Sunday, February 28, 2010
உலோகம் - FIR
- துப்பறியும் வகையா, தமிழகத்துக்கு வரும் ஈழத் தமிழர்கள் வாழ்க்கை குறித்த வகையா என்றெல்லாம் ஒரு கூண்டில் மாட்டாமல் கதை செல்கிறது.
- 'ரா'-வின் பிடி பற்றி (புதினத்தில்) முதன் முதலாகப் படிக்கிறேன் (வேறு நூல்கள் இருந்தால் தகவல் ப்ளீஸ்).
- இந்திய உளவு இயக்க செயல்பாடுகள் பற்றி புதினத்தில் படிப்பதால் பல நிகழ்ச்சிகள் abstract-ஆக இருக்கின்றன. உ.தா. அதிகாரி வீரராகவன் கொல்லப்படுவது.
- பாத்திரங்கள் ஜெமோ-வின் முத்திரைகளுடன். அடி மனதின் கசடுகளை மிகத்திறமையாக விளக்குவதில் ஜெமோ திறமைசாலி.
- கதாநாயகன் செயல்கள் ஒருவித ஜேம்ஸ் பாண்ட பாணியில் விளக்கப்படுவதால் உணர்வுகள் அன்னியமாகின்றன.
- ஜோர்ஜ் பாத்திரம் அனுதாபத்திற்கு கொல்லப்படுவது வேஸ்ட். கதாநாயகன் (அல்லது அவனின் ஆட்கள்) சிறீ-யின் ஆளைப் போட்டுத்தள்ளி சிறீ-யை நெருங்கியிருக்க முடியும்.
இந்த நாவல் எவ்வளவு தூரம் பேசப்படும்? ஜெமோ எழுதியதாலேயே நிராகரிக்கப்படும் அபாயம் உண்டு (ஜெமோ-வா? படிக்கவே வேண்டாம். அவர் ஹிந்துத்துவ/'ரா' ஆளுங்க.).
'பெயரிலி' நாவல் ஆரம்பித்த போதே நிராகரித்து விட்டார். தமிழக அரசியல் உலகில் பேசும் தகுதி உள்ள ஒரு ஜீவன் இனிமேல் தான் அடையாளம் காணப் படவேண்டும். ஈழத் தமிழ் உலகில் சிலரிடமிருந்து (குறிப்பாக ஷோபா சக்தியிடமிருந்து) எதிர்பார்க்கிறேன்.
முடிவாக: ஷோபா சக்தியின் 'கொரில்லா', 'தேசத் துரோகி' மற்றும் 'ம்' கதைகள் அளவு உலுக்கவில்லை என்றாலும் இந்திய நாடு வந்த ஒரு மனித யந்திரத்தின் செயல்பாடுகளை விவரித்த அளவில் இந்த நாவலுக்கு ஓர் இடம் உண்டு.
விரிவாக, நேரம் இருந்தால்...
Thursday, February 04, 2010
Wolf Dreams
புதினங்கள் படிப்பதை சிறிது காலமாகவே நிறுத்தி வைத்திருந்தேன். அ-புதினங்கள் படிக்க வேண்டியவை அதிகமாகவும், கற்பனை கதாபத்திரங்களின் சோக/ஆனந்த/வருத்தம் போன்ற உணர்ச்சிகள் ரமணி சந்திரன் வாசகர்களுக்கு தாரை வார்த்து விட்டதாலும் புதினங்கள் கவரவில்லை. ஆனால் அரபு இலக்கியங்கள் பற்றி சாரு (ஆம்.. சிரிக்காதீர்கள்) எழுதியதைப் படித்த பின் கொஞ்சம் தேடியதில் 20-25 புத்தகங்கள் தேறியிருக்கின்றன. இதில் எச்சரிக்கையாக மேற்குலக எழுத்தாளர்களின் மத்திய கிழக்கு புதினங்களை விலக்கிவிட்டேன். அரபு நாடுகளிலேயே வாழ்ந்து அல்லது இப்போது அரபு எழுத்தாளர்கள் மற்ற நாடுகளில் அடைக்கலம் புகுந்து வாழ்பவர்களின் எழுத்துக்கள் மட்டுமே படிப்பதாக உத்தேசம்.
Wolf Dreams பேசுவது ஒரு சாதாரண குடிமகன் எப்படி தீவிரவாதியாகிறான் என்பது பற்றி. வாலித் ஒரு அமெச்சூர் நடிகன். அழகன். அவன் கனவில் அல்ஜீரியாவின் சிறந்த நடிகனாக கேன்ஸ் திரைப்பட விழாவில் பரிசு வாங்கப் போவதாகக் கனவு கண்டு, ஆனால் அந் நாட்டின் மிகப் பெரும் பணக்காரர் ஒருவரின் வீட்டில் கார் ஓட்டுனராக வேலைக்கு அமர்கிறான்.
