Sunday, February 28, 2010

உலோகம் - FIR

படித்து முடித்ததும் தோன்றியவை:

- துப்பறியும் வகையா, தமிழகத்துக்கு வரும் ஈழத் தமிழர்கள் வாழ்க்கை குறித்த வகையா என்றெல்லாம் ஒரு கூண்டில் மாட்டாமல் கதை செல்கிறது.
- 'ரா'-வின் பிடி பற்றி (புதினத்தில்) முதன் முதலாகப் படிக்கிறேன் (வேறு நூல்கள் இருந்தால் தகவல் ப்ளீஸ்).
- இந்திய உளவு இயக்க செயல்பாடுகள் பற்றி புதினத்தில் படிப்பதால் பல நிகழ்ச்சிகள் abstract-ஆக இருக்கின்றன. உ.தா. அதிகாரி வீரராகவன் கொல்லப்படுவது.
- பாத்திரங்கள் ஜெமோ-வின் முத்திரைகளுடன். அடி மனதின் கசடுகளை மிகத்திறமையாக விளக்குவதில் ஜெமோ திறமைசாலி.
- கதாநாயகன் செயல்கள் ஒருவித ஜேம்ஸ் பாண்ட பாணியில் விளக்கப்படுவதால் உணர்வுகள் அன்னியமாகின்றன.
- ஜோர்ஜ் பாத்திரம் அனுதாபத்திற்கு கொல்லப்படுவது வேஸ்ட். கதாநாயகன் (அல்லது அவனின் ஆட்கள்) சிறீ-யின் ஆளைப் போட்டுத்தள்ளி சிறீ-யை நெருங்கியிருக்க முடியும்.

இந்த நாவல் எவ்வளவு தூரம் பேசப்படும்? ஜெமோ எழுதியதாலேயே நிராகரிக்கப்படும் அபாயம் உண்டு (ஜெமோ-வா? படிக்கவே வேண்டாம். அவர் ஹிந்துத்துவ/'ரா' ஆளுங்க.).

'பெயரிலி' நாவல் ஆரம்பித்த போதே நிராகரித்து விட்டார். தமிழக அரசியல் உலகில் பேசும் தகுதி உள்ள ஒரு ஜீவன் இனிமேல் தான் அடையாளம் காணப் படவேண்டும். ஈழத் தமிழ் உலகில் சிலரிடமிருந்து (குறிப்பாக ஷோபா சக்தியிடமிருந்து) எதிர்பார்க்கிறேன்.

முடிவாக: ஷோபா சக்தியின் 'கொரில்லா', 'தேசத் துரோகி' மற்றும் 'ம்' கதைகள் அளவு உலுக்கவில்லை என்றாலும் இந்திய நாடு வந்த ஒரு மனித யந்திரத்தின் செயல்பாடுகளை விவரித்த அளவில் இந்த நாவலுக்கு ஓர் இடம் உண்டு.

விரிவாக, நேரம் இருந்தால்...

Thursday, February 04, 2010

Wolf Dreams

தஹர் பென் ஜெலோன்-ஐ அமேசானில் தேடும் போது யஸ்மினா காத்ரா கிடைத்தார். அரபிய இலக்கியங்களைப் படிக்க ஆரம்பிக்க இவரின் கதை களங்கள் சரியாக இருக்கும் என்று நினைத்தது சரியாகவே அமைந்தது. இவர் எழுதிய கால வரிசைப்படி Wolf Dreams நூலகத்திலிருந்து படிக்க ஆரம்பித்தேன்.


புதினங்கள் படிப்பதை சிறிது காலமாகவே நிறுத்தி வைத்திருந்தேன். அ-புதினங்கள் படிக்க வேண்டியவை அதிகமாகவும், கற்பனை கதாபத்திரங்களின் சோக/ஆனந்த/வருத்தம் போன்ற உணர்ச்சிகள் ரமணி சந்திரன் வாசகர்களுக்கு தாரை வார்த்து விட்டதாலும் புதினங்கள் கவரவில்லை. ஆனால் அரபு இலக்கியங்கள் பற்றி சாரு (ஆம்.. சிரிக்காதீர்கள்) எழுதியதைப் படித்த பின் கொஞ்சம் தேடியதில் 20-25 புத்தகங்கள் தேறியிருக்கின்றன. இதில் எச்சரிக்கையாக மேற்குலக எழுத்தாளர்களின் மத்திய கிழக்கு புதினங்களை விலக்கிவிட்டேன். அரபு நாடுகளிலேயே வாழ்ந்து அல்லது இப்போது அரபு எழுத்தாளர்கள் மற்ற நாடுகளில் அடைக்கலம் புகுந்து வாழ்பவர்களின் எழுத்துக்கள் மட்டுமே படிப்பதாக உத்தேசம்.

Wolf Dreams பேசுவது ஒரு சாதாரண குடிமகன் எப்படி தீவிரவாதியாகிறான் என்பது பற்றி. வாலித் ஒரு அமெச்சூர் நடிகன். அழகன். அவன் கனவில் அல்ஜீரியாவின் சிறந்த நடிகனாக கேன்ஸ் திரைப்பட விழாவில் பரிசு வாங்கப் போவதாகக் கனவு கண்டு, ஆனால் அந் நாட்டின் மிகப் பெரும் பணக்காரர் ஒருவரின் வீட்டில் கார் ஓட்டுனராக வேலைக்கு அமர்கிறான்.

வேலையில் சேர்ந்தவுடன் அவனுக்கு நல்ல சட்டைகள், சூட்கள் கிடைத்தாலும் நாயைப் போல எசமானர்கள் செல்லும் இடங்களில் காத்து நிற்கும் வேலை. எசமானரின் மகன், மகள் அனைவரும் இவனை ஒரு சாதாரண மனிதனுக்குக் கிடைக்கவேண்டிய மரியாதையைக் கூட கொடுப்பதில்லை. மகன் ஊரில் உள்ள விலைமாதர்களை அழைத்து வரும் வேலையைக் கொடுக்க, மகளோ தன் வருங்கால கணவன் இன்னொரு பெண்ணைப் பார்த்து இளித்ததற்கு தண்டனையாக இவனோடு உடலுறவு கொள்கிறாள். எசமானின் அந்தரங்க வேலைக்காரன் ஹமித் செய்யும் ஒரு குரூரமான செயலால் வாலித் அந்த வேலையை விட்டு ஒடி விடுகிறான்.

வாலித்-ன் துரதிஷ்டம் அவனின் எந்த ஒரு முயற்சியையும் பாதியில் முறிக்கிறது. அவன் விரும்பும் பெண் மத வெறி அண்ணனால் கொலை செய்யப்படுகிறாள். அவனின் சேமிப்பை ஒருவன் திருடுகிறான். இதற்கிடையில் அல்ஜீரியாவில் மத அடிப்படைவாதம் தீவிரமடைகிறது. வாலித் தன் நினைவின்றி பங்கேற்கும் ஒரு கலவரத்தால் போலீசிடம் சிக்குகிறான். அதுவே அவனை தீவிரவாதம் நோக்கி தள்ளுகிறது. முதல் கொலையை மதத்தின் பெயரால் செய்கிறான்.

பின் கொலைகள் செய்வது சுலபமாகி விடுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக ஒரு கூட்டத்துக்கே தலைவன் ஆகி, தன் தலைவன் இறந்தவுடன் அவரின் மனைவியை மணந்து, ஒரு முழு கிராமத்தையே( பெண்கள், குழந்தைகளையும்) கொல்லும் வரை அவனின் தீவிரவாதம் வளர்கிறது.

யஸ்மினாவின் கதை சொல்லல் எந்த மழுப்பலும் இல்லாமல் வாலித்-ன் கதையை ஒரே சீராக செலுத்துகிறது. இடையிடையே அல்ஜீரியாவின் வரலாறு கதையின் ஊடாக வருவதால் குழப்பமில்லை. அந் நாட்டின் வறுமை, மத தீவிரவாதிகளின் அணுகுமுறை, மக்களும், அரசும் தொடர்பில்லாமல் இருத்தல் போன்றவை நேரடியாக சுட்டப்படுகின்றன.

முதல் இரண்டு பாகங்கள் வாலித்-ன் மனப் போராட்டத்தை விரிவாக பதிவு செய்கிறது. மூன்றாம் பாகம் அவன் அதை சுத்தமாக துடைத்துப் போட்டு கூலிப் படைத்தலைவனாக மாற்றுகிறது. கதை இசுலாமிய தீவிரவாதத்தை விவரித்தாலும் வாலித் மதத்தை தான் செய்யும் கொலைகளுக்கு உபயோகிப்பதில்லை.

யஸ்மினா-வின் கதை சொல்லல் தெளிவாக இருந்தாலும் அல்ஜீரிய அரசியல் நிகழ்வுகள் சொல்லும் விதம் ஒரு கட்டத்திற்கு மேல் அலுப்பாகி விடுகிறது. ஆரம்பத்தில் அக்குறிப்புகள் உபயோகமாக இருந்தாலும் போகப் போக 'செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணசுவாமி' பாணியில் விளக்கப் படுகின்றன. தேர்ந்த கதை சொல்லி இதை பாத்திரங்கள் வாயிலாக வெளிப் படுத்தியிருப்பார்.

கதையில் மிகவும் சலனப்படுத்திய இடங்கள் வாலித் பங்கு கொள்ளும் இரு கொலைகள். ஒன்று அவனின் முதல், இரண்டாவது அவனுக்கு தெரிந்தவன். இறப்பவன் தான் இறப்பது தன் குழந்தைகள் முன்னால் என்பதைவிட வாலித் இதை நிகழ்த்துகிறான் என்பதுதான் அவனுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. அவன் கதறுவது:

"I don't believe it, not you Nafa..You're an artist...an artist"

தீவிரவாதியானதை விட வாலித் தன் வாழ்க்கையில் அடையும் தோல்வி இங்குதான்.

