர் நடிகன். அழகன். அவன் கனவில் அல்ஜீரியாவின் சிறந்த நடிகனாக கேன்ஸ் திரைப்பட விழாவில் பரிசு வாங்கப் போவதாகக் கனவு கண்டு, ஆனால் அந் நாட்டின் மிகப் பெரும் பணக்காரர் ஒருவரின் வீட்டில் கார் ஓட்டுனராக வேலைக்கு அமர்கிறான்.

வேலையில் சேர்ந்தவுடன் அவனுக்கு நல்ல சட்டைகள், சூட்கள் கிடைத்தாலும் நாயைப் போல எசமானர்கள் செல்லும் இடங்களில் காத்து நிற்கும் வேலை. எசமானரின் மகன், மகள் அனைவரும் இவனை ஒரு சாதாரண மனிதனுக்குக் கிடைக்கவேண்டிய மரியாதையைக் கூட கொடுப்பதில்லை. மகன் ஊரில் உள்ள விலைமாதர்களை அழைத்து வரும் வேலையைக் கொடுக்க, மகளோ தன் வருங்கால கணவன் இன்னொரு பெண்ணைப் பார்த்து இளித்ததற்கு தண்டனையாக இவனோடு உடலுறவு கொள்கிறாள். எசமானின் அந்தரங்க வேலைக்காரன் ஹமித் செய்யும் ஒரு குரூரமான செயலால் வாலித் அந்த வேலையை விட்டு ஒடி விடுகிறான்.

வாலித்-ன் துரதிஷ்டம் அவனின் எந்த ஒரு முயற்சியையும் பாதியில் முறிக்கிறது. அவன் விரும்பும் பெண் மத வெறி அண்ணனால் கொலை செய்யப்படுகிறாள். அவனின் சேமிப்பை ஒருவன் திருடுகிறான். இதற்கிடையில் அல்ஜீரியாவில் மத அடிப்படைவாதம் தீவிரமடைகிறது. வாலித் தன் நினைவின்றி பங்கேற்கும் ஒரு கலவரத்தால் போலீசிடம் சிக்குகிறான். அதுவே அவனை தீவிரவாதம் நோக்கி தள்ளுகிறது. முதல் கொலையை மதத்தின் பெயரால் செய்கிறான்.

பின் கொலைகள் செய்வது சுலபமாகி விடுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக ஒரு கூட்டத்துக்கே தலைவன் ஆகி, தன் தலைவன் இறந்தவுடன் அவரின் மனைவியை மணந்து, ஒரு முழு கிராமத்தையே( பெண்கள், குழந்தைகளையும்) கொல்லும் வரை அவனின் தீவிரவாதம் வளர்கிறது.

யஸ்மினாவின் கதை சொல்லல் எந்த மழுப்பலும் இல்லாமல் வாலித்-ன் கதையை ஒரே சீராக செலுத்துகிறது. இடையிடையே அல்ஜீரியாவின் வரலாறு கதையின் ஊடாக வருவதால் குழப்பமில்லை. அந் நாட்டின் வறுமை, மத தீவிரவாதிகளின் அணுகுமுறை, மக்களும், அரசும் தொடர்பில்லாமல் இருத்தல் போன்றவை நேரடியாக சுட்டப்படுகின்றன.

முதல் இரண்டு பாகங்கள் வாலித்-ன் மனப் போராட்டத்தை விரிவாக பதிவு செய்கிறது. மூன்றாம் பாகம் அவன் அதை சுத்தமாக துடைத்துப் போட்டு கூலிப் படைத்தலைவனாக மாற்றுகிறது. கதை இசுலாமிய தீவிரவாதத்தை விவரித்தாலும் வாலித் மதத்தை தான் செய்யும் கொலைகளுக்கு உபயோகிப்பதில்லை.