வேலையில் சேர்ந்தவுடன் அவனுக்கு நல்ல சட்டைகள், சூட்கள் கிடைத்தாலும் நாயைப் போல எசமானர்கள் செல்லும் இடங்களில் காத்து நிற்கும் வேலை. எசமானரின் மகன், மகள் அனைவரும் இவனை ஒரு சாதாரண மனிதனுக்குக் கிடைக்கவேண்டிய மரியாதையைக் கூட கொடுப்பதில்லை. மகன் ஊரில் உள்ள விலைமாதர்களை அழைத்து வரும் வேலையைக் கொடுக்க, மகளோ தன் வருங்கால கணவன் இன்னொரு பெண்ணைப் பார்த்து இளித்ததற்கு தண்டனையாக இவனோடு உடலுறவு கொள்கிறாள். எசமானின் அந்தரங்க வேலைக்காரன் ஹமித் செய்யும் ஒரு குரூரமான செயலால் வாலித் அந்த வேலையை விட்டு ஒடி விடுகிறான்.
வாலித்-ன் துரதிஷ்டம் அவனின் எந்த ஒரு முயற்சியையும் பாதியில் முறிக்கிறது. அவன் விரும்பும் பெண் மத வெறி அண்ணனால் கொலை செய்யப்படுகிறாள். அவனின் சேமிப்பை ஒருவன் திருடுகிறான். இதற்கிடையில் அல்ஜீரியாவில் மத அடிப்படைவாதம் தீவிரமடைகிறது. வாலித் தன் நினைவின்றி பங்கேற்கும் ஒரு கலவரத்தால் போலீசிடம் சிக்குகிறான். அதுவே அவனை தீவிரவாதம் நோக்கி தள்ளுகிறது. முதல் கொலையை மதத்தின் பெயரால் செய்கிறான்.
பின் கொலைகள் செய்வது சுலபமாகி விடுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக ஒரு கூட்டத்துக்கே தலைவன் ஆகி, தன் தலைவன் இறந்தவுடன் அவரின் மனைவியை மணந்து, ஒரு முழு கிராமத்தையே( பெண்கள், குழந்தைகளையும்) கொல்லும் வரை அவனின் தீவிரவாதம் வளர்கிறது.
யஸ்மினாவின் கதை சொல்லல் எந்த மழுப்பலும் இல்லாமல் வாலித்-ன் கதையை ஒரே சீராக செலுத்துகிறது. இடையிடையே அல்ஜீரியாவின் வரலாறு கதையின் ஊடாக வருவதால் குழப்பமில்லை. அந் நாட்டின் வறுமை, மத தீவிரவாதிகளின் அணுகுமுறை, மக்களும், அரசும் தொடர்பில்லாமல் இருத்தல் போன்றவை நேரடியாக சுட்டப்படுகின்றன.
முதல் இரண்டு பாகங்கள் வாலித்-ன் மனப் போராட்டத்தை விரிவாக பதிவு செய்கிறது. மூன்றாம் பாகம் அவன் அதை சுத்தமாக துடைத்துப் போட்டு கூலிப் படைத்தலைவனாக மாற்றுகிறது. கதை இசுலாமிய தீவிரவாதத்தை விவரித்தாலும் வாலித் மதத்தை தான் செய்யும் கொலைகளுக்கு உபயோகிப்பதில்லை.
யஸ்மினா-வின் கதை சொல்லல் தெளிவாக இருந்தாலும் அல்ஜீரிய அரசியல் நிகழ்வுகள் சொல்லும் விதம் ஒரு கட்டத்திற்கு மேல் அலுப்பாகி விடுகிறது. ஆரம்பத்தில் அக்குறிப்புகள் உபயோகமாக இருந்தாலும் போகப் போக 'செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணசுவாமி' பாணியில் விளக்கப் படுகின்றன. தேர்ந்த கதை சொல்லி இதை பாத்திரங்கள் வாயிலாக வெளிப் படுத்தியிருப்பார்.
கதையில் மிகவும் சலனப்படுத்திய இடங்கள் வாலித் பங்கு கொள்ளும் இரு கொலைகள். ஒன்று அவனின் முதல், இரண்டாவது அவனுக்கு தெரிந்தவன். இறப்பவன் தான் இறப்பது தன் குழந்தைகள் முன்னால் என்பதைவிட வாலித் இதை நிகழ்த்துகிறான் என்பதுதான் அவனுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. அவன் கதறுவது:
"I don't believe it, not you Nafa..You're an artist...an artist"
தீவிரவாதியானதை விட வாலித் தன் வாழ்க்கையில் அடையும் தோல்வி இங்குதான்.
