Sunday, September 20, 2009

வார இறுதியில் - 4

திரை: உன்னைப் போல் ஒருவன் - கமல் படம் என்றாலே கொஞசம் பயம்தான். வித்தியாசமாக எடுக்கிறேன் பேர்வழி என்று பல முயற்சிகளையும் ஒரே படத்தில் திணித்துத் தொலைப்பார். ஃப்ரேமுக்கு ஃப்ரேம் தன் ஆளுமை இருக்க வேண்டும் என்ற வலுக்கட்டாயம் வேறு. படத்துக்குப் படம் தேவையில்லாத ஒப்பனை என்ற பெயரில் திரைப்படத்தையே கேலிக்கூத்தாக்குவது.

உன்னைப் போல் ஒருவன் அறிவிக்கப்பட்டவுடனே எனக்குத் தோன்றிய முதல் எண்ணம் ‘ஐயோ’. நஸ்ருத்தீன் ஷா-வின் தீவிர ரசிகனுக்கு இதுதான் தோன்றும். ரஜினி (அதுவும் பீ வாசுவோடு) அறிவித்திருந்தால் யாருக்குமே துறவறத்தில் நம்பிக்கை வந்திருக்கும். கமல் என்பதால் முதல் பத்தி நினைவுக்கு வந்தது.

மோகன்லால் நடிக்கப் போகிறார் என்றதும் ‘ஐயோ!ஐயோ!’. கமலின் படங்களில் இதுவரை நாசர், நாகேஷ் தவிர்த்து எவரையும் கமல் dominate செய்ய விடமாட்டார் என்பதால் மோ. லா மேல் பரிதாபம்தான்.

இந்த மனநிலையோடு படம் பார்க்கப் போனால் வெளியே வரும்போது ஆச்சரியத்துடன் வந்தேன்.

முதலில் கதை. சாதாரண மனிதன் தீவிரவாதத்தைக் கண்டு கோபம் கொண்டால் என்னாகும் என்பது ஒரு வரி கதை. அவனும் தீவிரவாதத்தைக் கையில் எடுத்தால் ஒரு நகரத்தையே தன் கைக்குள் கொண்டு வந்து, பலமான காவல் துறையைத் தன் கட்டை விரலால ஆட்டுவிக்கலாம், தீவிரவாதிகளை நம்ப வைத்து கழுத்தறுக்கலாம் என்று நம்ப முடியாவிட்டாலும் கொஞசம் practical-ஆக யோசித்திருப்பது தமிழுக்கு புதுசு.

இரண்டாவது துணைக் கதாபாத்திரங்கள்: லஷ்மி முதல் ரஃபிக் என்ற நபர் வரை செய்த பாத்திரத் தேர்வு. மிகக் கச்சிதமாக அவரவர் தங்கள் வேலையை செய்து முடிக்கிறார்கள். படம் முழுக்க வரும் இரண்டு காவல் அதிகாரிகளைக் குறிப்பிடவேண்டும். சேது மற்றும் ஆரிஃப். சேது ஒரு சாதாரண மனிதன் குடும்பத்துக்கும், வேலைக்கும் இடையே ஊடாடுவதைக் கண் முன் நிறுத்துகிறார்.

ஆரிஃப் கொஞ்சம் Dirty Harry ஸ்டைலில் தடாலடி வேலைகளுக்கு உதவுகிறார். அதுவும் தன் இன்ஃபார்மரிடம் பரிவுடன் கலந்த கண்டிப்புடன் பேசும்போதும், அந்த இன்ஃபார்மரை ஆஸ்பத்திரிக்கு அனுப்ப தாடையை உடைக்கும் போதும் Character சரியாக் build ஆகிறது. ஆனால் என்ன காரணத்திற்காக எப்போதும் மின்சார கம்பியைத் தொட்டுக் கொண்டிருப்பவர் போல இருக்க வேண்டும் என்று புரியவில்லை. போதை ஆசாமியைப் புரட்டப் போகிறார் என்று நம்மை நினைக்கவைத்து குரல் கடுமையிலேயே அவனிடம் விஷயம் கறக்க வைக்கும் இடம் கதை + டைரக்‌ஷனின் சிறப்பு. இந்த நடிகருக்கு நல்ல இயக்குநர் அமைந்தால் அஜீத், விஜய் போன்ற முட்டாள் கோமாளிகளை ஒதுக்கி வலம் வருவார்.