Monday, December 28, 2009

வாங்க வேண்டிய புத்தகங்கள்

இலங்கை இறுதி யுத்தம் - நிதின் கோகலே (கிழக்கு)
திருநங்கைகள் உலகம் - கிழக்கு
ராஜீவ் கொலை வசக்கு - கிழக்கு
திமுக உருவானது ஏன் - கிழக்கு
சென்னை மறு கண்டுபிடிப்பு - கிழக்கு
சீனா மறு கண்டுபிடிப்பு - கிழக்கு
பிரபாகரன்-வாழ்வும் மரணமும் - கிழக்கு
கோபுலு-கோடுகளால் ஒரு வாழ்க்கை - கிழக்கு
கடல்புரத்தில் - கிழக்கு
இருளர்கள் - ஒரு அறிமுகம் - கிழக்கு
நாவல் - ஜெயமோகன் - கிழக்கு
இந்திரா பார்த்தாசாரதி கதைகள் - கிழக்கு
மீண்டும் ஜீனோ - சுஜாதா - கிழக்கு
இந்து ந்ஜான மரபில் ஆறு தரிசனங்கள் - ஜெயமோகன் - கிழக்கு


யாமம் - எஸ். ரா - உயிர்மை
சிலுவையின் பெயரால் - ஜெமோ - உயிர்மை
தனிமையின் இசை - ஷாஜி - உயிர்மை
நாயக்கர் காலம் - ராமசாமி - உயிர்மை
குடுகுடுப்பைகாரர் வாழ்வியல் - ந. முருகேச பாண்டியன் - உயிர்மை
\ ஆதிகேசவப் பெருமாள் கோயில் வரலாறு - ஆ. கா. பெருமாள் - தமிழினி
இன்றைய காந்தி - ஜெயமோகன் - தமிழினி
கு.ப.ரா கதைகள் (முழு தொகுப்பு) - அடையாளம்
பாட்டும், தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச்சமூக உருவாக்கமும் - ராஜ் கௌதமன் - தமிழினி
ஆகோள் பூசலும் பெருங் கற்கால நாகரிகமும் - ராஜ் கௌதமன் - தமிழினி
ஆரம்பக்கட்ட முதலாளியமும் தமிழ்ச்சமூக உருவாக்கமும் - ராஜ் கௌதமன் - தமிழினி
கந்தர்வன் கதைகள் - வம்சி பதிப்பகம்
அர்ச்சுனன் தபசு - பாலுசாமி - காலச்சுவடு


மேலும் பல புத்தகங்கள் சேரலாம். காலச்சுவடு வெளியீடுகள் இன்னும் தெரியவில்லை. சாருவின் ஓரிரண்டு புத்தகங்கள் பட்டியலில் சேரும் என்று நினைக்கிறேன்.

Monday, December 14, 2009

உதவி

அந்தப் பெண் அப்போதுதான் நினைவு இழந்திருக்க வேண்டும்.


அலுவலகத்தை விட்டு வரும் வழியில் பாலத்தைக் கடக்கையில் அவள் நடைப்பாதையில் விழுந்துக் கிடக்க அவளோடு வந்த நாய் அவள் முகத்தை முகர்ந்துக் கொண்டிருந்தது. நான் காரை நிறுத்தி விட்டு சாலையைக் கடக்கும் போது ஒரு இளைஞனும், ஒரு யுவதியும் அவளை எழுப்பிக் கொண்டிருந்தனர்.


நான் 911 கூப்பிட செல் பேசியை எடுக்கும்போதே இன்னொருவர் அதே எண்ணைக் கூப்பிட்டுக் கொண்டிருந்தார். அருகில் சென்றுப் பார்த்தபோது, மயக்கம் தெளிந்து அந்தப் பெண் சோர்வாக அமர்ந்திருந்தாள். பெயர் Amy என்றாள். முகவரி விசாரித்தபோது நினைவில் இல்லை என்றாள்.


காவலதிகாரி முதலில் எளிமையாகக் கேள்விகள் கேட்டுக் (பெயர், இன்றைய கிழமை) கொண்டிருக்கும்போதே ஆம்புலன்ஸ் வந்துவிட, மருத்துவர் அவளின் ஓட்டுநர் லைசன்ஸைப் பார்த்து அவள் வேறொரு மாகாணத்திலிருந்து வந்திருப்பதை அறிந்தார். உள்ளூர் முகவரி தெரியவில்லை. அவளின் செல்பேசியிலும் ஆபத்துக்குக் கூப்பிட வேண்டிய எண் சிக்கவில்லை.


என்னோடு இருந்த இளைஞன் நாயின் கழுத்துப் பட்டியில் இருந்து முகவரி கண்டுப்பிடிக்க முயல, அது அவனிடமிருந்து நழுவியது. விடாமல் அதை நோண்ட, நாய் பொறுமை இழந்து 'வள்' என்றது. அவள் அதைத் தடவிக் கொடுத்தாள்.


நான் நாயை அருகில் இழுத்து அதைக் கொஞ்சிக் கொண்டே கழுத்துப் பட்டியில் இருந்து அது வழக்கமாக செல்லும் மருத்துவமனை முகவரியும், தொலப் பேசி எண்ணும் படிக்க காவலர் அதைக் குறித்துக் கொண்டார். பின் மருத்துவர்கள் அவளை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்ல முடிவு செய்து அவளை ஆம்புலஸில் ஏற்றினர்.


இப்போது நாயை யார் பார்த்துக் கொள்வது என்பதில் சிக்கல் ஏற்பட்டது(மருத்துவர்களுக்கும், காவலருக்கும்). ஒரு மருத்துவர் Man's best friend, அதனால் உங்களோடு இருக்கட்டுமே என காவலரிடம் சிரித்துக் கொண்டே சொல்ல, அவர் இதை வைத்துக்கொண்டு நான் எப்படி ரோந்து செல்வேன் என்றார் - சிரிக்காமல்.


நானும் என்னோடு இருந்தவர்களும் அடுத்து என்ன செய்வது என நிற்க, மருத்துவர் எங்கள் பக்கம் திரும்பி 'நீங்கள் செல்லலாம்..நன்றி' என்றார்.


நான் நாயைப் பார்த்தேன். அது தன் எசமானி ஆம்புலன்ஸில் ஏறுவதை ஏக்கமாகப் பார்த்துக் கொண்டிருந்தது.


காரில் ஏறி வீடு வந்து சேர்ந்தேன்.

பி.கு.: கொஞ்ச நாட்கள் முன் நான் வசிக்கும் ஆர்லிங்டன் நகரில் நடந்த ஒரு சம்பவம் இது. நேரில் பார்த்ததை அசோகமித்திரன் பாணியில் எழுதிப் பார்க்க முயன்று பின் நம்பிக்கை இல்லாமல் கோப்புகளில் சேமித்து வைத்திருந்தேன். இன்று கொஞ்சம் தயக்கத்துடன்வெளியிடுகிறேன்.

Sunday, November 15, 2009

வார இறுதியில் - 5

So cute : மகள் டென்னிஸ் வகுப்பில் இன்று அவ்வளவு ஆர்வமாக பங்கு பெறவில்லை. வகுப்பு முடிய 5 நிமிடங்கள் இருக்கையில் 10-12 வயது பெண்ணும், அவள் அம்மாவும் என் மகள் விளையாடுவதைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர். அந்தப் பெண் வெளியில் நின்று கொண்டு இவள் பந்தை அடிக்க முயலும்போதெல்லாம் 'Come on, Come on' என்று ஆர்வத்துடன் கத்திக் கொண்டிருந்தாள் (அவள் சிறு வயதில் விளையாட ஆரம்பித்தது நினைவுக்கு வந்திருக்கலாம்).

என் மகள் அடித்த ஒரு ஷாட் மறு பக்கத்தில் விழ இந்தப் பெண்ணுக்கு ஏக மகிழ்ச்சி. ‘She did it!!' என்று இவள் தாயாரிடம் சொல்ல அவரும் ‘yeah...she is so tiny yet she hits well' என்று ஆமோதித்தார் (இத்தனையும் என் பக்கம் பார்க்காமலே). நான் திரும்பி சிரித்துக் கொண்டே ‘இதுதான் அவள் அடித்த உருப்படியான் ஷாட்’ என்றேன்.

அந்தப் பெண் என்னைப் பார்த்து ‘She still succeeded' என்றாள். மானசீகமாக அவளுக்கு ஒரு சல்யூட் வைத்தேன். எதிர்காலத்தில் இந்தப் பெண் சிறந்த பயிற்சியாளராவாள்.

Sachin Tendulkar: 20 வருடங்கள் கிரிக்கெட்டில் செய்யாத சாதனைகள் இல்லை. அதைப் பற்றி விரிவாக...வேண்டாம்....வார்த்தைகள் அவரின் சாதனைகளின் மதிப்பைக் குறைத்து விடும். Thank you Sachin.

இலங்கை : இலங்கைக்கு பிரணாப் சென்றது தொடர்பாக டிவிட்டரில் ‘oruppakkam' மற்றும் 'kaanaprabha' இருவரின் கருத்து வேற்றுமையைப் படிக்க நேர்ந்த்து. ஒன்று புரிந்து கொண்டேன். உணர்ச்சி வயப்ப்டாமல் இவ்வகை கலந்துரையாடல்கள் நடப்பதில்லை.

சாரு: சாருவின் சமீபத்திய அலம்பல்கள் தாங்க முடியவில்லை (அவரின் நித்யானந்தர் கட்டுரைகளை சோகமாக இருக்கும் போது வாசித்து வெளியே வரும்போது வயிற்றைப் பிடித்துக் கொண்டு வருவேன், அவ்வள்வு காமெடி). இப்பொது அவரின் ஒரு நாடகத்தில் நடந்த கலாட்டாவை விரிவாக (?!) பதிவு செய்ய ஆரம்பித்திருக்கிறார். இதில் என்ன புதிதாக இருக்கிறது? 2002-ல் இருந்து இவரின் எழுத்துக்களைப் படிக்கிறேன். இரண்டு மாதத்திற்கு ஒரு முறை இந்த கலாட்டாவைப் பற்றி ஏதாவது சொல்லுவார். கேவலம் கிராம விழாக்களில் போடும் ரெக்கார்ட் டான்ஸ் நிகழ்ச்சியில் கூட இந்த கலாட்டாக்கள் நடக்கும். இவர் என்னவோ மொத்த தமிழகத்திற்க்கும் கலாச்சாரம் கற்றுக் கொடுக்க வந்து இவரை மற்றவர்கள் கொலை செய்ய முயன்றார் போன்ற பில்டப். நினைப்புதான்...