Monday, December 28, 2009
வாங்க வேண்டிய புத்தகங்கள்
திருநங்கைகள் உலகம் - கிழக்கு
ராஜீவ் கொலை வசக்கு - கிழக்கு
திமுக உருவானது ஏன் - கிழக்கு
சென்னை மறு கண்டுபிடிப்பு - கிழக்கு
சீனா மறு கண்டுபிடிப்பு - கிழக்கு
பிரபாகரன்-வாழ்வும் மரணமும் - கிழக்கு
கோபுலு-கோடுகளால் ஒரு வாழ்க்கை - கிழக்கு
கடல்புரத்தில் - கிழக்கு
இருளர்கள் - ஒரு அறிமுகம் - கிழக்கு
நாவல் - ஜெயமோகன் - கிழக்கு
இந்திரா பார்த்தாசாரதி கதைகள் - கிழக்கு
மீண்டும் ஜீனோ - சுஜாதா - கிழக்கு
இந்து ந்ஜான மரபில் ஆறு தரிசனங்கள் - ஜெயமோகன் - கிழக்கு
யாமம் - எஸ். ரா - உயிர்மை
சிலுவையின் பெயரால் - ஜெமோ - உயிர்மை
தனிமையின் இசை - ஷாஜி - உயிர்மை
நாயக்கர் காலம் - ராமசாமி - உயிர்மை
குடுகுடுப்பைகாரர் வாழ்வியல் - ந. முருகேச பாண்டியன் - உயிர்மை
\ ஆதிகேசவப் பெருமாள் கோயில் வரலாறு - ஆ. கா. பெருமாள் - தமிழினி
இன்றைய காந்தி - ஜெயமோகன் - தமிழினி
கு.ப.ரா கதைகள் (முழு தொகுப்பு) - அடையாளம்
பாட்டும், தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச்சமூக உருவாக்கமும் - ராஜ் கௌதமன் - தமிழினி
ஆகோள் பூசலும் பெருங் கற்கால நாகரிகமும் - ராஜ் கௌதமன் - தமிழினி
ஆரம்பக்கட்ட முதலாளியமும் தமிழ்ச்சமூக உருவாக்கமும் - ராஜ் கௌதமன் - தமிழினி
கந்தர்வன் கதைகள் - வம்சி பதிப்பகம்
அர்ச்சுனன் தபசு - பாலுசாமி - காலச்சுவடு
மேலும் பல புத்தகங்கள் சேரலாம். காலச்சுவடு வெளியீடுகள் இன்னும் தெரியவில்லை. சாருவின் ஓரிரண்டு புத்தகங்கள் பட்டியலில் சேரும் என்று நினைக்கிறேன்.
Monday, December 14, 2009
உதவி
நான் 911 கூப்பிட செல் பேசியை எடுக்கும்போதே இன்னொருவர் அதே எண்ணைக் கூப்பிட்டுக் கொண்டிருந்தார். அருகில் சென்றுப் பார்த்தபோது, மயக்கம் தெளிந்து அந்தப் பெண் சோர்வாக அமர்ந்திருந்தாள். பெயர் Amy என்றாள். முகவரி விசாரித்தபோது நினைவில் இல்லை என்றாள்.
காவலதிகாரி முதலில் எளிமையாகக் கேள்விகள் கேட்டுக் (பெயர், இன்றைய கிழமை) கொண்டிருக்கும்போதே ஆம்புலன்ஸ் வந்துவிட, மருத்துவர் அவளின் ஓட்டுநர் லைசன்ஸைப் பார்த்து அவள் வேறொரு மாகாணத்திலிருந்து வந்திருப்பதை அறிந்தார். உள்ளூர் முகவரி தெரியவில்லை. அவளின் செல்பேசியிலும் ஆபத்துக்குக் கூப்பிட வேண்டிய எண் சிக்கவில்லை.
என்னோடு இருந்த இளைஞன் நாயின் கழுத்துப் பட்டியில் இருந்து முகவரி கண்டுப்பிடிக்க முயல, அது அவனிடமிருந்து நழுவியது. விடாமல் அதை நோண்ட, நாய் பொறுமை இழந்து 'வள்' என்றது. அவள் அதைத் தடவிக் கொடுத்தாள்.
நான் நாயை அருகில் இழுத்து அதைக் கொஞ்சிக் கொண்டே கழுத்துப் பட்டியில் இருந்து அது வழக்கமாக செல்லும் மருத்துவமனை முகவரியும், தொலப் பேசி எண்ணும் படிக்க காவலர் அதைக் குறித்துக் கொண்டார். பின் மருத்துவர்கள் அவளை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல முடிவு செய்து அவளை ஆம்புலஸில் ஏற்றினர்.
இப்போது நாயை யார் பார்த்துக் கொள்வது என்பதில் சிக்கல் ஏற்பட்டது(மருத்துவர்களுக்கும், காவலருக்கும்). ஒரு மருத்துவர் Man's best friend, அதனால் உங்களோடு இருக்கட்டுமே என காவலரிடம் சிரித்துக் கொண்டே சொல்ல, அவர் இதை வைத்துக்கொண்டு நான் எப்படி ரோந்து செல்வேன் என்றார் - சிரிக்காமல்.
நானும் என்னோடு இருந்தவர்களும் அடுத்து என்ன செய்வது என நிற்க, மருத்துவர் எங்கள் பக்கம் திரும்பி 'நீங்கள் செல்லலாம்..நன்றி' என்றார்.
நான் நாயைப் பார்த்தேன். அது தன் எசமானி ஆம்புலன்ஸில் ஏறுவதை ஏக்கமாகப் பார்த்துக் கொண்டிருந்தது.