மூன்றாவதாக: கமல், லால் மற்றும் லஷ்மி: கமல் நடிப்பை விட அவரின் உடல் மொழிதான் சட்டென்று மனதில் பதிந்தது. அறிமுகக் காட்சியில் தலை, கை, வால் என்று காட்டாமல் சாதாரணமாக அறிமுகம் ஆவதும், நன்றாகத் தேர்ந்த பொறியாளர் போல வெடிகுண்டு செய்யும் சாதனங்களைக் கையாள்வதும், ஒரு விதமான தளர்ந்த நடையுடன் ஒவ்வொரு பையையும் தூக்கிக்கொண்டு நடப்பதும், எல்லா வெடிகுண்டு பைகளையும் வைத்து விட்டு கீரை, தக்காளி என்று மனைவி கொடுத்த லிஸ்ட் படி வாங்குவதும் என்று இவரின் பாத்திரம் சரியாக செதுக்கப்படுகிறது.

அதோடு கமல் நிஜமாகவே கொஞ்சம் ஒதுங்கி மற்ற இருவரும் dominate செய்ய அனுமதித்திருக்கிறார். லாலும், லஷ்மி-யும் ஆரம்பத்திலிருந்தே அவர்களின் கோட்டுக்குள் இருந்து கொண்டே மற்றவரைக் கவிழ்க்கும் வேலையை செய்கிறார்கள். சிக்கலான வேலையை மற்றவர்களிடம் தள்ளிவிட்டு தான் பலி ஆடாகாமல் தப்புவது என லஷ்மி விளையாட, தனக்குக் கொடுக்கப்பட்ட அதிகாரத்தைத் தேவையான இடங்களில் சுட்டிக்காட்டி லஷ்மியை back-off செய்வது என லால் திருப்பித்தாக்கும் கட்டங்கள் மிக சுவாரசியம் (அவ்வப்போது கருணாநிதியின் தொலைப் பேசி அழைப்புடன்!).

நடப்பு அரசியலை இவ்வளவு துணிவாக (அதுவும் தமிழ்நாட்டில் இருக்கும் குறைவான சகிப்புத்தன்மையை நினைவில் கொண்டால்) எடுத்தாண்டது இதில்தான் முதலில் பார்க்கிறேன். சங்கரின் படங்கள் சமூகப் பிரச்சினைகளைப் பேசுகிறேன் என்று கேலிக் கூத்தாக்கும். லஷ்மியோடு மோகன்லால் மோதும் இடங்கள் பதவிகளில் உள்ள அரசியல் நீங்கள் கதிரியக்க மழையில் நனைந்தாலும் இருக்கும் என்பதைக் காட்டும். B+ தரமுள்ள ஹாலிவுட் படங்களில் இது போன்ற காலை வாரும் அரசியலைப் பார்க்கலாம். தமிழில் அதைத் திறமையாகக் கையாண்டிருக்கிறார்கள்.

கதையில் காட்டப்படும் இடங்கள் கதையின் இறுக்கத்துக்கு உதவுகின்றன. கமலின் control room வெட்டவெளி என்றால், மோகன் லாலின் Situation Room இறுக்கமாக அடைப்பட்ட இடம். இறுதிக்காட்சியில் காட்டப்படும் காலியாக பரந்துக் கிடக்கும் விமான நிலையம், சேதுவின் மனைவி பயணிக்கும் ரயிலில் அவர்களிக் இருக்கைகள் மட்டும் என்று காமிரா தேவையான் பகுதிகளை மட்டும் தன் ஃப்ரேமுக்குள் அடக்குகிறது.