காமெடி: வீட்டில்/அலுவலகத்தில் பல தலைவலிகள் இருக்க சிவத்தமிழோன் என்பவரும் சுகுணா திவாகரும், திருக்குறள் சைவ நூலா இல்லை சமண நூலா என்று வாழ்க்கைக்குத் தேவையான வாதம் புரிந்தது. சாதி மத பேதங்களை ஒழிக்க வேண்டும் என்று கூக்குரலிட்டுக் கொண்டு அதைத் தீவிரமாக நினைவில் வைத்திருக்க வேண்டும் என்று பெரியார் சொல்லாததை அவரைப் பின்பற்றுவதாக சொல்பவர்கள் நினைவில் வைத்திருப்பது பெரியாரிசத்தின் மிகப் பெரிய (சோகமான) தோல்வி.

Sunday, September 20, 2009

வார இறுதியில் - 4

திரை: உன்னைப் போல் ஒருவன் - கமல் படம் என்றாலே கொஞசம் பயம்தான். வித்தியாசமாக எடுக்கிறேன் பேர்வழி என்று பல முயற்சிகளையும் ஒரே படத்தில் திணித்துத் தொலைப்பார். ஃப்ரேமுக்கு ஃப்ரேம் தன் ஆளுமை இருக்க வேண்டும் என்ற வலுக்கட்டாயம் வேறு. படத்துக்குப் படம் தேவையில்லாத ஒப்பனை என்ற பெயரில் திரைப்படத்தையே கேலிக்கூத்தாக்குவது.

உன்னைப் போல் ஒருவன் அறிவிக்கப்பட்டவுடனே எனக்குத் தோன்றிய முதல் எண்ணம் ‘ஐயோ’. நஸ்ருத்தீன் ஷா-வின் தீவிர ரசிகனுக்கு இதுதான் தோன்றும். ரஜினி (அதுவும் பீ வாசுவோடு) அறிவித்திருந்தால் யாருக்குமே துறவறத்தில் நம்பிக்கை வந்திருக்கும். கமல் என்பதால் முதல் பத்தி நினைவுக்கு வந்தது.

மோகன்லால் நடிக்கப் போகிறார் என்றதும் ‘ஐயோ!ஐயோ!’. கமலின் படங்களில் இதுவரை நாசர், நாகேஷ் தவிர்த்து எவரையும் கமல் dominate செய்ய விடமாட்டார் என்பதால் மோ. லா மேல் பரிதாபம்தான்.

இந்த மனநிலையோடு படம் பார்க்கப் போனால் வெளியே வரும்போது ஆச்சரியத்துடன் வந்தேன்.

முதலில் கதை. சாதாரண மனிதன் தீவிரவாதத்தைக் கண்டு கோபம் கொண்டால் என்னாகும் என்பது ஒரு வரி கதை. அவனும் தீவிரவாதத்தைக் கையில் எடுத்தால் ஒரு நகரத்தையே தன் கைக்குள் கொண்டு வந்து, பலமான காவல் துறையைத் தன் கட்டை விரலால ஆட்டுவிக்கலாம், தீவிரவாதிகளை நம்ப வைத்து கழுத்தறுக்கலாம் என்று நம்ப முடியாவிட்டாலும் கொஞசம் practical-ஆக யோசித்திருப்பது தமிழுக்கு புதுசு.

இரண்டாவது துணைக் கதாபாத்திரங்கள்: லஷ்மி முதல் ரஃபிக் என்ற நபர் வரை செய்த பாத்திரத் தேர்வு. மிகக் கச்சிதமாக அவரவர் தங்கள் வேலையை செய்து முடிக்கிறார்கள். படம் முழுக்க வரும் இரண்டு காவல் அதிகாரிகளைக் குறிப்பிடவேண்டும். சேது மற்றும் ஆரிஃப். சேது ஒரு சாதாரண மனிதன் குடும்பத்துக்கும், வேலைக்கும் இடையே ஊடாடுவதைக் கண் முன் நிறுத்துகிறார்.

ஆரிஃப் கொஞ்சம் Dirty Harry ஸ்டைலில் தடாலடி வேலைகளுக்கு உதவுகிறார். அதுவும் தன் இன்ஃபார்மரிடம் பரிவுடன் கலந்த கண்டிப்புடன் பேசும்போதும், அந்த இன்ஃபார்மரை ஆஸ்பத்திரிக்கு அனுப்ப தாடையை உடைக்கும் போதும் Character சரியாக் build ஆகிறது. ஆனால் என்ன காரணத்திற்காக எப்போதும் மின்சார கம்பியைத் தொட்டுக் கொண்டிருப்பவர் போல இருக்க வேண்டும் என்று புரியவில்லை. போதை ஆசாமியைப் புரட்டப் போகிறார் என்று நம்மை நினைக்கவைத்து குரல் கடுமையிலேயே அவனிடம் விஷயம் கறக்க வைக்கும் இடம் கதை + டைரக்‌ஷனின் சிறப்பு. இந்த நடிகருக்கு நல்ல இயக்குநர் அமைந்தால் அஜீத், விஜய் போன்ற முட்டாள் கோமாளிகளை ஒதுக்கி வலம் வருவார்.

மூன்றாவதாக: கமல், லால் மற்றும் லஷ்மி: கமல் நடிப்பை விட அவரின் உடல் மொழிதான் சட்டென்று மனதில் பதிந்தது. அறிமுகக் காட்சியில் தலை, கை, வால் என்று காட்டாமல் சாதாரணமாக அறிமுகம் ஆவதும், நன்றாகத் தேர்ந்த பொறியாளர் போல வெடிகுண்டு செய்யும் சாதனங்களைக் கையாள்வதும், ஒரு விதமான தளர்ந்த நடையுடன் ஒவ்வொரு பையையும் தூக்கிக்கொண்டு நடப்பதும், எல்லா வெடிகுண்டு பைகளையும் வைத்து விட்டு கீரை, தக்காளி என்று மனைவி கொடுத்த லிஸ்ட் படி வாங்குவதும் என்று இவரின் பாத்திரம் சரியாக செதுக்கப்படுகிறது.

அதோடு கமல் நிஜமாகவே கொஞ்சம் ஒதுங்கி மற்ற இருவரும் dominate செய்ய அனுமதித்திருக்கிறார். லாலும், லஷ்மி-யும் ஆரம்பத்திலிருந்தே அவர்களின் கோட்டுக்குள் இருந்து கொண்டே மற்றவரைக் கவிழ்க்கும் வேலையை செய்கிறார்கள். சிக்கலான வேலையை மற்றவர்களிடம் தள்ளிவிட்டு தான் பலி ஆடாகாமல் தப்புவது என லஷ்மி விளையாட, தனக்குக் கொடுக்கப்பட்ட அதிகாரத்தைத் தேவையான இடங்களில் சுட்டிக்காட்டி லஷ்மியை back-off செய்வது என லால் திருப்பித்தாக்கும் கட்டங்கள் மிக சுவாரசியம் (அவ்வப்போது கருணாநிதியின் தொலைப் பேசி அழைப்புடன்!).

நடப்பு அரசியலை இவ்வளவு துணிவாக (அதுவும் தமிழ்நாட்டில் இருக்கும் குறைவான சகிப்புத்தன்மையை நினைவில் கொண்டால்) எடுத்தாண்டது இதில்தான் முதலில் பார்க்கிறேன். சங்கரின் படங்கள் சமூகப் பிரச்சினைகளைப் பேசுகிறேன் என்று கேலிக் கூத்தாக்கும். லஷ்மியோடு மோகன்லால் மோதும் இடங்கள் பதவிகளில் உள்ள அரசியல் நீங்கள் கதிரியக்க மழையில் நனைந்தாலும் இருக்கும் என்பதைக் காட்டும். B+ தரமுள்ள ஹாலிவுட் படங்களில் இது போன்ற காலை வாரும் அரசியலைப் பார்க்கலாம். தமிழில் அதைத் திறமையாகக் கையாண்டிருக்கிறார்கள்.

கதையில் காட்டப்படும் இடங்கள் கதையின் இறுக்கத்துக்கு உதவுகின்றன. கமலின் control room வெட்டவெளி என்றால், மோகன் லாலின் Situation Room இறுக்கமாக அடைப்பட்ட இடம். இறுதிக்காட்சியில் காட்டப்படும் காலியாக பரந்துக் கிடக்கும் விமான நிலையம், சேதுவின் மனைவி பயணிக்கும் ரயிலில் அவர்களிக் இருக்கைகள் மட்டும் என்று காமிரா தேவையான் பகுதிகளை மட்டும் தன் ஃப்ரேமுக்குள் அடக்குகிறது.

இறுதியாக இசை: ஸ்ருதி ஹாசன் என்பதால் நம் மக்கள் ரொம்பவே எதிர்ப்பார்த்தார்கள் என்று தெரிகிறது. இது போன்ற படங்களுக்கு இசை என்பது மிகக் கொஞ்சமாக இருக்க வேண்டும். கதாபாத்திரங்கள் சரியாக அமைந்து விட்டால் அவர்களின் நடிப்பே தேவையான பதற்றத்தை வரவழைத்து விடும். இது இசை அமைப்பாளர் உணர வேண்டும். ஆனால் படத்தில் மித மிஞ்சிய இசை. காட்சியின் பதற்றத்தை அதிகரிக்கிறேன் பேர்வழி என்று பாஷன் ஷோவில் வரும் இசையைப் போன்று போட்டுத்தாக்கியிருக்கிறார் (இதில் அதிகாரிகள் Bullet Proof vest அணியும்போது Michael Jackson-ன் Billy Jean ட்யூனில் இசை வேறு). இவருக்கு நான் சொல்லுவது, உதிரிப் பூக்கள் படத்தில் இளையராஜாவின் பிண்ணனி இசை (அதுவும் விஜயன் தன் மச்சினியைப் பார்க்கும் போது வரும் இசை). Better luck next time.

படம் என்று எடுத்துக் கொண்டால் கமலுக்கும், தமிழுக்கும் ஒரு நல்ல படம் என்பது மறுக்க முடியாது.