யஸ்மினா-வின் கதை சொல்லல் தெளிவாக இருந்தாலும் அல்ஜீரிய அரசியல் நிகழ்வுகள் சொல்லும் விதம் ஒரு கட்டத்திற்கு மேல் அலுப்பாகி விடுகிறது. ஆரம்பத்தில் அக்குறிப்புகள் உபயோகமாக இருந்தாலும் போகப் போக 'செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணசுவாமி' பாணியில் விளக்கப் படுகின்றன. தேர்ந்த கதை சொல்லி இதை பாத்திரங்கள் வாயிலாக வெளிப் படுத்தியிருப்பார்.

கதையில் மிகவும் சலனப்படுத்திய இடங்கள் வாலித் பங்கு கொள்ளும் இரு கொலைகள். ஒன்று அவனின் முதல், இரண்டாவது அவனுக்கு தெரிந்தவன். இறப்பவன் தான் இறப்பது தன் குழந்தைகள் முன்னால் என்பதைவிட வாலித் இதை நிகழ்த்துகிறான் என்பதுதான் அவனுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. அவன் கதறுவது:

"I don't believe it, not you Nafa..You're an artist...an artist"

தீவிரவாதியானதை விட வாலித் தன் வாழ்க்கையில் அடையும் தோல்வி இங்குதான்.

Monday, December 28, 2009

வாங்க வேண்டிய புத்தகங்கள்

இலங்கை இறுதி யுத்தம் - நிதின் கோகலே (கிழக்கு)
திருநங்கைகள் உலகம் - கிழக்கு
ராஜீவ் கொலை வசக்கு - கிழக்கு
திமுக உருவானது ஏன் - கிழக்கு
சென்னை மறு கண்டுபிடிப்பு - கிழக்கு
சீனா மறு கண்டுபிடிப்பு - கிழக்கு
பிரபாகரன்-வாழ்வும் மரணமும் - கிழக்கு
கோபுலு-கோடுகளால் ஒரு வாழ்க்கை - கிழக்கு
கடல்புரத்தில் - கிழக்கு
இருளர்கள் - ஒரு அறிமுகம் - கிழக்கு
நாவல் - ஜெயமோகன் - கிழக்கு
இந்திரா பார்த்தாசாரதி கதைகள் - கிழக்கு
மீண்டும் ஜீனோ - சுஜாதா - கிழக்கு
இந்து ந்ஜான மரபில் ஆறு தரிசனங்கள் - ஜெயமோகன் - கிழக்கு


யாமம் - எஸ். ரா - உயிர்மை
சிலுவையின் பெயரால் - ஜெமோ - உயிர்மை
தனிமையின் இசை - ஷாஜி - உயிர்மை
நாயக்கர் காலம் - ராமசாமி - உயிர்மை
குடுகுடுப்பைகாரர் வாழ்வியல் - ந. முருகேச பாண்டியன் - உயிர்மை
\ ஆதிகேசவப் பெருமாள் கோயில் வரலாறு - ஆ. கா. பெருமாள் - தமிழினி
இன்றைய காந்தி - ஜெயமோகன் - தமிழினி
கு.ப.ரா கதைகள் (முழு தொகுப்பு) - அடையாளம்
பாட்டும், தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச்சமூக உருவாக்கமும் - ராஜ் கௌதமன் - தமிழினி
ஆகோள் பூசலும் பெருங் கற்கால நாகரிகமும் - ராஜ் கௌதமன் - தமிழினி
ஆரம்பக்கட்ட முதலாளியமும் தமிழ்ச்சமூக உருவாக்கமும் - ராஜ் கௌதமன் - தமிழினி
கந்தர்வன் கதைகள் - வம்சி பதிப்பகம்
அர்ச்சுனன் தபசு - பாலுசாமி - காலச்சுவடு


மேலும் பல புத்தகங்கள் சேரலாம். காலச்சுவடு வெளியீடுகள் இன்னும் தெரியவில்லை. சாருவின் ஓரிரண்டு புத்தகங்கள் பட்டியலில் சேரும் என்று நினைக்கிறேன்.

Monday, December 14, 2009

உதவி

அந்தப் பெண் அப்போதுதான் நினைவு இழந்திருக்க வேண்டும்.