காரில் ஏறி வீடு வந்து சேர்ந்தேன்.
பி.கு.: கொஞ்ச நாட்கள் முன் நான் வசிக்கும் ஆர்லிங்டன் நகரில் நடந்த ஒரு சம்பவம் இது. நேரில் பார்த்ததை அசோகமித்திரன் பாணியில் எழுதிப் பார்க்க முயன்று பின் நம்பிக்கை இல்லாமல் கோப்புகளில் சேமித்து வைத்திருந்தேன். இன்று கொஞ்சம் தயக்கத்துடன்வெளியிடுகிறேன்.
Sunday, November 15, 2009
வார இறுதியில் - 5
Sunday, September 20, 2009
வார இறுதியில் - 4
Sunday, September 13, 2009
வார இறுதியில் - 3
Monday, September 07, 2009
வார இறுதியில் - 2
Sunday, August 30, 2009
வார இறுதியில் - 1
Monday, April 27, 2009
Poor Banchee
I'll cover with cheese...
I lost my poor Banchee,
When somebody sneeze
AA..choo...
As sung by Manasa ( We are still trying to find the meaning of 'Banchee' :) )
Down by the Bay...
Where the watermelons grow
Back to my home
I do not go.
Or if I do...
My mother will say:
"Have you ever seen camel wearing Pajamas?"
Down by the bay...
- As sung by Manasa
Monday, March 23, 2009
Paradise Now
Curt Schilling
Sunday, July 27, 2008
Missing
இளமையில் இறப்பது கொடியது. அதிலும் பெற்றோர் மகனையோ, மகளையோ இழப்பது அதனினும் கொடியது. இறந்த மகன்/மகள் இயற்கையாக இறக்காமல் விபத்தில் அல்லது கொடூரமாக சிதைக்கப்பட்டு இறப்பது...
'பிறவி' திரைப்படம், ஈச்சுர வாரியாரின் 'ஒரு தந்தையின் நினைவுக் குறிப்புகள்' புத்தகம் மேற்கண்ட வலியைப் பேசும் சில உதாரணங்கள். தமிழ்த் திரைப்படங்கள் இதை இயல்பாகக் கையாண்டதில்லை (அதிலும் சிவாஜியை நடிக்க வைத்து பார்ப்பவர்களைக் கொடுமைப் படுத்துவார்கள்).
Missing என்ற ஆங்கிலப் படம் காணாமல் போன ஒரு நிருபரை (சார்லி) அவனின் மனைவியும், தந்தையும் தேடும் கதை. சாரு நிவேதிதா 'கலகம், காதல், இசை' புத்தகத்தில் 'விக்தர் ஹொரா' என்ற சிலே பாடகரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியிருப்பார் (அவரின் 'திரிலோக்புரி' என்ற தரமான கதையோடு இந்த வாழ்க்கை வரலாறும் அனுபவித்து வலியுடன் எழுதப்பட்டிருக்கும்).
விக்தர் சிலேயில் 'பினோசெட்' என்ற இராணுவ ஜெனரல் பதிவிக்கு சி.ஐ.எ துனையோடு வந்தபோது கொல்லப்பட்டவரில் ஒருவர். Missing கதையும் சார்லி அவ்வாறு சிலே அரசாங்கத்தால் கொல்லப்பட்டதை விவரிக்கிறது.
சார்லி சிலேயில் தன் மனைவியுடன் தங்கி ஒரு இடது சாரி பத்திரிகையில் எழுதுபவன். Vina என்ற இடத்திற்கு ஒரு நாள் சுற்றுப் பயணம் செல்கையில் பினோசெட்-இன் படைகள் அந்த இடத்திலிருந்து கலகத்தை ஆரம்பிக்கின்றன. அங்கு தங்கியிருக்கும் சில அமெரிக்க அதிகாரிகளிடம் பேசுகையில் அவனுக்கு அவர்களின் பங்குகள் குறித்து சந்தேகங்கள் வர ஆரம்பிக்கின்றன. பல அப்பாவி மக்கள் கலகக் குண்டர்களால் கொல்லப்படுவதை காண்கிறான். அமெரிக்கர்கள் மூலமாக கலகப் படைகளின் பார்வை இவன் மீது படிகிறது.
மீண்டும் தன் மனைவி(பெத்) இருக்கும் இடம் வந்த மறுநாள் காணாமல் போகிறான். அவனின் தந்தை (எட்வர்ட்) சிலே வருகிறார். இவர் மிகத் தீவிரமான கிறித்தவர். தன் மகன் மற்றும் மருமகளின் சுதந்திர மனோபவத்தை எதிர்ப்பவர். தன் மகன் ஒன்றுக்கும் இலாயகில்லாதவன், அவனின் மனைவியும் அவ்வாறே என்று நினைப்பவர். சிலேயில் வந்ததிதிலிருந்து அவருக்கும் பெத்-ற்கும் தகராறு. பெத் இவரின் வருகையை வெறுக்கிறாள். 'எதற்காக வந்து என் உயிரை வாங்குகிறாய்?' என்று முகத்தில் அறைவது போலக் கேட்கிறாள்.