Sunday, September 13, 2009

வார இறுதியில் - 3

அரசியல், விளையாட்டு: இரண்டிலும் பணம் புரள்வதால் நாகரிகததுக்கு இடமில்லை என்று ஜோ வில்சனும், செரினா வில்லியம்ஸும் நிரூபித்துள்ளனர். ஜோ வில்சன் தென்கரோலினா மாகானத்தைச் சேர்ந்தவர். ஒபாமாவின் health care பேச்சின்போது, You liar என்று கத்தினார். ஒபாமா கொஞ்சம் கூட சலனமேயில்லாமல் அதை மிக நாகரீகமாக மறுத்துவிட்டு தன் பேச்சைத்் தொடர, இப்போது ஜோ அவரின் கட்சிக்காரர்களாலேயே கண்டிக்கப் பட்டிருக்கிறார்.

இத்தனைக்கும் ஜோ இராணுவத்தில் பணி புரிந்தவர். இராணுவத்தினருக்கு ஜனாதிபதி Commander-in-Chief. அந்தப் பதவிக்குரியவரையே எதிர்த்து முட்டாள்தனமாகக் கத்தியிருக்கிறார். புஷ் இராக் போரைப் பற்றி பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது கத்த வேண்டிய வார்த்தையை இப்போது கத்தி குடியரசு உறுப்பினர் தான் புஷ்-க்கு சளைத்த முட்டாள் இல்லை என்று நிரூபித்திருக்கிறார்.

விளையாட்டில் ஜோ-க்கு சளைக்காமல் செரினா நடந்த விதம் இன்னும் பைத்தியக்காரத்தனம். தேவையில்லாமல் Line Judge-ஐ திட்டி ஆட்டமும் இழந்து (இல்லையென்றாலும் கிம் எளிதாக வென்றிருப்பார்), $10000 டாலரும் இழப்பு.

இவர்கள் இருவரும் கற்க வேண்டிய முதல் பாடம் சபை நாகரிகம்.

நாட்டு நடப்பு: இந்த வார Outlook-ல் வந்த இரண்டு செய்திகள்:

1) வக்ஃப் வாரியத்தின் ஊழல்

வக்ஃப் வாரியத்திற்கு சொந்தமான நிலங்கள் ஏராளம். பல முகலாய, நிஜாம் மன்னர்களால் மானியங்களாக வழங்கப்பட்ட நிலங்களை நிர்வாகம் செய்கிறது. இதில் வரும் வருமானம் இஸ்லாமிய சமுதாயத்திற்கு பயன்படும் வகையில் அமையவேண்டும். பொதுவாக மாநில அரசுகள் தங்கள் கட்சியில் உள்ள இஸ்லாமிய உறுப்பினர்களை நியமனம் செய்யும். இதுவே ஊழல்களுக்கு வழி வகுக்கிறது. உதாரனமாக அனில் அம்பானி கட்டும் புது கட்டிடம் ஒன்றின் மதிப்பு 27 கோடி. ஆனால் விற்கப்பட்டதோ 16 லட்சத்திற்கு. அனில் 27 கோடி கொடுக்கவில்லையென்றாலும் கொடுத்த வரையில் 16 லட்சம் தவிர மீதி வாரிய தலைவர்/உறுப்பினர் பையில். அரசு தலையிட பயப்படுகிறது. தலையிட்டால் ‘இஸ்லாமிய மதத்திற்கு அபாயம்’ என்று கூக்குரல்.

2) குஜராத் போலீசின் (மோடியின் அடியாட்கள் என்று வாசிக்க) 2004 என்கவுண்டர் போலி என்று கண்டுப்பிடிப்பு.

2004-ல் மோடியைக் கொலை செய்யும் உத்தேசத்துடன் இருந்தவர்கள் என்று நான்கு பேரை (ஒரு பெண் உட்பட) குஜராத் போலீஸ் பம்பாய் அருகே சுட்டுக் கொன்றது. ஆனால் 5 வருடங்கள் பிறகு, நீதிபதி தமங் அளித்த தீர்ப்பில் இது போலி என்கவுண்டர் என்று அறிவித்துள்ளார். ஆனால் மோடி அரசு பாய்ந்து இன்னொரு நீதிபதி மூலம் இந்த அறிக்கைக்குத் தடை வாங்கியுள்ளது.

Only in India.


Monday, September 07, 2009

வார இறுதியில் - 2

Labor Day விடுமுறை என்பதால் திங்கட்கிழமை அன்று பதிகிறேன்.

அரசியல்: ராஜசேகர ரெட்டி இறப்பு யாருக்கு நஷ்டமோ இல்லையோ ஊடகங்களுக்கும், வேலையில்லாத உதவாக்கரைகளுக்கு இலாபம். ஒரு மாநில முதல்வர் மறைவுக்கு இந்தியா முழுவதும் துக்கம் (கட்டாயமாக) அனுஷ்ட்டிக்க வைக்கும் வியாதி இந்தியாவில் மட்டுமே உண்டு.

தொலைகாட்சியில் (வரவழைத்துக் கொண்ட கண்ணீருடன்)அழுது கொண்டே பேட்டிக் கொடுத்தவர்களையும், அவர்களை விடக் கேவலமாக தற்கொலை செய்து கொண்ட கோமாளிகளைப் பற்றியும் படித்துக் கொஞ்ச நேரம் பிரமித்திருந்தேன்.

அழுமூஞ்சிகளை விட்டு விடலாம். அரசியல் பொறுக்கிகளுக்கு அழுகை சகஜம். தற்கொலை செய்தவர்களின் மனநிலையைப் பார்ப்போம். எது இவர்களைத் தூண்டுகிறது? தாழ்வு மனப்பான்மை? ஒரு வேலைக்கும் உதவாமல் இருப்பது? படிப்பறிவின்மை? தன்னம்பிக்கை இல்லாமல் எவனோ ஒருவனைத் தலைவனாக நினைப்பது? எப்போதாவது ராஜசேகர் ரெட்டியைப் பார்த்திருக்கிறார்களா? அவரின் எந்த செயல் இவர்களைத் தூண்டியது? அவர்களுக்குத் தெரியுமா ஒரு அரசியல்வாதி செய்யும் வேலையில் 10-20% மட்டுமே மக்களை சென்றடைகிறது, மீதம் அவன் பையையும், அவனின் அல்லக்கைகளையும் சென்றடைகிறது என்று?

எது இந்தக் கோமாளிகளைத் தற்கொலை செய்யத் தூண்டியது?


அமெரிக்காவும் எட்வர்ட் கென்னடி-யின் மறைவை நினைவு கூர்ந்தது, அவர் கென்னடி என்பதால். அந்த வகையில் இந்திய சாயல் இருந்தது. என்றாலும் அவரவர் வேலையைப் பார்த்தார்கள். இதற்கெல்லாம் விடுமுறை கேட்டால் சுளுக்கு விழும். மாசசூசெட்ஸ் மாநிலத்தில் மட்டும் (எனக்குத் தெரிந்த வரையில்) சில இடங்களில் From MA people, Thanks Ted என்று மின்னனுப் பலகைகள் வைத்தார்கள்.

புத்தகம்: ஒரு வழியாக நேற்று இரவு விழித்து ‘The Brothers Karamazov' முடித்தேன். கதை இறுதி வக்கீல்கள் வாதங்கள் கொஞ்சம் சோர்வடைய செய்தாலும் மிக அற்புதமான classic. ஒவ்வொரு அத்தியாயத்திலும் கதாபாத்திரங்கள் கொள்ளும் மாறுபாடுகள் ஆராய்ச்சிக்குத் தகுந்தவை. ரஷ்ய இலக்கியங்கள் படிக்க ஆரம்பிக்க தஸ்தாவ்யேஸ்கியின் இந்தப் புத்தகம் சிறந்த நுழைவாயில். தமிழ் இலக்கிய வாதிகள் இந்தப் புத்தகத்தைப் பற்றி அவர்களின் சிக்கலான தமிழில் சிலாகித்து ‘இதையெல்லாம் படிக்கனும்னா உனக்கு இரண்டு கொம்புகள் வேண்டும்’ என்று சொல்வார்கள். அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் உள்ளே நுழையுங்கள்.

அடுத்த புத்தகம் படிக்க எடுத்திருப்பது ‘Patrick French' எழுதிய ‘Liberty or Death'. சமீபத்தில் ஜஸ்வந்த் சிங் ஜின்னாவைப் பற்றி எழுதி பிஜேபி-க்கு சாமி வரவழைத்ததைப் போன்று 1997 Patrick ஒரு புயலைக் கிளப்பினார். காந்தியின் அரசியலை/புனித பிம்பத்தைக் கேள்விக்குள்ளாக்கினார். ஜின்னாவைப் பற்றிய இந்தியப் பார்வை தவறு என்று நிரூபிக்க முயன்றார். ஆனால் இப்போதைய புயல் போன்று 1997-ல் கிளம்பாததற்க்குக் காரணம் Patrick அயல் தேசத்தவர், அதுவும் பிரிட்டனைச் சேர்ந்தவர் என்பது ஒரு காரணமாக இருக்கலாம். இந்தப் புத்தகத்தைப் பற்றி Krishan Kalra என்பவர் '’Liberty or Death’ should be included in the category of yellow journalism and be banned in India' என்கிறார். அப்படியானால் கண்டிப்பாகப் படித்தே ஆகவேண்டும் என்று நூலகத்திலிருந்து எடுத்து வந்து விட்டேன். முதல் 10 பக்கங்கள் படித்த வரையில் ஓகே.

படித்து முடித்தபின் Rajmohan Gandhi எழுதிய Mohandoss-ம் குஹா எழுதிய India After Gandhi-ம் படிப்பதாக பிளான்.

Sunday, August 30, 2009

வார இறுதியில் - 1

ரொம்ப நாட்களுக்குப் பிறகு இன்று எழுத வேண்டும் போல் இருந்தது...

வேலைப் பளு அதிகம் இருந்தாலும் அரை மணி நேரமாவது ஏதாவது படிக்க முடிந்தது. ‘கரமசோவ் சகோதரர்கள்’ படித்துக் கொண்டிருக்கிறேன். Dmitri, Ivan, Alyosha, Illusha போன்றவர்களின் வாழ்க்கையை kaleidoscope-ஆக தஸ்தவ்யேஸ்கி எழுதிய புத்தகம். எழுதி 100 வருடங்களாகியும் பாத்திரங்களை நாம் எங்கோ சந்தித்த உணர்வு. ஆன்மிகம் பற்றிய தன் கருத்துக்களை/குழப்பங்களை/கண்டடைந்தவைகளைப் புததக வடிவில் கொண்டு வருவது அசாத்தியமான வேலை. தஸ்தவ்யேஸ்கி-க்கு அது சாதாரணமாக வருகிறது. ஒவ்வொரு கதாபாத்திரங்களும் அவரவர்கள் போக்கிலே செல்லும்போது சிலர் ஒரு புள்ளியில் சந்தித்து, உறவாடி, பகையாடி, விலகி பின் சேர்ந்து...இந்த நாவலைப் படிக்கும்போது அசோகமித்திரனின் ‘கரைந்த நிழல்கள்’ நினைவுக்கு வருகிறது.