இறுதியாக இசை: ஸ்ருதி ஹாசன் என்பதால் நம் மக்கள் ரொம்பவே எதிர்ப்பார்த்தார்கள் என்று தெரிகிறது. இது போன்ற படங்களுக்கு இசை என்பது மிகக் கொஞ்சமாக இருக்க வேண்டும். கதாபாத்திரங்கள் சரியாக அமைந்து விட்டால் அவர்களின் நடிப்பே தேவையான பதற்றத்தை வரவழைத்து விடும். இது இசை அமைப்பாளர் உணர வேண்டும். ஆனால் படத்தில் மித மிஞ்சிய இசை. காட்சியின் பதற்றத்தை அதிகரிக்கிறேன் பேர்வழி என்று பாஷன் ஷோவில் வரும் இசையைப் போன்று போட்டுத்தாக்கியிருக்கிறார் (இதில் அதிகாரிகள் Bullet Proof vest அணியும்போது Michael Jackson-ன் Billy Jean ட்யூனில் இசை வேறு). இவருக்கு நான் சொல்லுவது, உதிரிப் பூக்கள் படத்தில் இளையராஜாவின் பிண்ணனி இசை (அதுவும் விஜயன் தன் மச்சினியைப் பார்க்கும் போது வரும் இசை). Better luck next time.

படம் என்று எடுத்துக் கொண்டால் கமலுக்கும், தமிழுக்கும் ஒரு நல்ல படம் என்பது மறுக்க முடியாது.



Sunday, September 13, 2009

வார இறுதியில் - 3

அரசியல், விளையாட்டு: இரண்டிலும் பணம் புரள்வதால் நாகரிகததுக்கு இடமில்லை என்று ஜோ வில்சனும், செரினா வில்லியம்ஸும் நிரூபித்துள்ளனர். ஜோ வில்சன் தென்கரோலினா மாகானத்தைச் சேர்ந்தவர். ஒபாமாவின் health care பேச்சின்போது, You liar என்று கத்தினார். ஒபாமா கொஞ்சம் கூட சலனமேயில்லாமல் அதை மிக நாகரீகமாக மறுத்துவிட்டு தன் பேச்சைத்் தொடர, இப்போது ஜோ அவரின் கட்சிக்காரர்களாலேயே கண்டிக்கப் பட்டிருக்கிறார்.

இத்தனைக்கும் ஜோ இராணுவத்தில் பணி புரிந்தவர். இராணுவத்தினருக்கு ஜனாதிபதி Commander-in-Chief. அந்தப் பதவிக்குரியவரையே எதிர்த்து முட்டாள்தனமாகக் கத்தியிருக்கிறார். புஷ் இராக் போரைப் பற்றி பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது கத்த வேண்டிய வார்த்தையை இப்போது கத்தி குடியரசு உறுப்பினர் தான் புஷ்-க்கு சளைத்த முட்டாள் இல்லை என்று நிரூபித்திருக்கிறார்.

விளையாட்டில் ஜோ-க்கு சளைக்காமல் செரினா நடந்த விதம் இன்னும் பைத்தியக்காரத்தனம். தேவையில்லாமல் Line Judge-ஐ திட்டி ஆட்டமும் இழந்து (இல்லையென்றாலும் கிம் எளிதாக வென்றிருப்பார்), $10000 டாலரும் இழப்பு.

இவர்கள் இருவரும் கற்க வேண்டிய முதல் பாடம் சபை நாகரிகம்.