எட்வர்ட் சந்திக்கும் அமெரிக்க தூதரக அதிகாரிகள் விரைவில் மீட்டுவிடலாம் என உறுதி அளிக்கிறார்கள். ஆனால் நாட்கள் செல்ல செல்ல அது வடிக்கட்டிய பொய் என எட்வர்டிற்கு புரிகிறது. பெத் எட்வர்ட் வருவதற்கு முன்பே பல முயற்சிகள் மூலம் அந்த முடிவிற்கு வருகிறாள்.
இதனிடையில் அவருக்கு பெத்துடன் நல்லுறவு மலர்கிறது. முதல் முறையாக அவளின் போராடும் குணமறிந்து மதிக்கிறார். அமெரிக்க வாழ்க்கையைத் தவிர வேறு உலகங்களும் இருக்கின்றன என்பது புரிகிறது.
பல தொடர்புகள் மூலம் அவர் மகன் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டான் என்று தெரிய வருக்கிறது. அதிலும் எட்வர்ட் ஆழ்ந்த நம்பிக்கை வைத்திருக்கும் அமெரிக்க அரசாங்கம் இதற்கு உடந்தை என்றும் அறிகிறார்.
உடைந்த மனதுடன் பெத்தும், எட்வர்டும் ஊர் திரும்பி கிசிங்ஜர் உட்பட ஏழு அரசாங்க அதிகாரிகள் மீது வழக்கு தொடர்கிறார்கள். போதிய ஆதாரமின்மையால் தோல்வியுறுகிறது.
சார்லியின் உடல் ஏழு மாதங்கள் கழித்து அமெரிககா திரும்புகிறது (உடல் பரிசோதனை நடந்தாலும் எவ்வாறு இறந்தான் என்பதை அறிய முடியாத வண்ணம்).
இது உண்மைக் கதை. சார்லி தான் கண்டதை, கேட்டதை குறிப்புகளாக எடுத்து வைத்திருந்தார். அதை அடிப்படையாக வைத்து புத்தகம் பின் திரைப்படமாக உருவெடுத்தது. திரைப்படத்தில் சிலே நாட்டின் பெயர் வருவதில்லை. படம் வந்த வருடம் 1982. பினோசெட் பதவியில் இருந்தார். ஆனால் பல காட்சிகள் வழியே மறைமுகமாக சொல்லப்பட்டுவிடுகிறது.
திறமையான இயக்கத்தில் (Costa Gavras எனற கிரிஸ் நட்டு இயக்குனர்.) கலகக்காரர்களின் இரும்புப் பிடி நாஜி ஜெர்மனியை நினைவூட்டுகிறது. நடு வீதியில் நடக்கும் படுகொலைகள், இளைநர்களைப் பிடித்து மொத்தமாக தீர்த்துக்கட்டுவது, ஆள் மறைவு போன்றவை திறமையான காட்சிகள் மூலம் இயக்குனர் காட்டுகிறார் குறிப்பாக:
a) சார்லி, மற்றும் பெத் இருவரும் ஊரடங்கு உத்தரவுக்குப் பின் தனியே தெருவில் மாட்டிக்கொள்வது,.
b) பெத் மற்றும் எட்வர்ட் பிணக்கிடங்கில் தேடும்போது அந்த அதிகாரி சலனமே இல்லாமல் ஒவ்வொரு அறையிலும் உள்ள நூற்றுக்கணக்கான சடலங்களை எது அடையாளம் காணப்பட்டது எது காணப்படவில்லை என விவரிப்பது.
ஒரு இடத்தில் எட்வர்ட் நடக்கும் வன்முறைகளைக் காணச் சகிக்காமல் 'What part of world is this?' என்பார்.
இன்று இலங்கையிலும், மோடியின் குஜராத்திலும் கேட்க வேண்டிய கேள்வியும் கூட.
பின் குறிப்பு: இந்தப் படத்தின் முழுத்தாக்கத்தையும் பெற முன் குறிப்பிட்ட சாரு-வின் கட்டுரையைப் படிப்பது நல்லது.
Tuesday, March 28, 2006
பத்து புத்தகங்கள்
அதிகாலை(The Dawn) - எலீ வீசல்
காடு - ஜெயமோகன்
ஏறக்குறைய சொர்க்கம் - சுஜாதா
Delhi - குஷ்வந்த் சிங்
அசோகமித்திரன் கட்டுரைத் தொகுப்பு
The feast of the goat- மரியோ வார்கஸ் லோஸா
From Beirut to Jerusalem - டாம் ப்ரீட்மன்
சில நேரங்களில் சில மனிதர்கள் - ஜெயகாந்தன்
A fine balance - Rohinton Mistry
Tuesday, January 10, 2006
நியூயார்க்கர் திரை விமர்சனங்கள்
இவர்களைத் தமிழ்ப் படங்கள் பார்க்க வைக்க வேண்டும் :).