Speaking of which...நேற்று தஸ்தவ்யேஸ்கி-யைக் கொஞ்சம் ஒதுக்கிவிட்டு ‘கரைந்த நிழல்கள்’ மீள்வாசிப்பு. ஒருமுறைப் படித்திருந்தாலும் அ.மி-யின் இந்த நாவல் என்னை மீண்டும் வாசிக்க வைத்தது சமீபத்திய 'அவுட்லுக்கில்’ படித்த விஷால் பரத்வாஜ் பற்றிய கட்டுரையாக இருக்கலாம். இதைத் தொடராக வெளியிட்ட காலத்தில் எத்தனைப் பேர் அதை ஈடுப்பாடுடன் படித்திருப்பார்கள் என்று தெரியவில்லை. ‘க. நி’ ஒரு முழுப் புத்தகமாகப் படிப்பதில் உள்ள மனநிலை வாரம் ஒருமுறையில் கொண்டு வரமுடியாது.

அ.மி. Hidden Humor இந்த நாவல் முழுவதும் தெளித்து விடப்பட்டுள்ளது. ‘மழை வரும்-னு காமிராவை முதல் நாளே வாங்கி வைக்கவில்லை’ என நடராஜன் சொல்ல, அடுத்த வரி ஒரு தனி பத்தியாக ‘வானத்தில் நிறைய நட்சத்திரங்கள் இருந்தன்’. கரம்சோவ் கதாபாத்திரங்கள் 100 ஆண்டுகளுக்குப் பிறகும் சந்த்தித்த உணர்வு இருக்கிறது என்று சொன்னேன். ‘க. நி’ அதில் நிச்சயம் சேரும்.

புத்தக அலமாரிகள் வாங்கிய பிறகு அவ்வப்போது வரும் மனநிலைக்கேற்ப ஏதோ ஒரு புத்தகத்தை எடுத்து ஒருசிலப் பக்கங்களை மேய்வது சுகம். வாங்கி வைத்தவைகளைப் பார்க்கும் போது, பரவாயில்லை என்று என்னுடைய புத்தகத் தேர்வைக் குறித்து நானே முதுகில் தட்டிக் கொள்ள முடிகிறது. மாலைமதியில் ஆரம்பித்த வாசிப்பு இன்று அமெரிக்க வரலாறு பற்றிய Oxford-ன் தொடர் புத்தகங்களும், இந்திய வரலாற்றின் 1857-ல் இருந்து India After Gandhi வரை புத்தக அலமாரியில் சேர்க்கும் வரை வந்திருக்கிறது. தமிழில் வலைப் பதிவுகள் முடிந்த வரையில் என் தமிழ் புத்தக must buy and must read வகைகளை அடையாளம் காட்டியிருக்கின்றன. எனி இந்தியன் புண்ணியத்தில் தொல்லை இல்லாமல் பாஸ்டனில் இருந்து வாங்கிவிட முடிகிறது.

தமிழில் வரும் புத்தக மதிப்புரைகள் மிகவும் குறைவு மற்றும் பின் தங்கியவை என்பது தெரிந்த ஒன்று. உதாரணத்திற்க்கு நேற்று வாங்கிய Freakonomics புத்தகத்திற்க்கு வந்த மதிப்புரைகள் ஏறத்தாழ 20-30. எழுதும் மதிப்புரைகளும் 90% தூர்தர்ஷனில் வரும் எதிரொலி கடிதத் தரம். கத்துவதற்கு பதிலாக நானாவது என் வலைப் பதிவில் மெழுகுவர்த்தி ஏற்றலாம் என்பது இப்போது மனதில் ஓடும் சிந்தனை.

கரமசோவ் முடித்த பிறகு அடுத்து என்ன என்பது தெரியாது. காந்தி என்னைப் படியேன் (Satyagraha in South Africa) என்று கேட்கிறார்.


Monday, April 27, 2009

Poor Banchee

On top of sphagetti
I'll cover with cheese...
I lost my poor Banchee,
When somebody sneeze

AA..choo...

As sung by Manasa ( We are still trying to find the meaning of 'Banchee' :) )

Down by the Bay...

Down by the Bay
Where the watermelons grow
Back to my home
I do not go.
Or if I do...
My mother will say:
"Have you ever seen camel wearing Pajamas?"
Down by the bay...

- As sung by Manasa

Monday, March 23, 2009

Paradise Now

பல நாட்களாக எழுத வேண்டும் என்று நினைத்து இன்று இதைப் பற்றி:

Paradise Now : இதைப் பற்றி Boston Globe-ல் படித்தவுடன் பார்க்க வேண்டியப் பட்டியலில் இருந்து, Netflix மூலமாகக் கிடைத்தது. 

மத்தியக் கிழக்கு நாடுகளின் மீது அராபியப் பாலைவனத்தைப் புகைப்படங்களில் பார்த்த நாள் முதலாக ஆர்வம் வந்தது.  பின் இஸ்ரேலின் 1970-80-களின் வீரச் செயல்கள் வாயிலாக.  பின் இயல்பாகவே வரலாற்றின் மீது வந்த ஆர்வம் மேற்கத்தியப் புத்தகங்கள் வழியே.  படித்த வரையில் இஸ்ரேல் கண்ணோட்டத்தில் கிடைத்தப் புத்தகங்களே அதிகம்.

இந்த நிலையில்  The Angry Arabs என்ற புத்தகம் நூலகத்தில் கிடைத்தது.  அராபியர்கள் கண்ணோட்டத்தில் இஸ்ரேலியப் பிரச்சினையை அலசியது.  ஏன் அராபியர்களால் இஸ்ரேலை ஒப்புக் கொள்ள இயலவில்லை (1970-களில் எழுதப்பட்டது) என்பதை ஆசிரியர் தீர்க்கமாக வாதம் புரிந்திருந்தார்.

இதன் பிறகு பாலஸ்தீனப் போராட்டத்தை மிக அற்புதமாகக் காட்டிய Tom Friedman-ன் From Beirut to Jerusalem புத்தகம்.  இன்றும் மத்தியக் கிழக்கு புத்தகங்களுக்கு Bible என்று சொல்லலாம்.

அதுபோல படங்களின் வரிசையில் Paradise Now.

கதை: சயீத், காலித் நண்பர்கள்.  இருவரும் கார் மெக்கானிக்குகள்.  West Bank-l உள்ள Nabulus நகரம் அவர்கள் வசிப்பிடம்.   ஒரு நாள் இருவருக்கும் அவர்கள் சார்ந்திருக்கும் அமைப்பிலிருந்து மகிழ்ச்சியான செய்தி வருகிறது.  அவர்கள் Tel Aviv-ல் மனித வெடிகுண்டுகளாக வெடிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

அதன் பின் நட்க்கும் 36 மணி நேர நிகழ்வுகள் கதை.

சயீதை சுஹா என்ற பெண் ஒருதலையாகக் காதலிக்கிறாள்.  சயீத் தான் ஒரு நாள் மனித வெடிகுண்டாகப் போகிறோம் என்பதால் அவளைத் தவிர்க்கிறான்.  சயீதின் இறந்தகாலம் அவனை தீவிரமாக அந்தப் பாதையில் செலுத்துகிறது.


சயீதும், காலீதும் வீட்டில் சொல்லாமல் தலைமையகத்துகுச் சென்று குண்டுகள் பொருந்திய உடையை அணிந்து, யூதர்கள் போல வேடமிட்டு இஸ்ரேல் எல்லையைக் கடக்க முயலுகிறார்கள்.  கடக்கும் நேரம் எல்லைப் பாதுகாப்பு படையின் கண்களில் பட்டு விட, நடக்கும் களேபரத்தில் சயீத் இஸ்ரேல் பக்கமும், காலீத் West Bank பக்கமும் பிரிந்து விடுகின்றனர்.

காலீத் அவர்களின் தலைவனிடம் இதை தெரிவிக்க, தலைவன் குண்டு வெடிப்பைத் தள்ளிப் போடுகிறான்.  இதனிடையில் சுஹாவுக்கு இவர்களின் செயல்கள் தெரிய, அவள் காலீதுடன் வாதம் செய்து அவனின் மனதை மாற்றுகிறாள்.  இருவரும் சயீதைத் தேடி அலைகிறார்கள்.

சயீத் இஸ்ரேல் எல்லையிலிருந்து West Bank-னுள் நுழைந்து ஒரு இடுகாட்டில் ஒய்வாக இருக்கும்போது காலீதும், சுஹாவும் அவனிடம் வேண்டாம் என்று மன்றாடுகிறார்கள்.  சயீத் மறுத்து அவனின் தலைவனைப் பார்க்கப் போகிறான்.

படத்தின் மிக முக்கியமான கட்டம் என்று இதனைச் சொல்லலாம்.  தலைவன் சயீத் கடமையிலிருந்து தவறி விட்டான் என்று குற்றம் சாட்ட, சயீத் இன்னும் ஒரு வாய்ப்பு வேண்டும் என்று கேட்கிறான்.  அப்போது சயீத் தலைவனிடம், எப்படி ஒரு தேசம் பாதிக்கப்பட்டதாகவும் அதே சமயம் மற்றொரு இனத்தவரை கொடூரமாக அடக்கியாள்வதாகவும் இருக்கும் என்று புரியவில்லை என்கிறான்.

தலைவனை மனம் மாற்றி, மீண்டும் சயீத், காலீத்துடன் இஸ்ரேலுக்குள் போகிறான்.  இறுதியாக ஒரு பயணிகள் பேருந்தில் உடலைச் சுற்றிய வெடிகுண்டுடன், பிண்ணனியில் சில இராணுவ வீரர்கள் அமர்ந்திருக்க சயீத் காமிராவைப் பார்ப்பதோடு முடிகிறது.
 