அலுவலகத்தை விட்டு வரும் வழியில் பாலத்தைக் கடக்கையில் அவள் நடைப்பாதையில் விழுந்துக் கிடக்க அவளோடு வந்த நாய் அவள் முகத்தை முகர்ந்துக் கொண்டிருந்தது. நான் காரை நிறுத்தி விட்டு சாலையைக் கடக்கும் போது ஒரு இளைஞனும், ஒரு யுவதியும் அவளை எழுப்பிக் கொண்டிருந்தனர்.


நான் 911 கூப்பிட செல் பேசியை எடுக்கும்போதே இன்னொருவர் அதே எண்ணைக் கூப்பிட்டுக் கொண்டிருந்தார். அருகில் சென்றுப் பார்த்தபோது, மயக்கம் தெளிந்து அந்தப் பெண் சோர்வாக அமர்ந்திருந்தாள். பெயர் Amy என்றாள். முகவரி விசாரித்தபோது நினைவில் இல்லை என்றாள்.


காவலதிகாரி முதலில் எளிமையாகக் கேள்விகள் கேட்டுக் (பெயர், இன்றைய கிழமை) கொண்டிருக்கும்போதே ஆம்புலன்ஸ் வந்துவிட, மருத்துவர் அவளின் ஓட்டுநர் லைசன்ஸைப் பார்த்து அவள் வேறொரு மாகாணத்திலிருந்து வந்திருப்பதை அறிந்தார். உள்ளூர் முகவரி தெரியவில்லை. அவளின் செல்பேசியிலும் ஆபத்துக்குக் கூப்பிட வேண்டிய எண் சிக்கவில்லை.


என்னோடு இருந்த இளைஞன் நாயின் கழுத்துப் பட்டியில் இருந்து முகவரி கண்டுப்பிடிக்க முயல, அது அவனிடமிருந்து நழுவியது. விடாமல் அதை நோண்ட, நாய் பொறுமை இழந்து 'வள்' என்றது. அவள் அதைத் தடவிக் கொடுத்தாள்.


நான் நாயை அருகில் இழுத்து அதைக் கொஞ்சிக் கொண்டே கழுத்துப் பட்டியில் இருந்து அது வழக்கமாக செல்லும் மருத்துவமனை முகவரியும், தொலப் பேசி எண்ணும் படிக்க காவலர் அதைக் குறித்துக் கொண்டார். பின் மருத்துவர்கள் அவளை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல முடிவு செய்து அவளை ஆம்புலஸில் ஏற்றினர்.


இப்போது நாயை யார் பார்த்துக் கொள்வது என்பதில் சிக்கல் ஏற்பட்டது(மருத்துவர்களுக்கும், காவலருக்கும்). ஒரு மருத்துவர் Man's best friend, அதனால் உங்களோடு இருக்கட்டுமே என காவலரிடம் சிரித்துக் கொண்டே சொல்ல, அவர் இதை வைத்துக்கொண்டு நான் எப்படி ரோந்து செல்வேன் என்றார் - சிரிக்காமல்.


நானும் என்னோடு இருந்தவர்களும் அடுத்து என்ன செய்வது என நிற்க, மருத்துவர் எங்கள் பக்கம் திரும்பி 'நீங்கள் செல்லலாம்..நன்றி' என்றார்.


நான் நாயைப் பார்த்தேன். அது தன் எசமானி ஆம்புலன்ஸில் ஏறுவதை ஏக்கமாகப் பார்த்துக் கொண்டிருந்தது.


காரில் ஏறி வீடு வந்து சேர்ந்தேன்.

பி.கு.: கொஞ்ச நாட்கள் முன் நான் வசிக்கும் ஆர்லிங்டன் நகரில் நடந்த ஒரு சம்பவம் இது. நேரில் பார்த்ததை அசோகமித்திரன் பாணியில் எழுதிப் பார்க்க முயன்று பின் நம்பிக்கை இல்லாமல் கோப்புகளில் சேமித்து வைத்திருந்தேன். இன்று கொஞ்சம் தயக்கத்துடன்வெளியிடுகிறேன்.