Wednesday, December 14, 2005
கங்கூலி சகாப்தம்
ஊடகங்களில் இவரது நீக்கம் பற்றி அதிகமாகக் கண்டனங்களே எழுந்துள்ளன. முந்தைய அணித்தலைவர்களின் மென்மை அணுகுமுறையினால் துவண்டுக் கிடந்த அணியை தன் போராட்டக் குணங்களால் தூக்கி நிறுத்தியவரை இவ்வாறு வீட்டுக்கு அனுப்ப வேண்டியதில்லை என்பதே அவைகளின் சாராம்சம்.
ஆனால் கங்கூலியே தனக்குக் குழி வெட்டிக்கொண்டார். க்ரெக்-ஐ எதிர்த்து ஜிம்பாப்வேயில் அரசியல் செய்து முதுகெலும்பில்லாத வாரியத் தலைவர் க்ரெக் புறம் கூறினார் என சொல்லும் அளவு கங்கூலி விளையாடினார். இந்திய சூழலில் இது ஒரு சாபக்கேடு. தலைவனாக அறியப்பட்டவன் சொல்லும் வார்த்தைகளை அப்படியே எடுத்துக் கொண்டு மற்றவர்களும் உளறுவது.
ஆனால் க்ரெக்-இன் உணர்ச்சி வயப்படாத அணுகுமுறை காட்சிகளை மாற்றியது. பதட்டமடைந்த சவுரவ், தனக்கு டென்னிஸ் எல்போ என சாக்கு சொல்லி, டென்டுல்கர் அளவு தனக்கும் மரியாதைக் கிடைக்கும் என எதிர்ப்பார்த்தார். இல்லை. உடனே உள்ளுர் போட்டிகளில் கலந்து கொண்டு ஒழுங்காக விளையாட முயன்றார். தோல்வி. தொடர்ந்த நிகழ்ச்சிகளில், இதோ, மூட்டையைக் கட்டிக் கொண்டிருகின்றார்.
என்னைப் பொறுத்தவரையில் இந்திய அணித் தேர்வாளர்கள் சரியான திசையை நோக்கியே செல்கிறார்கள்(அரசியல் இருப்பினும்). பழையப் பெருமைகளுக்காக இன்னும் அணியில் ஒட்டிக்கொண்டு உதவாமல் இருப்பவர்களைக் கழற்றி விடப்படத்தான் வேண்டும். தனி மனித வழிப்பாடுகளுக்கு கிரிக்கெட்டில் இடமில்லை. அதற்கு டென்னிஸ் விளையாடலாம்.
இன்று படித்ததில் கிரிகினஃபோவில்(http://content.cricinfo.com/indvsl/content/story/229570.html) எழுதப்பட்ட கட்டுரை அறிவுப்பூர்வமாக, ரீடிஃப்பில் வடேகரின் செவ்வியில்(http://in.rediff.com/cricket/2005/dec/14wadekar.htm) டென்டுல்கரைப் பற்றிய பதில் சிரிப்பை வரவழைத்தது. ஆம்...அணியில் உள்ள வீரரால் அணி வெற்றிக்கு பங்கில்லையென்றால் விலக்கப்பட வேண்டும்...அது டென்டுல்கராக இருந்தாலும்.
Thursday, May 19, 2005
ஸ்டார் வார்ஸ்-3
"ஸ்டார் வார்ஸ்" வரிசையில் லூகாசுக்கு இதுவே இறுதிப் படம்(மற்ற எவருக்கும் இந்த அளவு பிரம்மாண்டம் எடுக்க துணிவு இருக்கும் என தோன்றவில்லை). படம் அனகின் ஸ்கைவாக்கர் எவ்வாறு தீயசக்திகளின் பக்கம் சாய்ந்து 'டார்த் வேதர்' ஆனான் என்பதை சொல்கிறது.
1977-ல் இப்படத்தின் முதல் பகுதி வந்தபோது, உலகமே பைத்தியம் பிடித்து அலைந்தது. கதை என்னவோ ரொம்ப சாதாரணம்தான். கொடுங்கோலரசரை வீழ்த்த புரட்சிக் குழுக்கள் முயல்கின்றன. அவர்களுக்கு உண்டாகும் அனுபவங்கள் மூன்று படங்களாக 1983 வரை வந்தன.
படத்தின் உயிர் நாடி "டார்த் வேதர்" எனும் வில்லன். இவனின் உருவ அமைப்பு நடுங்க வைக்கும் என்றால், குரலோ கேட்பவரைச் சில்லிட வைக்கும்(குரல் கொடுத்தது ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ்). இவனுக்கும் கதை நாயகனான லூக் ஸ்கைவாக்கருக்கும்(ஆம்...இவன் டார்த்தின் மகன் தான்) நடக்கும் யுத்தம்தான் படத்தின் முக்கிய காட்சிகள்.