கதையின் ஆரம்பத்தில் நடக்கும் வாதம் மத்தியக் கிழக்குப் பிரச்சினையைப் புரிய வைப்பதைப் போன்று தலையணைப் புத்தகங்களும், வெட்டிப் பேச்சு அறிஞர்களும் புரிய வைக்கவில்லை:

வாடிக்கையாளர்: என்னப்பா சயீத், முன் பக்கம் மட்கார்டு கோணலாக இருக்கே?

சயீத் (காரை உற்றுப் பார்த்தப்படி): இல்லீங்களே...

வா: அடப் போப்பா, சரியாப் பாரு.

(இப்போது காலீத்தும் பார்க்கிறான்)

காலீத்: மட்கார்டு ஒழுங்காத்தாங்க இருக்கு...கீழ தரைதான் கோணலா இருக்கு.

வா(சினத்துடன்): யோவ்...கிண்டலா?  தரையா கோணல்?  நீ கோணல், உங்கப்பன் கோணல்...

காலீத் கோபப்பட்டு ஒரு கல்லைக் கொண்டு வந்து காரின் முன் பக்கத்தை உடைக்கிறான் (உண்மையாகவே அவனின் தந்தையாரின் கால் ஊனம்). 

இதுதான் இன்று மத்தியக் கிழக்கில் நடந்துக் கொண்டிருக்கிறது...  காரை பாலஸ்தீனமாக உருவகம் செய்தால்.

படம் முழுக்க இது மாதிரியான கரிய அங்கதம் நிரவிக் கிடக்கிறது.

மற்றொரு காட்சியில் வெடிகுண்டுகளைக் கட்டுவதற்கு முன் தலைவன் அவர்களின் வீர உரையை வீடியோவில் பதிவுசெய்ய முயற்ச்சிக்கிறான்.  காலீத் உணர்ச்சி ததும்ப ஒரு கையில் துப்பாக்கியுடன் பேசி முடிக்க, கேமிரா மேன் தலையை சொறிய:

காலீத்: என்னய்யா?
கா. மே: நீ பேசினது எதுவும் பதிவாகலே, பாட்டரி தீர்ந்துடுச்சு.

சிரிப்பதா, அழுவதா என தெரியாமல் காலீத்...

சயீத்தையும் , காலீத்தையும் எல்லைக்குக் கூட்டிச் செல்லும் நண்பரிடம்:

காலீத்: வெடிகுண்டு வெடிச்சதும் என்ன ஆகும்?
நண்பர்: உங்களை தேவதை வந்து அழைத்துச் செல்லும்.
காலீத்: தேவதை வரும்னு உங்களுக்கு எப்படித் தெரியும்?
நண்பர் (யோசித்துவிட்டு): கேள்விப் பட்டுருக்கேன்.

இதைப் போல படம் நெடுகிலும் பாலஸ்தீனியத் தரப்பு கேள்விக்குட்படுத்தப் படுகிறதென்றால் இஸ்ரேலின் இருப்பு அங்கங்கே சாலைகளை மறித்து நிற்கும் இராணுவ கனரக வாகனங்களின் வழியே மூச்சு முட்ட வைக்கிறது.

கதைக்குள் கதையாக சயீதின் பிடிவாதம், அவனின் தாயார் அவனின் தந்தையைப் ப்ற்றிப் புரியவைக்க முயலுவது, காலீதின் தந்தையின் காலை இஸ்ரேலிய இராணுவம் முறிப்பது (’எந்தக் காலை நான் முறிக்கலாம் என்று நீயே முடிவு செய்து சொல்’), அமைப்பின் நண்பரின் மென்மையான குரல், சுஹாவின் காதல் போன்றவை திறமையாக ஊடுருவுகின்றன.

சயீதின் தீர்க்கமான, கேள்விகள் நிரம்பிய கண்கள் படம் பார்த்து கொஞ்ச நாட்களுக்கு சங்கடப்படுத்தும்.

பி.கு: கதாபாத்திரங்கள் பேசுவதை அப்படியே எழுதாமல் சிறிது மாற்றியிருக்கிறேன்,  மூலப் பொருள் சிதையாமல்.

Curt Schilling

நன்றி ஷில்லிங்.

இன்று கர்ட் ஷில்லிங் பேஸ்பால் விளையாட்டுகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார்.  Red Sox அணியில் மிகச் சிறந்த பந்து வீச்சாளர்.  

தோளில் காயம் பட்டதனால் சென்ற வருடம் விளையாடவில்லை.  இறுதிப் போட்டியில் Red Sox மிகக் கடுமையாக போரிட்டுத் தோற்ற போது இவர் இல்லாத்து மிக நன்றாகத் தெரிந்தது.

2004-ல் Red Sox தோல்வியின் அருகில் இருந்தபோது, காலில் சிகிச்சை முழுமையாக அடையாமல் இரத்தக் கசிவுடன் Yankees-க்கு எதிராக பந்து வீசியபோது, New England முழுவதும் அடைந்த கிளர்ச்சி சொல்ல இயலாது.  Red Sox அதன் பிறகு ஒரு விதமான வெறியுடன் விளையாடி அந்த வருடக் கோப்பையை வென்றது ஷில்லிங்கால் என்று சொல்லலாம்.

பேஸ்பாலில் அவரின் போராடும் குணம் என்றும் மேற்கோள் காட்டப்படும்.

Thank you for everything Curt.

Sunday, July 27, 2008

Missing

இளமையில் இறப்பது கொடியது. அதிலும் பெற்றோர் மகனையோ, மகளையோ இழப்பது அதனினும் கொடியது. இறந்த மகன்/மகள் இயற்கையாக இறக்காமல் விபத்தில் அல்லது கொடூரமாக சிதைக்கப்பட்டு இறப்பது...


'பிறவி' திரைப்படம், ஈச்சுர வாரியாரின் 'ஒரு தந்தையின் நினைவுக் குறிப்புகள்' புத்தகம் மேற்கண்ட வலியைப் பேசும் சில உதாரணங்கள். தமிழ்த் திரைப்படங்கள் இதை இயல்பாகக் கையாண்டதில்லை (அதிலும் சிவாஜியை நடிக்க வைத்து பார்ப்பவர்களைக் கொடுமைப் படுத்துவார்கள்).


Missing என்ற ஆங்கிலப் படம் காணாமல் போன ஒரு நிருபரை (சார்லி) அவனின் மனைவியும், தந்தையும் தேடும் கதை. சாரு நிவேதிதா 'கலகம், காதல், இசை' புத்தகத்தில் 'விக்தர் ஹொரா' என்ற சிலே பாடகரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியிருப்பார் (அவரின் 'திரிலோக்புரி' என்ற தரமான கதையோடு இந்த வாழ்க்கை வரலாறும் அனுபவித்து வலியுடன் எழுதப்பட்டிருக்கும்).


விக்தர் சிலேயில் 'பினோசெட்' என்ற இராணுவ ஜெனரல் பதிவிக்கு சி.ஐ.எ துனையோடு வந்தபோது கொல்லப்பட்டவரில் ஒருவர். Missing கதையும் சார்லி அவ்வாறு சிலே அரசாங்கத்தால் கொல்லப்பட்டதை விவரிக்கிறது.
சார்லி சிலேயில் தன் மனைவியுடன் தங்கி ஒரு இடது சாரி பத்திரிகையில் எழுதுபவன். Vina என்ற இடத்திற்கு ஒரு நாள் சுற்றுப் பயணம் செல்கையில் பினோசெட்-இன் படைகள் அந்த இடத்திலிருந்து கலகத்தை ஆரம்பிக்கின்றன. அங்கு தங்கியிருக்கும் சில அமெரிக்க அதிகாரிகளிடம் பேசுகையில் அவனுக்கு அவர்களின் பங்குகள் குறித்து சந்தேகங்கள் வர ஆரம்பிக்கின்றன. பல அப்பாவி மக்கள் கலகக் குண்டர்களால் கொல்லப்படுவதை காண்கிறான். அமெரிக்கர்கள் மூலமாக கலகப் படைகளின் பார்வை இவன் மீது படிகிறது.


மீண்டும் தன் மனைவி(பெத்) இருக்கும் இடம் வந்த மறுநாள் காணாமல் போகிறான். அவனின் தந்தை (எட்வர்ட்) சிலே வருகிறார். இவர் மிகத் தீவிரமான கிறித்தவர். தன் மகன் மற்றும் மருமகளின் சுதந்திர மனோபவத்தை எதிர்ப்பவர். தன் மகன் ஒன்றுக்கும் இலாயகில்லாதவன், அவனின் மனைவியும் அவ்வாறே என்று நினைப்பவர். சிலேயில் வந்ததிதிலிருந்து அவருக்கும் பெத்-ற்கும் தகராறு. பெத் இவரின் வருகையை வெறுக்கிறாள். 'எதற்காக வந்து என் உயிரை வாங்குகிறாய்?' என்று முகத்தில் அறைவது போலக் கேட்கிறாள்.


எட்வர்ட் சந்திக்கும் அமெரிக்க தூதரக அதிகாரிகள் விரைவில் மீட்டுவிடலாம் என உறுதி அளிக்கிறார்கள். ஆனால் நாட்கள் செல்ல செல்ல அது வடிக்கட்டிய பொய் என எட்வர்டிற்கு புரிகிறது. பெத் எட்வர்ட் வருவதற்கு முன்பே பல முயற்சிகள் மூலம் அந்த முடிவிற்கு வருகிறாள்.


இதனிடையில் அவருக்கு பெத்துடன் நல்லுறவு மலர்கிறது. முதல் முறையாக அவளின் போராடும் குணமறிந்து மதிக்கிறார். அமெரிக்க வாழ்க்கையைத் தவிர வேறு உலகங்களும் இருக்கின்றன என்பது புரிகிறது.


பல தொடர்புகள் மூலம் அவர் மகன் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டான் என்று தெரிய வருக்கிறது. அதிலும் எட்வர்ட் ஆழ்ந்த நம்பிக்கை வைத்திருக்கும் அமெரிக்க அரசாங்கம் இதற்கு உடந்தை என்றும் அறிகிறார்.


உடைந்த மனதுடன் பெத்தும், எட்வர்டும் ஊர் திரும்பி கிசிங்ஜர் உட்பட ஏழு அரசாங்க அதிகாரிகள் மீது வழக்கு தொடர்கிறார்கள். போதிய ஆதாரமின்மையால் தோல்வியுறுகிறது.