நாட்டு நடப்பு: இந்த வார Outlook-ல் வந்த இரண்டு செய்திகள்:

1) வக்ஃப் வாரியத்தின் ஊழல்

வக்ஃப் வாரியத்திற்கு சொந்தமான நிலங்கள் ஏராளம். பல முகலாய, நிஜாம் மன்னர்களால் மானியங்களாக வழங்கப்பட்ட நிலங்களை நிர்வாகம் செய்கிறது. இதில் வரும் வருமானம் இஸ்லாமிய சமுதாயத்திற்கு பயன்படும் வகையில் அமையவேண்டும். பொதுவாக மாநில அரசுகள் தங்கள் கட்சியில் உள்ள இஸ்லாமிய உறுப்பினர்களை நியமனம் செய்யும். இதுவே ஊழல்களுக்கு வழி வகுக்கிறது. உதாரனமாக அனில் அம்பானி கட்டும் புது கட்டிடம் ஒன்றின் மதிப்பு 27 கோடி. ஆனால் விற்கப்பட்டதோ 16 லட்சத்திற்கு. அனில் 27 கோடி கொடுக்கவில்லையென்றாலும் கொடுத்த வரையில் 16 லட்சம் தவிர மீதி வாரிய தலைவர்/உறுப்பினர் பையில். அரசு தலையிட பயப்படுகிறது. தலையிட்டால் ‘இஸ்லாமிய மதத்திற்கு அபாயம்’ என்று கூக்குரல்.

2) குஜராத் போலீசின் (மோடியின் அடியாட்கள் என்று வாசிக்க) 2004 என்கவுண்டர் போலி என்று கண்டுப்பிடிப்பு.

2004-ல் மோடியைக் கொலை செய்யும் உத்தேசத்துடன் இருந்தவர்கள் என்று நான்கு பேரை (ஒரு பெண் உட்பட) குஜராத் போலீஸ் பம்பாய் அருகே சுட்டுக் கொன்றது. ஆனால் 5 வருடங்கள் பிறகு, நீதிபதி தமங் அளித்த தீர்ப்பில் இது போலி என்கவுண்டர் என்று அறிவித்துள்ளார். ஆனால் மோடி அரசு பாய்ந்து இன்னொரு நீதிபதி மூலம் இந்த அறிக்கைக்குத் தடை வாங்கியுள்ளது.

Only in India.


Monday, September 07, 2009

வார இறுதியில் - 2

Labor Day விடுமுறை என்பதால் திங்கட்கிழமை அன்று பதிகிறேன்.

அரசியல்: ராஜசேகர ரெட்டி இறப்பு யாருக்கு நஷ்டமோ இல்லையோ ஊடகங்களுக்கும், வேலையில்லாத உதவாக்கரைகளுக்கு இலாபம். ஒரு மாநில முதல்வர் மறைவுக்கு இந்தியா முழுவதும் துக்கம் (கட்டாயமாக) அனுஷ்ட்டிக்க வைக்கும் வியாதி இந்தியாவில் மட்டுமே உண்டு.

தொலைகாட்சியில் (வரவழைத்துக் கொண்ட கண்ணீருடன்)அழுது கொண்டே பேட்டிக் கொடுத்தவர்களையும், அவர்களை விடக் கேவலமாக தற்கொலை செய்து கொண்ட கோமாளிகளைப் பற்றியும் படித்துக் கொஞ்ச நேரம் பிரமித்திருந்தேன்.

அழுமூஞ்சிகளை விட்டு விடலாம். அரசியல் பொறுக்கிகளுக்கு அழுகை சகஜம். தற்கொலை செய்தவர்களின் மனநிலையைப் பார்ப்போம். எது இவர்களைத் தூண்டுகிறது? தாழ்வு மனப்பான்மை? ஒரு வேலைக்கும் உதவாமல் இருப்பது? படிப்பறிவின்மை? தன்னம்பிக்கை இல்லாமல் எவனோ ஒருவனைத் தலைவனாக நினைப்பது? எப்போதாவது ராஜசேகர் ரெட்டியைப் பார்த்திருக்கிறார்களா? அவரின் எந்த செயல் இவர்களைத் தூண்டியது? அவர்களுக்குத் தெரியுமா ஒரு அரசியல்வாதி செய்யும் வேலையில் 10-20% மட்டுமே மக்களை சென்றடைகிறது, மீதம் அவன் பையையும், அவனின் அல்லக்கைகளையும் சென்றடைகிறது என்று?