பிரம்மாண்டம் என்பதற்கு அர்த்தம் கொடுத்தவை ஸ்டார் வார்ஸ்தான். நகைமுரண் என்னவென்றால், முதல் படத்தைப் பார்த்த வினியோகஸ்தர்கள் 'இது உருப்படாது' என முடிவு செய்ய, அங்கிருந்த ஸ்பீல்பர்க் மட்டும் இது ஹாலிவுடின் திருப்புமுனைப் படம் என சரியாகக் கணித்தார். இப்படங்களுக்கு லூகாஸ் பட்ட சிரமங்களை ஒரு பெரியப் புத்தகமாகப் போடலாம்.
1983க்குப் பிறகு லூகாஸ் "டார்த் வேதர்" கதையை எடுக்கத் திட்டமிட்டார். 1997-ல் முதல் படம் வந்தது. அதில் ஆனகின் ஒரு பொடியனாக பல சாதனைகளைச் செய்து, பெரிய வீரனாவதற்கு அடிப் போடுகிறான். இரண்டாவது படத்தில் இராணி 'பட்மே'வின் மனதில் இடம் பிடித்து 'ஜெடாய்' எனும் சிறப்பு வீரனாகிறான்.
இன்று(19 மே) வெளிவந்திருப்பது வரிசையில் இறுதி. முதல் 20 நிமிடங்கள் நடக்கும் போரில் கடத்தப்பட்ட ஜனாதிபதியை ஆனகினும், அவனது குருவான 'கெனோபி'யும் மீட்கின்றனர். நாடு திரும்பும் ஆனகின் தான் தந்தையாகப் போவதை அறிகிறான. அந் நிலையில் அவன் காணும் கனவில் அவன் காதலி பிள்ளைப் பேற்றின்போது உயிர் துறப்பதை அறிகிறான். ஏற்கெனவே, அவனது அன்னை விஷயத்தில் அவன் கண்ட கனவு நடந்ததால் இது அவனுக்கு மிக்க அச்சத்தைக் கொடுக்கிறது. எப்படியாவது தன் காதலியைக் காப்பாற்றத் துடிப்பதை ஜனாதிபதி உபயோகப் படுத்திக் கொள்கிறார். அவனது குருவோ அவனைக் காப்பாற்ற முயல்கிறார். முடிவு தெரிந்த ஒன்றுதான் என்றாலும், வெள்ளித் திரையில் காண்க.
ஆரம்பத்திலிருந்து இறுதி வரை, மூச்சை நிறுத்துமளவிற்கு பிரம்மாண்டம். போர்க் கப்பல்கள் ஆகட்டும், நகரங்கள் ஆகட்டும், எடுத்துக் கொண்டப் பாத்திரங்கள் ஆகட்டும், இணை சொல்ல முடியாத அளவில் இப் படத்தைச் செதுக்கியிருக்கிறார்கள். ஆனால் இள "டார்த் வேதர்" ஆக நடித்திருக்கும் ஹேய்டன் கிரிஸ்டன்சென் ஏமாற்றம் அளிக்கிறார். சரியான தேர்வு இல்லை. இதையெல்லாம் கண்டுக்காதீங்க என படத்தின் கதையமைப்பும், காட்சிகளும் நம்மை உட்கார வைத்து விடுகின்றன.
தவற விடக்கூடாத படம்.
Thursday, March 24, 2005
கருணைக் கொலை
டெரியின் நிலைக்குக் காரணம், 15 வருடங்களுக்கு முன் அவருக்கு பொட்டாசியம் குறைவாக இருப்பதாகத் தவறாகக் கணிக்கப்பட்டு, சிகிச்சையின் விளைவாக மாரடைப்பு நிகழ்ந்து, மூளையைப் பாதித்தது. அன்றிலிருந்து அவருக்கு எல்லாமே குழாய்கள் வழியேதான் - உணவு, தண்ணீர் அனைத்தும். பல சிகிச்சைகள் புரிந்தும் பலன் இல்லை.
டெரியின் கணவர் மைக், இதைக் காட்டிலும், 'கருணைக் கொலை'க்குத் தான் தயாராக இருப்பதாகவும், அதை தன் மனைவியும் ஒப்புக்கொள்வார் என அறிவித்து, அதை நீதிமன்றங்களிலும் தாக்கல் செய்தார். அவர் அமர்த்திய மருத்துவர்களும், மற்றும் டெரியை சோதித்த மற்ற மருத்துவர்களும் அதையே வழிமொழிகின்றனர். நீதிமன்றமும் குழாய்களை அகற்ற சம்மதித்து உத்தரவிட்டது.
ஆனால், டெரி வழி உறவினர்கள்(தாய், தந்தை மற்றும் பலர்) ஓப்புக் கொள்ள மறுத்து மேல் முறையீடு செய்ய, நீதிமன்றம், அவர்களின் முறையீட்டை மறுத்துவிட்டது.
மார்ச்- 18 ம் தினம் குழாய்கள் அகற்றப்பட்டு, டெரி தற்சமயம் எந்த உணவுப் பொருளும் இன்றி, அவரின் உயிர் சிறிது சிறிதாக வெளியேறிக் கொண்டிருக்கிறது.