சார்லியின் உடல் ஏழு மாதங்கள் கழித்து அமெரிககா திரும்புகிறது (உடல் பரிசோதனை நடந்தாலும் எவ்வாறு இறந்தான் என்பதை அறிய முடியாத வண்ணம்).


இது உண்மைக் கதை. சார்லி தான் கண்டதை, கேட்டதை குறிப்புகளாக எடுத்து வைத்திருந்தார். அதை அடிப்படையாக வைத்து புத்தகம் பின் திரைப்படமாக உருவெடுத்தது. திரைப்படத்தில் சிலே நாட்டின் பெயர் வருவதில்லை. படம் வந்த வருடம் 1982. பினோசெட் பதவியில் இருந்தார். ஆனால் பல காட்சிகள் வழியே மறைமுகமாக சொல்லப்பட்டுவிடுகிறது.


திறமையான இயக்கத்தில் (Costa Gavras எனற கிரிஸ் நட்டு இயக்குனர்.) கலகக்காரர்களின் இரும்புப் பிடி நாஜி ஜெர்மனியை நினைவூட்டுகிறது. நடு வீதியில் நடக்கும் படுகொலைகள், இளைநர்களைப் பிடித்து மொத்தமாக தீர்த்துக்கட்டுவது, ஆள் மறைவு போன்றவை திறமையான காட்சிகள் மூலம் இயக்குனர் காட்டுகிறார் குறிப்பாக:

a) சார்லி, மற்றும் பெத் இருவரும் ஊரடங்கு உத்தரவுக்குப் பின் தனியே தெருவில் மாட்டிக்கொள்வது,.

b) பெத் மற்றும் எட்வர்ட் பிணக்கிடங்கில் தேடும்போது அந்த அதிகாரி சலனமே இல்லாமல் ஒவ்வொரு அறையிலும் உள்ள நூற்றுக்கணக்கான சடலங்களை எது அடையாளம் காணப்பட்டது எது காணப்படவில்லை என விவரிப்பது.


ஒரு இடத்தில் எட்வர்ட் நடக்கும் வன்முறைகளைக் காணச் சகிக்காமல் 'What part of world is this?' என்பார்.


இன்று இலங்கையிலும், மோடியின் குஜராத்திலும் கேட்க வேண்டிய கேள்வியும் கூட.


பின் குறிப்பு: இந்தப் படத்தின் முழுத்தாக்கத்தையும் பெற முன் குறிப்பிட்ட சாரு-வின் கட்டுரையைப் படிப்பது நல்லது.

Tuesday, March 28, 2006

பத்து புத்தகங்கள்

இரவு(The Night) - எலீ வீசல்
அதிகாலை(The Dawn) - எலீ வீசல்
காடு - ஜெயமோகன்
ஏறக்குறைய சொர்க்கம் - சுஜாதா
Delhi - குஷ்வந்த் சிங்
அசோகமித்திரன் கட்டுரைத் தொகுப்பு
The feast of the goat- மரியோ வார்கஸ் லோஸா
From Beirut to Jerusalem - டாம் ப்ரீட்மன்
சில நேரங்களில் சில மனிதர்கள் - ஜெயகாந்தன்
A fine balance - Rohinton Mistry

Tuesday, January 10, 2006

நியூயார்க்கர் திரை விமர்சனங்கள்

நியூயார்க்கரில் 1990 - முதலான ஆங்கிலத் திரைப்பட விமர்சனங்களைத் தொகுத்து வைத்துள்ளனர். ஹாலிவுட் பிரம்மாண்டங்களைப் பார்த்து வாய் பிளந்த படங்களின் கறாரான விமர்சனங்களைப் படிக்கும்போது, 'இந்தப் படங்களையா நாம் பார்த்து அதிசயப்பட்டோம்' என நினைக்க வைக்கிறது.

இவர்களைத் தமிழ்ப் படங்கள் பார்க்க வைக்க வேண்டும் :).

Wednesday, December 14, 2005

கங்கூலி சகாப்தம்

இன்று இந்திய கிரிக்கெட் வாரியம் சவுரவை அணியிலிருந்து நீக்கியிருக்கிறது. இனி அவருக்கு வாய்ப்பு வருமா என்பது தெரியவில்லை. டால்மியா அணி தோல்வியடைந்த நாட்கள் முதலாக கங்கூலியின் தலைக்கு கத்தி இருந்தது.

ஊடகங்களில் இவரது நீக்கம் பற்றி அதிகமாகக் கண்டனங்களே எழுந்துள்ளன. முந்தைய அணித்தலைவர்களின் மென்மை அணுகுமுறையினால் துவண்டுக் கிடந்த அணியை தன் போராட்டக் குணங்களால் தூக்கி நிறுத்தியவரை இவ்வாறு வீட்டுக்கு அனுப்ப வேண்டியதில்லை என்பதே அவைகளின் சாராம்சம்.
ஆனால் கங்கூலியே தனக்குக் குழி வெட்டிக்கொண்டார். க்ரெக்-ஐ எதிர்த்து ஜிம்பாப்வேயில் அரசியல் செய்து முதுகெலும்பில்லாத வாரியத் தலைவர் க்ரெக் புறம் கூறினார் என சொல்லும் அளவு கங்கூலி விளையாடினார். இந்திய சூழலில் இது ஒரு சாபக்கேடு. தலைவனாக அறியப்பட்டவன் சொல்லும் வார்த்தைகளை அப்படியே எடுத்துக் கொண்டு மற்றவர்களும் உளறுவது.

ஆனால் க்ரெக்-இன் உணர்ச்சி வயப்படாத அணுகுமுறை காட்சிகளை மாற்றியது. பதட்டமடைந்த சவுரவ், தனக்கு டென்னிஸ் எல்போ என சாக்கு சொல்லி, டென்டுல்கர் அளவு தனக்கும் மரியாதைக் கிடைக்கும் என எதிர்ப்பார்த்தார். இல்லை. உடனே உள்ளுர் போட்டிகளில் கலந்து கொண்டு ஒழுங்காக விளையாட முயன்றார். தோல்வி. தொடர்ந்த நிகழ்ச்சிகளில், இதோ, மூட்டையைக் கட்டிக் கொண்டிருகின்றார்.

என்னைப் பொறுத்தவரையில் இந்திய அணித் தேர்வாளர்கள் சரியான திசையை நோக்கியே செல்கிறார்கள்(அரசியல் இருப்பினும்). பழையப் பெருமைகளுக்காக இன்னும் அணியில் ஒட்டிக்கொண்டு உதவாமல் இருப்பவர்களைக் கழற்றி விடப்படத்தான் வேண்டும். தனி மனித வழிப்பாடுகளுக்கு கிரிக்கெட்டில் இடமில்லை. அதற்கு டென்னிஸ் விளையாடலாம்.

இன்று படித்ததில் கிரிகினஃபோவில்(http://content.cricinfo.com/indvsl/content/story/229570.html) எழுதப்பட்ட கட்டுரை அறிவுப்பூர்வமாக, ரீடிஃப்பில் வடேகரின் செவ்வியில்(http://in.rediff.com/cricket/2005/dec/14wadekar.htm) டென்டுல்கரைப் பற்றிய பதில் சிரிப்பை வரவழைத்தது. ஆம்...அணியில் உள்ள வீரரால் அணி வெற்றிக்கு பங்கில்லையென்றால் விலக்கப்பட வேண்டும்...அது டென்டுல்கராக இருந்தாலும்.

Thursday, May 19, 2005

ஸ்டார் வார்ஸ்-3

அலுவலக நண்பர்கள் புண்ணியத்தில் இன்று மதியமே "ஸ்டார் வார்ஸ் 3" படம் பார்க்க முடிந்தது. அலுவலக தோழர் டேவிட் இரவு 12 மணி முதல் திரையிடலைப் பார்த்துவிட்டு மீண்டும் மதிய ஆட்டம் பார்க்க வந்திருந்தார்(ரஜினி ரசிகர்களுக்கு சரியான போட்டி).

"ஸ்டார் வார்ஸ்" வரிசையில் லூகாசுக்கு இதுவே இறுதிப் படம்(மற்ற எவருக்கும் இந்த அளவு பிரம்மாண்டம் எடுக்க துணிவு இருக்கும் என தோன்றவில்லை). படம் அனகின் ஸ்கைவாக்கர் எவ்வாறு தீயசக்திகளின் பக்கம் சாய்ந்து 'டார்த் வேதர்' ஆனான் என்பதை சொல்கிறது.

1977-ல் இப்படத்தின் முதல் பகுதி வந்தபோது, உலகமே பைத்தியம் பிடித்து அலைந்தது. கதை என்னவோ ரொம்ப சாதாரணம்தான். கொடுங்கோலரசரை வீழ்த்த புரட்சிக் குழுக்கள் முயல்கின்றன. அவர்களுக்கு உண்டாகும் அனுபவங்கள் மூன்று படங்களாக 1983 வரை வந்தன.

படத்தின் உயிர் நாடி "டார்த் வேதர்" எனும் வில்லன். இவனின் உருவ அமைப்பு நடுங்க வைக்கும் என்றால், குரலோ கேட்பவரைச் சில்லிட வைக்கும்(குரல் கொடுத்தது ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ்). இவனுக்கும் கதை நாயகனான லூக் ஸ்கைவாக்கருக்கும்(ஆம்...இவன் டார்த்தின் மகன் தான்) நடக்கும் யுத்தம்தான் படத்தின் முக்கிய காட்சிகள்.

பிரம்மாண்டம் என்பதற்கு அர்த்தம் கொடுத்தவை ஸ்டார் வார்ஸ்தான். நகைமுரண் என்னவென்றால், முதல் படத்தைப் பார்த்த வினியோகஸ்தர்கள் 'இது உருப்படாது' என முடிவு செய்ய, அங்கிருந்த ஸ்பீல்பர்க் மட்டும் இது ஹாலிவுடின் திருப்புமுனைப் படம் என சரியாகக் கணித்தார். இப்படங்களுக்கு லூகாஸ் பட்ட சிரமங்களை ஒரு பெரியப் புத்தகமாகப் போடலாம்.