எது இந்தக் கோமாளிகளைத் தற்கொலை செய்யத் தூண்டியது?


அமெரிக்காவும் எட்வர்ட் கென்னடி-யின் மறைவை நினைவு கூர்ந்தது, அவர் கென்னடி என்பதால். அந்த வகையில் இந்திய சாயல் இருந்தது. என்றாலும் அவரவர் வேலையைப் பார்த்தார்கள். இதற்கெல்லாம் விடுமுறை கேட்டால் சுளுக்கு விழும். மாசசூசெட்ஸ் மாநிலத்தில் மட்டும் (எனக்குத் தெரிந்த வரையில்) சில இடங்களில் From MA people, Thanks Ted என்று மின்னனுப் பலகைகள் வைத்தார்கள்.

புத்தகம்: ஒரு வழியாக நேற்று இரவு விழித்து ‘The Brothers Karamazov' முடித்தேன். கதை இறுதி வக்கீல்கள் வாதங்கள் கொஞ்சம் சோர்வடைய செய்தாலும் மிக அற்புதமான classic. ஒவ்வொரு அத்தியாயத்திலும் கதாபாத்திரங்கள் கொள்ளும் மாறுபாடுகள் ஆராய்ச்சிக்குத் தகுந்தவை. ரஷ்ய இலக்கியங்கள் படிக்க ஆரம்பிக்க தஸ்தாவ்யேஸ்கியின் இந்தப் புத்தகம் சிறந்த நுழைவாயில். தமிழ் இலக்கிய வாதிகள் இந்தப் புத்தகத்தைப் பற்றி அவர்களின் சிக்கலான தமிழில் சிலாகித்து ‘இதையெல்லாம் படிக்கனும்னா உனக்கு இரண்டு கொம்புகள் வேண்டும்’ என்று சொல்வார்கள். அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் உள்ளே நுழையுங்கள்.

அடுத்த புத்தகம் படிக்க எடுத்திருப்பது ‘Patrick French' எழுதிய ‘Liberty or Death'. சமீபத்தில் ஜஸ்வந்த் சிங் ஜின்னாவைப் பற்றி எழுதி பிஜேபி-க்கு சாமி வரவழைத்ததைப் போன்று 1997 Patrick ஒரு புயலைக் கிளப்பினார். காந்தியின் அரசியலை/புனித பிம்பத்தைக் கேள்விக்குள்ளாக்கினார். ஜின்னாவைப் பற்றிய இந்தியப் பார்வை தவறு என்று நிரூபிக்க முயன்றார். ஆனால் இப்போதைய புயல் போன்று 1997-ல் கிளம்பாததற்க்குக் காரணம் Patrick அயல் தேசத்தவர், அதுவும் பிரிட்டனைச் சேர்ந்தவர் என்பது ஒரு காரணமாக இருக்கலாம். இந்தப் புத்தகத்தைப் பற்றி Krishan Kalra என்பவர் '’Liberty or Death’ should be included in the category of yellow journalism and be banned in India' என்கிறார். அப்படியானால் கண்டிப்பாகப் படித்தே ஆகவேண்டும் என்று நூலகத்திலிருந்து எடுத்து வந்து விட்டேன். முதல் 10 பக்கங்கள் படித்த வரையில் ஓகே.

படித்து முடித்தபின் Rajmohan Gandhi எழுதிய Mohandoss-ம் குஹா எழுதிய India After Gandhi-ம் படிப்பதாக பிளான்.