அமெரிக்காவை இந் நிகழ்வு இரண்டாகப் பிரித்திருக்கிறது. Persistent vegetative state அடைந்தவர் இவ்வாறு துண்பப்படுவதை விட அவரை உயிர் துறக்க வைக்கலாம் என ஒரு அணியும் மற்ற அணி, இது கொலைக்கு ஈடானது எனவும் வாதாடுகின்றன.
டெரியின் பெற்றோர் எடுத்த படங்களில், டெரி கண்களை சுழற்றிப் பார்ப்பது, புன்னகை செய்வதும் தெரிகின்றன. அதை வைத்து, அவர்கள் அமர்த்திய மருத்துவர்கள், தகுந்த சிகிச்சையில் பிழைக்க வாய்ப்பு இருப்பதாகக் கருதுகிறனர். ஆனால் மற்ற மருத்துவர்களோ, இந்நிலையில் இருப்பவர்கள் தான் என்ன செய்கிறோம் என்பதையே அறியாதவர்களாக இருப்பார்கள், மேலும், அந்த படப்பிடிப்பில், மொத்தம் மூன்று மணி நேரத்தில் டெரியின் செயல்கள் சில விநாடிகளே என பதில் வாதம் புரிகின்றனர்.
அவர்கள் கருத்துப் படி, டெரிக்கு தற்சமயம் உணர்வு என்ற நிலையே இல்லை. அவருக்கு, வலி, கிலி, மகிழ்ச்சி, சோகம், தொடு உணர்வு அனைத்தும் அகன்றுவிட்டன. உணவு செலுத்தவில்லையென்றால், நாம் உணர்வது போல் பசியோ, தாகமோ எடுத்தாலும், அவரால் அதை உணர்வு பூர்வமாக அறிய இயலாது. அவரின் உடல், இதனால், நீரிழந்து, அவரின் சிறுநீரகங்கள் செயல் இழந்து சிறிது சிறிதாக உயிர் இழப்பார்-ஆனால் வலி என்ற உணர்வின்றி- என மருத்துவர்கள் கருதுகின்றனர்.
ஃப்ளோரிடா மாகாண ஆளுநர் ஜெப் புஷ் குழாய்களை அகற்றுவது தவறு என சட்டம் இயற்ற, நீதி மன்றமோ அச் சட்டம் செல்லாது என தடை செய்துவிட்டது. டெரியின் பெற்றோரும், தற்சமயம் அரசாங்கத்தையே நம்பி இருக்கின்றனர்.
அமெரிக்காவில் உயிலில் ஒருவர், இம் மாதிரி தனக்கு நிகழ்ந்தால் மற்றவர் என்ன செய்யலாம் என எழுதி வைக்கலாம். டெரி அவ்வாறு எழுதவில்லை. அவரின் கணவர் மைக் அவரின் காப்பாளர்(Guardian) நிலையில் இருப்பதால் நீதிமன்றம் அவரின் முடிவை ஆதரிக்கிறது. இவ்வழக்கின் விளைவால், பல அமெரிக்கர்கள் உயில் எழுத ஆரம்பித்து விட்டனர்.
அமெரிக்க அதிபர், டெரியின் வாழ்வை நீட்டிப்பதை ஆதரித்திருக்கிறார். ஆனால் நீதிமன்ற முடிவைப் பற்றி எதுவும் கூறவில்லை.
டெரிக்கும், அவரின் குடும்பத்தாருக்கும் நம் பிரார்த்தனைகள்.
வலைப்பதிவுகள்:
http://civilliberty.about.com/cs/humaneuthinasia/a/bgTerry.htm
http://abcnews.go.com/Health/Schiavo/story?id=531907&page=1
http://www.cnn.com/2005/LAW/03/18/schiavo.brain-damaged/
Thursday, February 10, 2005
மனத்துக்கண்?
பா. ராகவன் நான் மதிக்கும் எழுத்தாளர். பல எண்ணங்களை ஆணித்தரமாக எடுத்து வைக்கும் முறை என்னைக் கவர்ந்தது. அதனால்தான் அவரின் இச்செய்கை என்னைக் குழப்புகிறது. அதைவிட வருத்தம் தந்தது, அவரின் மறுமொழி: 'எல்லா தமிழ் பதிப்பகங்களும் செய்கின்றன'(!?&^). இதை அவர் சொல்லியிருக்கும் பட்சத்தில், பொறுப்பான எழுத்தாளரின் பொறுப்பற்ற பதில். கருணாநிதி பாணி. உங்கள் ஆட்சியில் லஞ்ச ஊழல் தாண்டவமாடுகிறதே என கேள்வி எழுப்பினால், எம்.ஜி.யார் ஆட்சி என்ன வாழ்ந்தது, கேரளாவைப் பார் என உளறி, பேச்சைத் திசைதிருப்புவதற்கும், பாராவின் பதிலுக்கும் ஒன்றும் வித்தியாசம் இல்லை. ஆனால், கருணாநிதி சொன்னால் உளறல், பாரா பேசினால் வருத்தமே.
பத்ரியின் பொறுப்பான பதில் ஆறுதல்.