1983க்குப் பிறகு லூகாஸ் "டார்த் வேதர்" கதையை எடுக்கத் திட்டமிட்டார். 1997-ல் முதல் படம் வந்தது. அதில் ஆனகின் ஒரு பொடியனாக பல சாதனைகளைச் செய்து, பெரிய வீரனாவதற்கு அடிப் போடுகிறான். இரண்டாவது படத்தில் இராணி 'பட்மே'வின் மனதில் இடம் பிடித்து 'ஜெடாய்' எனும் சிறப்பு வீரனாகிறான்.

இன்று(19 மே) வெளிவந்திருப்பது வரிசையில் இறுதி. முதல் 20 நிமிடங்கள் நடக்கும் போரில் கடத்தப்பட்ட ஜனாதிபதியை ஆனகினும், அவனது குருவான 'கெனோபி'யும் மீட்கின்றனர். நாடு திரும்பும் ஆனகின் தான் தந்தையாகப் போவதை அறிகிறான. அந் நிலையில் அவன் காணும் கனவில் அவன் காதலி பிள்ளைப் பேற்றின்போது உயிர் துறப்பதை அறிகிறான். ஏற்கெனவே, அவனது அன்னை விஷயத்தில் அவன் கண்ட கனவு நடந்ததால் இது அவனுக்கு மிக்க அச்சத்தைக் கொடுக்கிறது. எப்படியாவது தன் காதலியைக் காப்பாற்றத் துடிப்பதை ஜனாதிபதி உபயோகப் படுத்திக் கொள்கிறார். அவனது குருவோ அவனைக் காப்பாற்ற முயல்கிறார். முடிவு தெரிந்த ஒன்றுதான் என்றாலும், வெள்ளித் திரையில் காண்க.

ஆரம்பத்திலிருந்து இறுதி வரை, மூச்சை நிறுத்துமளவிற்கு பிரம்மாண்டம். போர்க் கப்பல்கள் ஆகட்டும், நகரங்கள் ஆகட்டும், எடுத்துக் கொண்டப் பாத்திரங்கள் ஆகட்டும், இணை சொல்ல முடியாத அளவில் இப் படத்தைச் செதுக்கியிருக்கிறார்கள். ஆனால் இள "டார்த் வேதர்" ஆக நடித்திருக்கும் ஹேய்டன் கிரிஸ்டன்சென் ஏமாற்றம் அளிக்கிறார். சரியான தேர்வு இல்லை. இதையெல்லாம் கண்டுக்காதீங்க என படத்தின் கதையமைப்பும், காட்சிகளும் நம்மை உட்கார வைத்து விடுகின்றன.

தவற விடக்கூடாத படம்.

Thursday, March 24, 2005

கருணைக் கொலை

ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள ஒரு மருத்துவமனையை ஒட்டுமொத்த அமெரிக்காவே உற்று கவனித்துக் கொண்டிருக்கிறது. டெரி ஷியாவோ( Terri Schiavo) என்ற பெண்மணி கடந்த 15 வருடங்களாக மூளை செயலிழந்து போராடிக் கொண்டிருக்கிறார். அவரை மருத்துவர்கள் persistent vegetative state என்ற நிலையை அடைந்து விட்டதால் அவர் இனி உயிர் பிழைத்து நலமடைய வாய்ப்பே இல்லை என தெரிவித்து விட்டனர்.

டெரியின் நிலைக்குக் காரணம், 15 வருடங்களுக்கு முன் அவருக்கு பொட்டாசியம் குறைவாக இருப்பதாகத் தவறாகக் கணிக்கப்பட்டு, சிகிச்சையின் விளைவாக மாரடைப்பு நிகழ்ந்து, மூளையைப் பாதித்தது. அன்றிலிருந்து அவருக்கு எல்லாமே குழாய்கள் வழியேதான் - உணவு, தண்ணீர் அனைத்தும். பல சிகிச்சைகள் புரிந்தும் பலன் இல்லை.

டெரியின் கணவர் மைக், இதைக் காட்டிலும், 'கருணைக் கொலை'க்குத் தான் தயாராக இருப்பதாகவும், அதை தன் மனைவியும் ஒப்புக்கொள்வார் என அறிவித்து, அதை நீதிமன்றங்களிலும் தாக்கல் செய்தார். அவர் அமர்த்திய மருத்துவர்களும், மற்றும் டெரியை சோதித்த மற்ற மருத்துவர்களும் அதையே வழிமொழிகின்றனர். நீதிமன்றமும் குழாய்களை அகற்ற சம்மதித்து உத்தரவிட்டது.

ஆனால், டெரி வழி உறவினர்கள்(தாய், தந்தை மற்றும் பலர்) ஓப்புக் கொள்ள மறுத்து மேல் முறையீடு செய்ய, நீதிமன்றம், அவர்களின் முறையீட்டை மறுத்துவிட்டது.

மார்ச்- 18 ம் தினம் குழாய்கள் அகற்றப்பட்டு, டெரி தற்சமயம் எந்த உணவுப் பொருளும் இன்றி, அவரின் உயிர் சிறிது சிறிதாக வெளியேறிக் கொண்டிருக்கிறது.

அமெரிக்காவை இந் நிகழ்வு இரண்டாகப் பிரித்திருக்கிறது. Persistent vegetative state அடைந்தவர் இவ்வாறு துண்பப்படுவதை விட அவரை உயிர் துறக்க வைக்கலாம் என ஒரு அணியும் மற்ற அணி, இது கொலைக்கு ஈடானது எனவும் வாதாடுகின்றன.

டெரியின் பெற்றோர் எடுத்த படங்களில், டெரி கண்களை சுழற்றிப் பார்ப்பது, புன்னகை செய்வதும் தெரிகின்றன. அதை வைத்து, அவர்கள் அமர்த்திய மருத்துவர்கள், தகுந்த சிகிச்சையில் பிழைக்க வாய்ப்பு இருப்பதாகக் கருதுகிறனர். ஆனால் மற்ற மருத்துவர்களோ, இந்நிலையில் இருப்பவர்கள் தான் என்ன செய்கிறோம் என்பதையே அறியாதவர்களாக இருப்பார்கள், மேலும், அந்த படப்பிடிப்பில், மொத்தம் மூன்று மணி நேரத்தில் டெரியின் செயல்கள் சில விநாடிகளே என பதில் வாதம் புரிகின்றனர்.

அவர்கள் கருத்துப் படி, டெரிக்கு தற்சமயம் உணர்வு என்ற நிலையே இல்லை. அவருக்கு, வலி, கிலி, மகிழ்ச்சி, சோகம், தொடு உணர்வு அனைத்தும் அகன்றுவிட்டன. உணவு செலுத்தவில்லையென்றால், நாம் உணர்வது போல் பசியோ, தாகமோ எடுத்தாலும், அவரால் அதை உணர்வு பூர்வமாக அறிய இயலாது. அவரின் உடல், இதனால், நீரிழந்து, அவரின் சிறுநீரகங்கள் செயல் இழந்து சிறிது சிறிதாக உயிர் இழப்பார்-ஆனால் வலி என்ற உணர்வின்றி- என மருத்துவர்கள் கருதுகின்றனர்.

ஃப்ளோரிடா மாகாண ஆளுநர் ஜெப் புஷ் குழாய்களை அகற்றுவது தவறு என சட்டம் இயற்ற, நீதி மன்றமோ அச் சட்டம் செல்லாது என தடை செய்துவிட்டது. டெரியின் பெற்றோரும், தற்சமயம் அரசாங்கத்தையே நம்பி இருக்கின்றனர்.

அமெரிக்காவில் உயிலில் ஒருவர், இம் மாதிரி தனக்கு நிகழ்ந்தால் மற்றவர் என்ன செய்யலாம் என எழுதி வைக்கலாம். டெரி அவ்வாறு எழுதவில்லை. அவரின் கணவர் மைக் அவரின் காப்பாளர்(Guardian) நிலையில் இருப்பதால் நீதிமன்றம் அவரின் முடிவை ஆதரிக்கிறது. இவ்வழக்கின் விளைவால், பல அமெரிக்கர்கள் உயில் எழுத ஆரம்பித்து விட்டனர்.

அமெரிக்க அதிபர், டெரியின் வாழ்வை நீட்டிப்பதை ஆதரித்திருக்கிறார். ஆனால் நீதிமன்ற முடிவைப் பற்றி எதுவும் கூறவில்லை.

டெரிக்கும், அவரின் குடும்பத்தாருக்கும் நம் பிரார்த்தனைகள்.

வலைப்பதிவுகள்:
http://civilliberty.about.com/cs/humaneuthinasia/a/bgTerry.htm
http://abcnews.go.com/Health/Schiavo/story?id=531907&page=1
http://www.cnn.com/2005/LAW/03/18/schiavo.brain-damaged/

Thursday, February 10, 2005

மனத்துக்கண்?

இதுவரை எந்த முரண்பாடான செய்திக்கும், தனிப்பட்ட வலை நண்பர்களின் கருத்துக்களையும் விமர்சனம் செய்ததில்லை. ஆனால் மதி அவர்களின் வலைப்பதிவைப் படித்த பின் இதை எழுதத் தோன்றியது.

பா. ராகவன் நான் மதிக்கும் எழுத்தாளர். பல எண்ணங்களை ஆணித்தரமாக எடுத்து வைக்கும் முறை என்னைக் கவர்ந்தது. அதனால்தான் அவரின் இச்செய்கை என்னைக் குழப்புகிறது. அதைவிட வருத்தம் தந்தது, அவரின் மறுமொழி: 'எல்லா தமிழ் பதிப்பகங்களும் செய்கின்றன'(!?&^). இதை அவர் சொல்லியிருக்கும் பட்சத்தில், பொறுப்பான எழுத்தாளரின் பொறுப்பற்ற பதில். கருணாநிதி பாணி. உங்கள் ஆட்சியில் லஞ்ச ஊழல் தாண்டவமாடுகிறதே என கேள்வி எழுப்பினால், எம்.ஜி.யார் ஆட்சி என்ன வாழ்ந்தது, கேரளாவைப் பார் என உளறி, பேச்சைத் திசைதிருப்புவதற்கும், பாராவின் பதிலுக்கும் ஒன்றும் வித்தியாசம் இல்லை. ஆனால், கருணாநிதி சொன்னால் உளறல், பாரா பேசினால் வருத்தமே.

பத்ரியின் பொறுப்பான பதில் ஆறுதல்.